திங்கள், 10 நவம்பர், 2025

100. திருவதரியாச்சிரமம் (பத்ரிநாத்)


 

 பெரியாழ்வார்                                                                                    பெரியாழ்வார் திருமொழி 

வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே.        399 

      வடதிசையிலுள்ள மதுரையும், புனிதமே வடிவான சாளக்கிராமமும், வைகுண்டமும், துவாரகையும், திருஅயோத்தியும், இடமுடைத்தாயிருந்துள்ள ஸ்ரீபத்ரிகாச்ரமம் போன்றவைகளை பெருமான் வாசஸ்தலமாகக் கொண்டுள்ளான்..  எமக்குப் பெருமானாக உள்ள புருஷோத்தமனாய்த் திகழ்கின்ற ஸ்வாமியின் இருப்பிடமானது, மந்திரம் முதலான பெரிய மலைளானவை தொடர்ந்து அதிரவும், பூமியானது பிளவுபட்டு இடிந்து விழவும், மாங்கனிகளுடைய தலையளவும் கிளம்பிக் கரையில் நிற்கின்ற மரங்களில் மோதி முறித்தும், எதற்காகவும் எள்ளளவும் கலங்காத கடலும்கூட கலங்கும்படியாக வேகமாய் கொண்டு இழியா நின்றுள்ள கங்கைநதி தீரத்தில் கண்டமென்னும் கடிநகராகத் திகழ்கின்றது என்ற கருத்தில் அமைகின்றது.             

திருமங்கையாழ்வார்                                                                                           பெரிய திருமொழி 

முற்ற மூத்துக் கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே.           968 

      முழுவதுமாக வயோதிகமடைந்து ஊன்றுகோலைத் துணையாகக் கொண்டு முன்னே வைக்க வேண்டிய அடியைக் குனிந்து பார்த்து முறிந்த கால் போல் தடுமாறி விழுவதற்கு முன்பு பகவான் எழுந்தருளியுள்ள திருவதிரியை தரிசிக்க வேண்டும். மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குவதற்கு முன்பாக, பூதனையின் பெருத்த தனங்களில் வாய் வைத்து பாலோடு அவளது உயிரையும் வறண்டு போகுமாறு உறிஞ்சிக் குடித்த வாயுடைய எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருவதரியின் திசை நோக்கி வணங்குவோம் என்கிறார் ஆழ்வார். முதிய பருவம் வந்தால் தெளிவு இருக்காது. மறதியும், மயக்கமும் நம்மை அண்டும். காலன் வந்து நம்மை அழைப்பான். மறுபிறவி எடுத்தே ஆகவேண்டும். வதரிகாச்சிரமப் பெருமானின் துணை கொண்டு நமனை வெல்வோம் என்கிறார். 

முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி
விதிர் விதிர்த்துக் கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசாமுன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே.    969 

       ஒரு கையால் முதுகைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் முன்னால் ஒரு கம்பை ஊன்றிக் கொண்டு, உடல் நடுங்க, கண்கள் சுழல, மேல் மூச்சு வாங்கி, இடையிடையே இருமி வாலிப வயதினரும், சுற்றத்தாரும் ‘இதென்ன இந்தக் கிழவனால் நமக்குத் தொல்லை’ என்று ஏசும் நிலை வருமுன்னரே பூவிலுள்ள தேனைக் குடித்து வாழும் வண்டுகள் இசைபாடும் திருவதரியை வணங்குவோம் என்று கூறுகிறார் ஆழ்வார். இளமை என்பது முடிந்து விடும் என்று நமக்குத் தெரியும். அதனையும் மீறி மாயையின் பிடியில் அகப்பட்டு அதனை மறக்கிறோம். மனிதன் என்றும் வாழ்வான் என்ற நினைப்பே அதிசயம் என்று தருமன் கூறுவது போன்று அதனை மறந்து திரிகிறோம். எனவே இளமையிலே திருவதரி பிரானை வணங்கி கரை சேர வேண்டும் என்கிறார். 

உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்காமுன்
அறிதி ஆகில் நெஞ்சம்! அன்பாய் ஆயிரம் நாமம் சொல்லி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே.         970 

      உடலிலுள்ள நரம்புகள் அனைத்தும் உறிக்கயிறு போன்று மேலே கிளம்பும். தசைபிடிப்பு குலையும். அதனால் மனம் வருந்தும். நடக்கும் வழி பார்த்து அதனாலே விழிகள் சுழல முன் அடி வைக்க முடியாமல் நின்று நடுங்கும் காலம் வரும். இப்படிப்பட்ட காலம் வருவதற்கு முன்பே ஏ மனமே!  எம்பெருமானிடம் பக்தி கொண்டு அவனது ஆயிரம் நாமங்களையும் சொல்லி, மது உண்டதால் உன்மத்தம் கொண்டு வண்டுகள் இசைபாடும் திருவதிரியை வணங்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வாயாக! என்று தன் மனத்தை வேண்டுகிறார். இப்பாசுரத்தில் முதுமையின் அவல நிலையை நன்கு விளக்குகிறார். முதுமையில் எதுவும் செய்ய இயலாத நிலையில் அது வருவதற்கு முன்பே திருவதிரி நாராயணனைப் பற்றுவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார். 

