திங்கள், 10 நவம்பர், 2025

98. திருப்பிரிதி (ஜோஷிமட்)


 


  திருமங்கையாழ்வார்                                                                                     பெரிய திருமொழி 

வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே!         958 

      முன்பு இராமாவதாரத்தில் மிகவும் பலம் வாய்ந்தவர்களிடம் போரிடும் எதிரியின் பாதி ஆற்றலைப் பெற்றுக் கொள்பவனாய் இருந்த வாலியைச் சுக்ரீவனுக்காகக் கோதண்டம் என்கின்ற அழகிய வில்லை வளைத்து அம்பெய்தி அவனது சரீரம் சிதறுமாறு அழித்தாய்! பரிமள மணம் வீசும் குளிர்ந்த விசாலமான சோலையில் வசதியாகக் காட்சி தரும் சிறப்பான இமயத்தில் பெரிய காளமேகங்கள் அதிரா நின்று முழங்க சிறிதான தூற்றலுடன், தோகையுடன் பெரிய மயில்கள் ஏற முடியாத மலைகளின் கீழ் வயிறு உரசும்படி அவற்றின் உச்சியில் ஏறி நடனமிட, பரந்த சுனைகளையுடைய திருப்பிரிதி என்னும் இடத்தை மனமே! சென்றடைவாயாக! என்று கூறுகிறார் ஆழ்வார். பெருமான் பல இடங்களில் கோயில் கொண்டு இருக்கின்றபடியால் திவ்யதேசங்கள் திருமந்திரப் பொருளுக்கு எல்லைநிலமாக அமைந்துள்ளது என்ற கருத்து புலப்படுகிறது. 

கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய்ய அரு வரை அணை கட்டி
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம் இருந்த நல் இமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர்கூர
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே!     959

      மகா சமுத்திரமானது முழுவதும் கலங்கும்படி வானரக் கூட்டம் பெருமானுக்கு கைங்கர்யம் பண்ணுவதற்காக அசைக்க முடியாதவாறு உள்ள மலைகள் போன்ற கற்களை நளன் கையில் கொடுத்து, அக்கற்கள் கடலில் மூழ்கிவிடாமல் மிதக்குமாறு செய்து இலங்கைக்கு சேது அமைத்தான். வானரர்கள் கூட்டமாக இலங்கை அடைந்து இராவணன் உள்ளிட்ட அரக்கர் கூட்டத்தினரையும், அந்நகரத்தையும் தூளாக்கிய காகுத்தன் வாழும் சிறந்த பனிமலையில் அமைந்துள்ள, மலை போன்ற வலிமையுள்ள மிடுக்காகவும், கடுஞ்சினமும், வெற்றி நடையும் கொண்ட யானைகள் துன்பப்படும் குகைளை இருப்பிடமாகக் கொண்டு, வாள் போன்ற கூரிய பற்களையுடைய சிங்கங்கள் திரியும் திருப்பிரிதியை மனமே! சென்றடைவாயாக! என்று கூறுகிறார். இப்பாசுரத்தில் இராமபிரானின் பராக்கிரமத்தை ஆழ்வார் எடுத்துக் கூறி தன் மனத்தினை பெருமானுக்கு தூது அனுப்புகிறார். 

துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று இளங்கொடி திறத்து ஆயர்
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறைமிசை வேழம்
பிடியினோடு வண்டு இசை சொலத் துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே!   960 

      கும்பனென்னும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்சமும், உடுக்கை போன்ற நுண்ணிய இடையையும், சுருண்ட கூந்தலையும், பளபளக்கும் பல் வரிசையையும் கொண்ட இளங்கொடி போன்ற அழகிய நப்பின்னை பிராட்டிக்காக இடி போன்ற கொடிய உறுமலையுடைய ஏழு காளைகளையும், ஏழு திருவுருவங்கொண்டு ஒரே சமயத்தில் வலிந்து அடக்கி அதனை அழித்த வாசுதேவன் வசிக்கும் இனிய இமயத்திலுள்ள, இந்திர நீலமணிப் பாறைகளின் மேலே வாசனையுள்ள வேங்கை மரத்தின் உதிர்ந்த மலர்ப் படுக்கையில் ஆண் யானைகள், பெண் யானைகளோடு வண்டுகள் கர்ணாமிருதமாக இன்னிசைபாட துயில் கொள்ளும் திருப்பிரிதியை மனமே! சென்றடைவாயாக! என்று கூறுகிறார் ஆழ்வார். 

