நம்மாழ்வார் திருவாய் மொழி
புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை
இருந்து வைகுந்தத்துள்
நின்று
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு
அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்து ஆடி
நின்று ஆர்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய்
சிவப்ப நீ காண வாராயே. 3795
எம்பெருமானே!
திருப்புளிங்குடியில சயனித்த அழகையும், வரகுண மங்கை தலத்தில் வீற்றிருந்த கோலத்தையும், ஸ்ரீ
வைகுண்டத்தில் நின்றிருந்த கம்பீரத்தையும் தரிசித்துத் தெளிந்த என் சிந்தையிலும்
மனத்திலும் நீங்காமல் குடியிருந்து என்னை ஆள வேண்டும். நினைத்தவர்கள் நெஞ்சம்
குளிரும்படி, உன்
சீல குணத்தாலே மூவுலகத்தில் வாழ்பவர்களும் வியக்குமாறு, நாங்கள் உன்
பெருமைகளில் மூழ்கி மகிழ்வோடு கூடி நின்று கூத்தாடி ஆர்ப்பரிக்க, பளிங்கு போன்ற
தெளிந்த நீரை முகர்ந்து வரும் மேகத்தில் பவளம் போன்ற கனிந்த உன் திருவாய் சிவந்து
கிடக்க, எங்களுக்கு
அருள் செய்து நாங்கள் தரிசிக்கும்படி வரவேண்டும் என்கிறார் ஆழ்வார்.
திவ்ய தேசங்களில் பெருமான் நின்ற, அமர்ந்த, சயனித்தத்
திருக்கோலத்தை நம்மாழ்வார் தனித்தனியே அனுபவித்துள்ளார். அது போன்று ஒரே சமயத்தில்
மூன்று பெருமானையும் ஒரு சேர அனுபவித்தும் பாடியுள்ளார். அதே போன்று
திருமங்கையாழ்வாரும் காஞ்சி திவ்யதேசத்தில் ஊரகம், வெஃகா மற்றும் திருக்கச்சி ஆகியவற்றில்
உள்ள பெருமானை அனுபவித்துப் பாடியுள்ளார். இத்தகைய தரிசனத்தை எங்களுக்கு
அளிக்குமாறு வேண்டுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக