திங்கள், 10 நவம்பர், 2025

96. அயோத்தி

 


  பெரியாழ்வார்                                                                                    பெரியாழ்வார் திருமொழி 

முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப் பற        312 

      திருமுடியினைச் சூடி மூவுலகங்களான வானுலகம், பூவுலகம் மற்றும் பாதாள உலகம் ஆகியவற்றினைப் பரிபாலித்துக் கொண்டிருக்கும் எம்பெருமானான ஸ்ரீராமனின் தாசனான அடியேனுக்கு அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சித்ரகூடத்தில் இராமனிடம் வேண்டி அரசாள வருமாறு பரதன் பணித்தான். அப்பெருமானைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஒப்பற்ற குணங்களையுடைய பரதாழ்வானுக்கு ஆறுதல் கூறி அயோத்தியை அரசாளுமாறு எடுத்துரைதான். பரதன் வேண்டுகோளுக்கிணங்க தனது ஸ்ரீபாதுகைகளை அவனுக்கு அளித்தருளிய இராமபிரானைப் பாடிப்பற, அயோத்தியில் உள்ளவர்களுக்கு அரசனானவனைப் பாடிப்பற என்று இராமனைப் போற்றிப் பாடுகிறார் ஆழ்வார். 

தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம்
நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கு இடைச்
சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற   314 

      மணிமுடியுடன் மாலையிட்டு நாட்டினை ஆள்வதற்கான வயதில்லாத இளமை பிராயத்தையுடையவனான பரதனுக்கு அரச உரிமையினை அளிக்க வேண்டுமென்றும், இராமனைக் கானகம் செல்ல வைக்க வேண்டும் பிடிவாத எண்ணம் கொண்ட கைகேயினுடைய சொல்லை ஏற்றுக்கொண்டான் இராமன். அதன்படி தண்டகாரண்ய வனத்திற்குச் சென்று துவண்டுபோன இடையை உடையவளான  சூர்ப்பனகையின் காதினையும் மூக்கையும் அவள் கதறும்படி அறுத்த இராமபிரானைப் பாடிப் பற. அயோத்தியின் அரசனைப் பாடிப்பற என்று அருளியுள்ளார் ஆழ்வார். ‘அரக்கிமுக்கநீக்கிக் கரனோடு தூடணன்றேனுயிரை வாங்கி’ என்று குலசேகராழ்வாரும் இதனையே தமது பாசுரத்தில் எடுத்தியம்பியுள்ளார்.     

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன்தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற!         316 

      ஆழத்தின் மிகுதியால் கரிய கடலை கடந்து இலங்கை சென்று இராவணனை முடிப்பதற்காக திருவுள்ளம் பற்றி வானரசேனையுடனே கடற்கரையை அடைந்த இராமபிரான், கடலைக் கடந்து இலங்கை சென்ற பெருமான், யாரையும் மதியாத இலங்கை வேந்தனான இராவணனுடைய வைரங்கள் பதித்த ஒளிமிக்க கிரீடத்தைத் தரித்த அவனது பத்து தலைகளையும் அறுத்தெரிந்துக் கொன்றான். தன்னிடம் சரணடைந்த அவன் தம்பியான விபீஷணனுக்கு நெடுங்காலம் ஆளும்படி அந்த ராஜ்ஜியத்தை அவனுக்களித்து முடிசூட்டி வைத்தான். அத்தகைய பராக்ரமசாலியான ஸ்ரீராமனை எவ்வளவு காலம் பூஜித்தாலும் திருப்தியடையாத அமுதம் போன்றவனைப் பாடிப்பற! அயோத்தி மன்னனைப் பாடிப்பற! என்று பாடுகிறார் ஆழ்வார். 

வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேர் அணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ ! கேட்டருளாய்
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கைதன்னில்
சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்.         321 