மறம் கொள் ஆள் அரி உரு என வெருவர ஒருவனது அகல் மார்வம்
திறந்து வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக் கிடந்து அருகு எரி வீசும்
பிறங்கு மா மணி அருவியொடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே!        961 

      சினமுடைய, அஞ்சி நடுங்கும்படியான நரசிங்கமாய் வடிவமெடுத்து, தேவர்கள் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் பல கொடுமைகள் புரிந்த வீரனில் ஒப்பற்றவனான அசுரன் இரண்ய கசிபுவை வாசற்படியில் தன் மடிமீது வைத்து தன் திருக்கைகளில் உள்ள கூரிய நகங்களைக் கொண்டு அவனது விசாலமான மார்பைப் பிளந்தார் எம்பெருமான். அந்தப் பயன் கருதி தேவர்கள் தங்கள் மணிகளடங்கிய கிரீடங்களோடு அவரது திருவடியை வணங்கினார்கள்.  அத்தகைய பரம புருஷன் யோகநித்திரை செய்யும் விலக்ஷணமான இமயப் பனிமலையில் பன்றிகள் தலை தாழ்த்தி தன் வளைந்த கொம்புகளால் மலையை முட்டுகின்றன. அம்மலைகள் பிளந்து ஒளிவீசும் மாணிக்கத் தாதுக்கள் அருவி வெள்ளத்துடன் கலந்து வருகின்றன. என் மனமே! அந்தத் திருப்பிரிதிக்கு நீ சென்றடைவாயாக! என்று கூறுகிறார் ஆழ்வார். 

கரை செய் மாக் கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை அலர்மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து
வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே!       962 

      ஆபரணங்களான தண்டையும், சிலம்புகளும் ஒலிக்கும் பெருமானின் அழகிய திருவடிகளை நான்முகன் முதலான பிரம்மாதி தேவர்கள் வணங்குகிறார்கள். தனக்குத் தானே கரை ஏற்படுத்திக் கொண்ட பெரிய பாற்கடலில் க்ஷீராப்திநாதனாகப் பள்ளிகொண்ட திருமால், திருவரையில் சாத்தப்பட்ட மேகலையைத் தரித்திருக்கும் பெரிய பிராட்டியான மகாலட்சுமியோடு இமயப் பனிமலையில் வீற்றிருக்கிறார். மலை போன்ற வடிவமுள்ள பெரிய ஆண் யானைகள் குளிர்ந்த இளைய மூங்கில்களில் வளைந்த முழஞ்சுகளிலே மிகுதியாகவுள்ள முளைகளைப் பிடுங்கித் தேன் கூட்டிலுள்ள தேனில் தோய்த்து தன் இளம் பெண் யானைக்கு எவ்வித சிரமும் இல்லாதபடி வாயில் பிழியும் காட்சியினைக் கூறி, அத்தகைய திருப்பிருதிக்கு மனமே! நீ சென்றடைவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.      

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணைப் பள்ளிகொள் பரமா! என்று
இணங்கி வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற நிமிர்ந்து அவை முகில் பற்றி
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே!                                                                                                                                                                                                 963 

      தேவர்கள் அனைவரும் திரள் திரளாக ஒற்றுமையாக ஒன்றுகூடி ஆயிரம் படங்களையுடைய ஆதிசேஷன் என்ற படுக்கையில் நித்திரை செய்யும் பரந்தாமனை  பரமபுருஷனே! தேவரீர் திருப்பாற்கடலில் சேஷசயனத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமானே! என்று சாஷ்டாங்கமாக சேவத்து வணங்குகிறார்கள். பகவானோ மணிமுடிகளால் வணங்கும்படி இமயப்பனி மலையில் வந்து அருள் புரிகின்றான். அங்கு நறுமணம் மிக்க நீண்ட குருக்கத்திக் கொடிகளானவை ஆகாயத்தளவு சென்று மேகங்களைக் கொழு கொம்பாக பற்றி அவற்றோடு சண்டையிட்டு படர்ந்து அதனால் பூக்கள் மலரப்பெற்ற நந்தவனங்களில் வண்டுகள் தேனைப் பருகுவதற்காக ரீங்காரமிடுகின்றன. இத்தகைய இசை பாடும்படியான இந்த திருப்பிருதியை மனமே! நீ சென்றடைவாயாக! என்று ஆழ்வார் தன் மனத்தை வேண்டுகிறார். 

கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே!      964 

      அழகிய தாழ்வரைகளில் நெடிதுயர்ந்த வேங்கை மரங்கள் மேகங்களைத் தழுவினார்போல் செழித்து வளர்ந்துள்ளன. அவற்றைச் சுற்றி மிளகு செடிகளும் கொடிகளாகச் செழிப்பாகப் படர்ந்துள்ளன. பசுமையான கொல்லை நிலங்களிலுள்ள சிறுமலைகளில் போர் செய்யத் தயாராகப் புறப்படும் வேங்கைப்புலிகள் உலாவும் காட்சி காணப்படுகின்றன.  அழகிய மலர்கள் நிறைந்த சோலைகளில் இமயத்தில் இந்திராதி தேவர்கள் தடாகங்களின் துறைகளில் வந்து நீராடி, செங்கழுநீர், செண்பகம், இருவாட்சி, பாதிரி, புன்னை, குருக்கத்தி, கருமுகை, தாமரை என்னும் சிறந்த எட்டு வகையான மலர்களைத் தடாகங்களிலிருந்து பறித்து வந்து உன் திருவடிகளில் பக்தியுடன் சமர்ப்பித்து, ஆயிரம் திருநாமங்களை ஒருசேர ஓதி வணங்கி பெருமானிடம் நெருங்கி வேண்டுகின்றனர். எனவே மனமே! திருப்பிருதிக்குச் செல்வாயாக! என்று தன் மனத்தை வேண்டுகிறார். 

இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசி அது கூர
அரவம் ஆவிக்கும் அகன் பொழில் தழுவிய அருவரை இமயத்து
பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே!      965  

      இராப்பொழுதில் விஞ்சி இருள் அதிகரிக்கப்பெற்ற மலை முழஞ்சுகளில் பெரும்பசி உண்டாக குகைளில் உள்ள மலைப்பாம்புகள் சோலைகளின் மலர்களில் வரும் பரிமள மணத்தை சுவாசித்துக் கொண்டு பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கும்; உட்புறத்திலுள்ள சோலைகளோடு ஏறுவதற்குக் கடினமான மேடு பள்ளமான தாழ்வரையைக் கொண்டிருக்கும் நிலங்களையுடைய இமயமலையில் நித்திரை செய்யும் உன்னை தேவர்கள் பலவாறு துதிக்கிறார்கள். நான்முகனோடு கூடச்சென்ற  பரமன் என்றும் சகல ஜகத்காரணபூதா என்றும், காளமேகஸ்யாமளா என்றும், பரமபுருஷன் என்றும், ஆதிமூலமே என்றும், குளிர்ந்த மேகம் போன்ற வடிவுடைய எம்பெருமானே! என்றும் போற்றி பிரம்மாவோடு உன்னை வணங்குகிறார்கள். அந்த பேற்றினைப் பெற்ற திருப்பிருதியிலே மனமே! நீ போய் அடைவாயாக! என்று கூறுகிறார் ஆழ்வார். திருப்பிருதி பகவானை வேண்டினால் முன்வினைப் பாவங்களை நீக்கி விடுவான் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும். 

ஓதி ஆயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே        966 

      பகவனுடைய ஆயிரம் நாமங்களையும் வாயால் துதித்து அதன் அர்த்தங்களை மனதார அநுசந்திப்பவர்களுக்கு அதனால் சர்வேஸ்வரே ரக்ஷகன்! என்று நெஞ்சில் நிறுத்தியவர்களுக்குப் பழைய வினைகளால் உண்டாகும் துயரங்கள் மீண்டும் வராமல் எப்போதும் நமக்கு நித்யானந்தத்தை அருளும் பரந்தாமன் எழுந்தருளியிருக்கும், சிறந்த இமயப் பனிமலையில் மகரந்தம் நிறைந்துள்ள அசோக மலர்கள் விரிந்து மலர்கின்றன. அந்த நெருப்பு போன்ற அழகைப் பார்த்து அறிவற்ற வண்டுகள் அது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பென்று அஞ்சி பிறகு அச்சம் ஒருவாறு தணிந்து அது நெருப்பல்ல அசோகமலர் என்று நிதானித்து மீண்டும் காற்றில் அம்மலர்கள் அசைந்தாடும் போது தீச்சுவாலை என்றெண்ணி மீண்டும் அஞ்சி, இவ்வாறு அஞ்சுவதும் பின்பு அஞ்சாமல் இருக்கும் நிலையில் தவிக்கும் இடமான  திருப்பிருதியை மனமே! நீ சென்றடைவாயாக! என்று வேண்டுகிறரார் ஆழ்வார். 

கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு பிரிதி எம் பெருமானை
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர் கலியனது ஒலி மாலை
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அரு வினை அடையாவே      967     

      பரிபூரண நீரினைக் கொண்டுள்ள கறுத்த பெரிய மேகங்களின் கூட்டம் நீர்கனத்தினால் திரிய மாட்டாமல் ஓரிடத்தில் இருந்துகொண்டு எங்கும் போகாமல் கர்ஜிக்க அதன் பெரு ஓசையைக் கேட்டு தனது கம்பீரத்தையும் பெருமையையும் கொண்ட பருத்த மலைப் பாம்புகளானவை அதைக் கேட்டு நமக்கு இறையாக யானைகள் வருவதாக நினைத்து மலைப் பேர்ந்தாற்போல் பெயர்ந்து அருகில் வருவதாக எண்ணி அசைகின்றன. ஒருசில பாம்புகள் அஞ்சி ஓடி மறைந்தாலும் சில பாம்புகள் அதனை விழுங்கும் நிலையில் தயாராக உள்ளது என்று கற்பனையாகக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய திருப்பிருதியில் கோயில் கொண்டுள்ள பரம புருஷனைக் குறித்து, அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையில் உள்ளவர்க்குத் தலைவரான திருமங்கையாழ்வார் பாடிய இச்சொல்மாலையினை அருமையான இசையில் பாடவல்ல சிறந்த விலக்ஷணமான தொண்டர்களைக் கொடிய வினைகள் தாக்காது என்று கூறுகிறார். 

வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இருஞ்சோலை மேவிய எம் பிரான்
திண் கை மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே!        1022 

       வள்ளலாகவும், அசுரத் தலைவனாகவும் இருந்த மகாபலியின் யாக சாலையில் பிரம்மச்சாரி வேடம் பூண்டு, மூன்றடி நிலம் யாசித்தவனும், ஏழு மரா மரங்களை ஒரே அம்பினால் துளைத்த வலிமை பொருந்தியவனும், எட்டுத் திருக்கரங்களோடு அட்டயபுரத்தில் காட்சி தருபவனும், இமயத்தின் திருப்பிருதியில் உறைபவனும்,  மாலிருஞ்சோலையில் அருள்பவனும், கஜேந்திரனின் துயர் துடைத்தவனுமான பகவான் உறையும் இடம் திருவேங்கடமாகும் என்கிறார் ஆழ்வார்.
      வேண்டியவர்க்கு தானம் செய்கின்ற அசுரத் தலைவனான மகாபலியின் யாகசாலையில் மூன்றடி மண் யாசித்தவன் பகவான். எட்டு கரங்களைக் கொண்டு அட்டபுயகரனாகக் காஞ்சியில் காட்சி தருகிறான். அத்தகையவன் திருவேங்கட மலையில் நின்று அருள்கிறான். மனமே! அவனை நோக்கிச் செல்வாயாக என்கிறார் ஆழ்வார். சூஷ்ம சரீரத்தில் வைரம் கொண்ட மனத்தை நாம் அடக்கிவிட்டால் அது நமக்கு பணியாளனாக  மாறிவிடும். தெய்வீக சக்தி கொண்டு மனத்தை அடக்க வேண்டும் என்பதே ஆழ்வாரின் கருத்தாகும்.  

பேய் முலைத் தலை நஞ்சு உண்ட பிள்ளையைத்
     தெள்ளியார் வணங்கப்படும் தேவனை
மாயனை மதிள் கோவல் இடைகழி
     மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை  இலங்கும் சுடர்ச் சோதியை
     எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை
காசினை மணியைச் சென்று நாடிக்
     கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே.         1641 

      பேய்ச்சியான பூதனையின் தனங்களிலுள்ள நஞ்சினை அருந்திய பாலகனை, தெளிவுமிக்க அறிவுடைய ஞானிகளால் போற்றி வணங்கப்படும் இறைவனை, திருமதில்களையுடைய திருக்கோவலூர் இடைக்கழியில் முதலாழ்வார்களிடையில் நின்றவனை, மாயவனை, வேதம் கற்ற அந்தணர்களின் நெஞ்சில் ஜோதியாய்க் குடி கொண்டவனை, நான் தளர்ந்து விழும் காலத்தில் எனக்கு நிதியாகவும், பொன்னாகவும், இரத்தினமாகவும் இருந்து உதவுபவனை, நாடிச் சென்று திருக்கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்! என்கிறார் ஆழ்வார்.
      பகவான் ஜோதி வடிவானவன். ஜோதியிலிருந்து உலகத்து உயிர்கள் தோன்றியுள்ளன. இந்த உயிர்கள் அனைத்தும் பகவான் என்ற ஜோதியில் ஐக்கியமாகி விடுகின்றன. நம்முடைய உடல் அழியக்கூடியது. ஆன்மா அழியாதது என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். வயதான காலத்தில் நம் உடல் தளர்ச்சியடையும்போது நாம் பகவானின் ஜோதி என்ற உண்மைத் தத்துவத்தை நமக்கு உணரச் செய்து, நம் தளர்வுகளை அகற்றி, நமக்கு முக்தி அளிக்கிறான். நம்மை ஆத்மா என்ற நிலையில் வைத்து பார்க்கும்போது நமக்கு எல்லையில்லா ஆற்றல் பிறக்கும் என்பதை ஆழ்வார் நமக்குத் தெளிவிக்கிறார்.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...