      கச்சை அணிந்த  மார்புடைய பெண்பிள்ளாய்!  வைதேகிப் பிராட்டியே!  ஓர் விண்ணப்பம்.  தேர்களால் அலங்கரிக்கப்பட்ட  அயோத்தி மன்னனின்  பெருமைக்குத் தகுந்த தேவியே!  விண்ணப்பம் கேட்டருளவேணும்.  கூர்மை பொருந்திய  வேலாயுதத்தில் நன்கு பிரயோகிப்பதில் வல்லவனாகவும், ஓடம் விடுவதில் திறன் படைத்தவனும், ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவனும், ச்ருங்கிபோபுரத்தின் அதிபதியும், வேடர் தலைவனுமான  குகப்பெருமான் காணிக்கைகளோடு ஶ்ரீராமனை வணங்கி நின்றான். அவனை ஏற்றுக் கொண்ட இராமன் இதுவரை நாங்கள் நால்வராயிருந்தோம் இன்று உன்னுடன் சேர்த்து ஐவரானோம் என்று குகனை அணைத்துக் கொண்டார். சீர்மைமிகுந்த தோழமையைக் கொண்டதும் ஒரு அடையாளமாகும் என்கிறார் ஆழ்வார். 

மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக்கோன் உடன் இருந்து நினைத் தேட
அத்தகு சீர் அயோத்தியர்கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே.        325 

      மை போன்று கறுத்த, சிறந்த மலரைப் அணிந்த கூந்தலுடையவளாய் விதேஹராஜன் குலம்விளங்க வந்து அவதரித்தவளே! அடியேன் நினக்களிக்கும் விண்ணப்பத்தினைக் கேட்டருள வேண்டும். சுக துக்கங்களில் பெருமாளோடு ஒத்தவர் என்கின்ற புகழுடைவராய் வானரர்களுக்கு அதிபதியான சுக்ரீவன், பெருமாளுடன் கூட இருந்து நின்னைத் தேடுகைக்காக அந்நிலைக்குத் தகுதியான கல்யாண குணங்களையுடைய அயோத்தியில் உள்ளோர்க்கு ஸ்வாமியான பெருமாள் இவ்வடையாளங்களை எல்லாம் அருளிச் செய்தார். அடியேன் விண்ணப்பம் செய்த அடையாளங்கள் அனைத்தும் இந்தப் பிரகாரத்தால் வந்தவை. இது அவர் கையில் தரித்திருந்து திருவாழி மோதிரம் என்று மோதிரத்தைக் கொடுத்தான்.

 வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே .      399 

      பெரிய மலைகளானவை  அதிரும்படி  பூமியானது  பிளவுபட்டு  இடிந்து விழும்படியாகவும்  மரங்களின் தலையளவு உயர்ந்த   மரங்களை மோதி   கடலும் கலங்கும்படி   வேகமாக பாயும்  கங்கை மீதுள்ள  கண்டம் என்னும்  கடிநகரே  வடக்கிலுள்ள மதுரையும்  சாளக்கிராமமும்  வைகுந்தமும் துவாரகையும்  அயோத்தியும்  விசாலமான பதரியும்  இருப்பிடமாகக் கொண்ட  எம்பெருமான்  இருக்குமிடமாக அமைகின்றது.

      மந்தரம் முதலான பெரிய மலைகளானவை அதிர, பூமியானது பிளவு பட்டு, இடிந்து விழவும் மரங்களினுடைய தலையளவும் செல்லக் கிளம்பி கரையில் நிற்கிற மரங்களை மோதி முறித்தும் ஒன்றாலும் கலங்காத கடலும் கூட கலங்கும்படி வேகமாய்க் கொண்டு இழிகின்ற கங்கா தீரத்தில் கண்டம் என்னும் கடி நகர்; வடக்கில் உள்ள மதுரையும், சாளக்க்ராமும் வைகுந்தமும் துவாரகையும் அயோத்தியும் இடம் உடைய பத்ரிகாசிரமம் இவற்றை இடமாகக் கொண்டு வசிக்கின்ற எமக்கு ஸ்வாமியான புருஷோத்தமனுடைய இருப்பிடம் என்று ஆழ்வார் கூறுகிறார். 

குலசேகராழ்வார்                                                                                            பெருமாள் திருமொழி 

சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ.      724 

      அயோத்தி மக்களெல்லாம் உறவினர் போல் உன் ரதத்தைப் பின் தொடர்ந்து வர, பழமையான தண்டகாரண்யத்தை நீ அடைந்தாய். ஏதும் இல்லாத உன் அடியார்களுக்கு நல்ல மருந்து போல் ஆனாய். வேதம் கற்றவர்கள் குடியிருக்கும் திருக்கண்ணபுரத்தில் அருள் புரியும் என் கண்ணின் கருமணி போன்றவனே! சிற்றன்னை கைகேயியின் சொல்லை ஏற்றுக் கொண்ட ஸ்ரீராமனே! உன்னைத் தாலாட்டுகின்றேன்! என்கிறார் ஆழ்வார்.
      இப்பாசுரத்தில் ஆழ்வார் ஸ்ரீராமனின் உயரிய குணங்களை எடுத்துரைக்கிறார். இராமனிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தாள் கைகேயி. ஆனால் கூனியின் போதனையால் இராமன் காட்டுக்கு செல்ல வேண்டும், பரதன் நாடாள வேண்டும் என்ற அவளது கட்டளையை ஏற்று இராமன் கானகம் சென்றான். அவளது வார்த்தைகளை மீறி இருந்தாலும் எவரும் எதுவும்  சொல்லப் போவதில்லை. தசரதன் கைகேயிக்கு கொடுத்த வாக்கினைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அவளது சொற்களை ஏற்று கானகம் சென்றான் என்று இராமனது பெருமைகளை ஆழ்வார் நினைவு  படுத்துகிறார். 

ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கருமணியே
ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ !    725 

      ஊழிக்காலத்தில்  உலகத்தை உண்டு ஆலிலை மேல் யோக நித்திரை செய்தவனே! வாலியைக் கொன்று வாக்குறுதிப்படி சுக்ரீவனை அரசனாக்கியவனே! அலையினால் ரத்தினங்களைக் கரை சேர்க்கும் திருக்கண்ணபுரத்தில் வீற்றிருக்கும் என் கரிய  மாணிக்கமே! திருவாலி திருநகருக்குத் தலைவனே! அயோத்தியின் அரசனே! உன்னைத் தாலாட்டுகிறேன்! என்று ஆழ்வார் கூறுகிறார்.
      இதுவரை கணக்கற்ற ஊழிக்காலங்கள் தோன்றி முடிந்துள்ளன. தோற்றமும் ஒடுக்கமும் பகவானால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நாம் அனைவரும் பகவானின் கருணையினால் தோன்றியுள்ளோம். அதே கருணையினால் அவர் எல்லோரையும் ஐக்கியமாக்கியுள்ளார். அந்த பேரின்பத்தை அறிந்து கொள்ளாமல் சிற்றின்பத்தை நாடிச் செல்கிறோம். உண்மை நிலையினை உணர்தத்தான் பகவான் ஊழிகாலம் தோறும் ஆலிலை மேல் நித்திரை கொண்டுள்ளார். அத்தகையவனை நான் தாலாட்டுகிறேன்! என்று கூறுகிறார் ஆழ்வார். 

அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும்                                                                                                                                                                 விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உயக் கொண்ட                                                                                                                                                                     வீரன் தன்னை
செங்கண் நெடுங்கரு முகிலை இராமன் தன்னைத் தில்லை நகர்த்  திருச்சித்ரகூடந்                                                                                                                                                                                     தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ கண் குளிரக்                                                                                                                                                             காணும் நாளே!          741 

      அழகிய இடத்தையுயம், ஒளி பொருந்திய மதில்களால் நாற்புறமும் சூழப்பட்ட பிரசித்தி பெற்ற அயோத்தி நகரத்தில் சகல லோகங்களை பிரகாசிக்கச் செய்யும் தீபச்சுடராக, சூரியகுலத்து ஜோதியாக அவதரித்தவன் ஸ்ரீராமன்.  வானுலகத்து தேவர்களின் துயரைத் தீர்த்தவன் அவன். சிவந்த திருவிழிகளையுடையவனும், கார்மேகம் போன்ற வடிவு கொண்டவனுமான ராமனைத் தில்லை நிகரிலுள்ள திருச்சித்திரகூடத்தில் அருள்புரியும் எங்கள் ஒப்பற்ற முதல்வனை, எம்பெருமானை கண்குளிரக்  கண்டு வணங்கும் நாள் எந்நாளோ! என்று கேட்கிறார் ஆழ்வார்.
      கம்ப இராமாயணத்தில் அயோத்தியைப் பற்றி கம்பர் இவ்வாறு கூறுகிறார். உலகத்தவர் அனைவரும் தவம் மேற்கொண்டு முடிவாக வீடு பேறு பெறவே விரும்புவர். ஆனால் அவர்கள் அங்கு சென்ற பின் இதைவிட சிறந்தது அயோத்தி என்று கூறுவர். மேலும் நிலமகளின் முகம், திலகம், கண், மங்கல நாண் என்று அயோத்தியின் சிறப்பைக் கூறுகிறார். சந்திரனும் சூரியனும் இமைக்காமல் இந்நகரின் அழகை கண்டு களிப்படைகிறார்கள். பொன்னும், மலரும் கொண்ட மண்டபங்கள், பொதுமன்றங்கள், செய்குன்றுகள், மணிமேடைகள், முத்துப்பந்தல்கள் ஆகியன கொண்டு அமைக்கப்பட்டது என்று கம்பர் இந்நகரத்தை கற்பனை செய்து கூறுகிறார். 

அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய்த் தான்                                                                                                                                                                 முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி உலகு உய்யத் திரு வயிறு                                                                                                                                                       வாய்த்த மக்கள்
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான் தில்லை நகர்த்  திருச்சித்ரகூடந்                                                                                                                                                                                     தன்னுள்
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம்                                                                                                                                                  மதியோமின்றே.   748 

      உயர்வு மிக்க பொன்னையும், அழகிய ரத்தினங்களையும் கொண்டு அமைக்கப்பட்ட மாடமாளிகைள் உள்ள அயோத்திக்குத் திரும்பி வந்து அரசாட்சியை ஏற்றுக் கொண்டவன் ஸ்ரீராமன். தன்னால் கொல்லப்பட்ட  இராவணனுடைய பழைய வரலாறுகளை அகத்தியர் மூலம் கேட்டவன் அவன். பிராட்டியான சீதை உலகம் முழுதும் உய்யும்படி பெற்ற  இலவன் மற்றும் குசன் ஆகியோரின் சிவந்த பவழ வாயினால் தன் சரிதையான இராமாயணத்தைக் கேட்டருளிய சிறப்பு மிக்கவன் ஸ்ரீராமன். அப்பெருமான் தில்லை திருச்சித்ரகூடத்தில் எழுந்தருளி இருக்கிறார். அவரை கண் குளிர சேவித்து இராமாயணத்தைக் கேட்டு அமிர்தத்தையும் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டோம் என்று ஆழ்வார் கூறுகிறார்.      
      ஆராஅமுதமான எம்பெருமானுடைய சேவை, அவனது சரித்திரத்தில் உள்ள இனிமைக்கும், தேவாமிருதத்தின் இனிமைக்கும் ஈடாகாது என்ற கருத்தில் ‘இன்னமுதமதியோம்’ என்று கூறுகிறார். இராமசரித்திரத்தை கேட்ட பின் அமுதத்தை ஒரு பொருளாக மதியோம் என்று கூறுவதிலிருந்து ஆழ்வார் ஸ்ரீராமன் பெயரில் எத்தகையதொரு அன்பினை வைத்துள்ளார் என்று புலனாகிறது. இராமனின் புத்திரர்களான இலவன் மற்றும் குசன் ஆகியோர் இராமர் காலத்திற்குப் பின்னும் அவனது சரித்திரத்தை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை நன்னெறியில் கொண்டு சென்றார்கள். அத்தகைய பெருமான் திருச்சித்ரகூடத்தில் வாசம் செய்கிறான். 

தொண்டரடிப்பொடியாழ்வார்                                                                திருப்பள்ளியெழுச்சி 

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
     வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
     இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே
     மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே
     அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.          920 

உயரமும் இளமையும் உடைய  எருமைகளை  அவிழ்த்து விடுகிற  இடையர்களின்  புல்லாங்குழலின்  ஓசையும்  எருதுகளின் கழுத்திலுள்ள  மணியின் ஓசையும்  இவ்விரண்டும் கூடின ஓசை  எல்லா திசையிலும்  பரவி விட்டது.   வயலிலுள்ள  வண்டுகளின் கூட்டம்  ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின!  அசுரகுலத்தை  உருவழித்த  அழகிய சார்ங்கத்தை உடைய  தேவாதிதேவனே!  விச்வாமித்ர முனிவரின்  யாகத்தை காத்து  அவப்ருதஸ்நானம்  செய்வித்தருளினவனே!  விரோதிகளை அழிக்கவல்ல பலமுடைய அயோத்திக்கு அரசனே  ஸ்ரீரங்கநாதனே!  பள்ளி எழுந்தருளாயே! என்று கூறுகிறார் ஆழ்வார்.
      எருமைக் கன்றுகளை மேய்ச்சலுக்காகக் கட்டவிழ்த்து விடுகிற இடையர் ஊதுகிற புல்லாங்குழலோசையும், சேக்களின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகளின் ஒலியும் இவ்விரண்டினால் உண்டான ஓசையானது எத்திசையும் பரவிவிட்டது. சோலைக்குள் மாத்திரமன்றியே வெளிநிலமான வயலில் தடாகங்களிலுண்டான தாமரை முதலியவற்றில் வண்டுகளானவை ஆராவாரஞ்செய்து கொண்டு சிதறின; தேவர்களின் காரியமும், முனிவர்களின் காரியமும் செய்தற்குப் படாதனபட்ட பெருமானே! இன்று எங்கள் காரியமும் சிறிது செய்வதற்கு பள்ளியுணர்ந்த அருளவேணும் என்கிறார். 

 திருமங்கையாழ்வார்                                                                                          பெரிய திருமொழி 

கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே
தவள மாடம் நீடு அயோத்திக் காவலன் தன் சிறுவன்
குவளை வண்ணன் காண ஆடீர் குழமணிதூரமே.    1875 

      கவளமாக உணவினை அளித்து மதமூட்டப்பட்ட வலிமைமிக்க யானைகளும், சீறிப்பாய்ந்தோடும் குதிரைகளும் தேர்களுமாக சேனையுறுப்புகளைக் கொண்ட, அரக்கர்களெல்லாம் துன்பப்பட்டுத் தொலையுமாறு அவர்களை அழித்து வெற்றி கொள்ளப்பட்ட ஜெயசீலரான இராமபிரானின் ஆண்புலியொத்த கிங்கரர்களான வானரவீரர்கள் அரக்கர்களான உங்களைக் கொல்லாதிருக்க வேணுமாயின், சிறந்த சுண்ணாம்பு பூசப்பட்ட வெண்மையான நிறத்தினாலான மாட மாளிகைகளினால் நீண்டிருக்கின்ற அழகு பொருந்திய அயோத்தி நகருக்கு அரசரான, தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரரான, குவளை மலர் போன்ற நிறத்தினைக் கொண்ட இராமபிரான் காணும்படியாக, ‘குழமணி தூரம்’ என்னும் தோற்றோரின் ஒரு வகை கூத்தை ஆடுங்கள்! என்று கூறுகிறார் ஆழ்வார்.                   

நம்மாழ்வார்                                                                                                                  திருவாய்மொழி 

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே?         3497 

     பரந்த புல் முதலாகவும்  மிக அற்பமான எறும்பு முதலாகவும்  நல்ல தேசமான  அயோத்தியில் வாழும்  சராசரங்கள் எல்லாவற்றையும் ஒருவிதமான சாதனமும்  இல்லாமல் இருக்கச் செய்தேயும்,  பிரமனாலே படைக்கப்பட்ட  இந்த நாட்டிலே  அவை நல்ல தன்மை  உடையவவைகளாகச் செய்தான்  ஆதலால் கற்பவர்கள்  குணக்கடலான ராமனை  தவிர வேறு யாரையாவது  கற்பரோ? என்கிறார்.
      நான்முகன் படைத்த இவ்வுலகில் ஸ்ரீராமன், அயோத்தியில் வாழும் புல்பூண்டு முதலாக, எறும்பு போன்ற சிறிய ஜீவராசிகள் வரையிலான எல்லா உயிரினங்களும் ஒன்று விடாமல் மற்றும் அசையும், அசையா எல்லாப் பொருட்களும் நன்மைகள் பெற்று மகிழ்ச்சியாக வாழ வைத்தான். அத்தகைய இராமபிரானின் சரித்திரத்தை அல்லாமல் மற்றொன்றைச் சான்றோர் படிப்பரோ? என்று கேட்கிறார் ஆழ்வார். ஸ்ரீராமபிரானின் அவதாரம் என்பது இவ்வுலகில் நாம் எவ்விதம் வாழ்தல் வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கின்றது. தந்தைக்கு நல்மகனாக, தம்பிக்கு பாசமிகு அண்ணனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, நட்புக்கு இலக்கணமாக, தம்பியர்க்கு அடைக்கலம் அளிப்பவனாக திகழ்ந்துள்ளார். இவ்வாறு நாம் அனைவரும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று இராமசரித்திரம் நமக்கு அறிவுறுத்துகின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...