பீளை சோரக் கண் இடுங்கிப் பித்து எழ மூத்து இருமி
தாள்கள் நோவத் தம்மில் முட்டித் தள்ளி நடவாமுன்
காளை ஆகிக் கன்று மேய்த்துக் குன்று எடுத்து அன்று நின்றான்
வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே          971 

      இந்த உடல், கண்கள் இடுங்கி, பீளை பொங்கி, பித்தம் அதிகமாகிக் கிழத்தன்மை அடையும். காறி காறி உமிழும்படி இருமல் வரும். கால்கள் ஒன்றோடொன்று இடிக்கத் தடுமாறி நடக்க வேண்டிவரும். இந்த நிலை வருவதற்கு முன்பே, இளைஞனாக மாடு மேய்த்து, கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்து கோகுலத்தைக் காத்து நின்றவன் இருக்கின்ற, வாளை மீன்கள் மகிழ்ந்திருக்கும் பொய்கைகள் சூழ்ந்த திருவதரியை வணங்குவோமாக! என்கிறார் ஆழ்வார். வயோதிகம் வருமுன்பே பகவானை அடைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார். எத்தகைய வலிமையாக இருப்பினும் வயோதிக காலத்தில் மற்றொருவரின் உதவியை நாட வேண்டும். பணத்தில் மிதந்தவன் வயோதிகத்தில் துன்புறுகிறான். இத்தகைய இழிநிலை பெறமால் வதரி நாராயணனைப் பற்றுவோமாக. 

பண்டு காமர் ஆன ஆறும் பாவையர் வாய் அமுதம்
உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவாமுன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே.          972 

      வாலிபப் பருவத்தில் அழகாக இருந்து பெண்கள் தன் மீது மோகம் கொண்டு சுற்றி வந்ததையும், தான் அப்பெண்களிடம் சிற்றின்பத்தில் திளைத்ததையும் வர்ணனை செய்யும்போது, நடுவில் தொண்டை கமற இருமி, ஊன்றுகோல் ஊன்றி தள்ளாடி நடக்கும் காலம் வருவதற்கு முன்பு வண்டுகள் ரீங்காரம் செய்யும் குளிர்ந்த துளசி மாலையை அணிந்திருக்கும் பத்ரி நாராயணன் எழுந்தருளியிருக்கும் திருவதரியை வணங்குவோமாக! என்கிறார் ஆழ்வார். முதுமை வரும்போது எல்லாச் சுகமும் நம்மை விட்டு அகலும். ஆனால் இதனை உணராமல் மாயத்திரை நம் கண்களை மறைக்கின்றது. நம் கூடவே இருந்த பெண்கள் முதுமையில் நம்மைவிட்டு சுயநலத்துடன் அகன்று விடுவார்கள். இது பெண்களுக்கும் பொருந்தும். இந்நிலை வரும்போது பிறவித்தளையை அறுத்தெரிய வதரி நாராயணனைப் பற்றுவோம் என்று கூறுகிறார் ஆழ்வார். 

எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலச் சித்தம் வேறாய்ப் பேசி அயராமுன்
அத்தன் எந்தை ஆதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே.         973 

      நடுநடுங்கும் குரலோடு பேச, சரிவர பேச முடியாமல், மார்பிலே சளி கட்டிக் கொள்ள இருமி, இருமி துப்பித் துன்பம் கொள்ளும் காலம் நமக்கு வந்து சேரும். அப்போது தேகம் இளைத்துப் போகும். புத்தியானது ஒரே சீராக இருக்காது.  மறதி அதிகமாகி ஒன்றை நினைத்து அதனைப் பேச முடியாமல் இன்னொன்றைப் பேசி உடல் தளரும் காலம் வரும். இத்தகைய வயோதிக காலம் வருவதற்கு முன்னரே அனைவருக்கும் ஒரே தலைவனாய், எனக்குத் உற்ற தந்தையாய், இந்த மகா உலகம் தோன்றுவதற்கு காரண கர்த்தவாவாய் இருக்கும், தேவர்களுக்கெல்லாம் தேவாமிருதம் கிடைக்கத் திருப்பாற்கடலைக் கடைந்த கரிய மாணிக்கம் போல் ஒளியுடைய எம்பெருமான் கோயில் கொண்டிருக்கும் திருவதரி நாராயணனை வணங்குவோமாக! என்று கூறுகிறார் ஆழ்வார். 

 பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத உந்த உன் தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான்  வதரி வணங்குதுமே      974 

      அந்திமக் காலத்தில் மனிதன் இருமும் போதெல்லாம் கட்டி கட்டியாக கோழை வெளிவர, செப்பு போன்ற மென்மையான தனங்களையுடைய பெண்கள் அய்யகோ கிழவரை வயோதிகம் மிகவும்தான் வாட்டுகிறது. இத்தகைய இவர் இளமையில் எப்படி இருந்தாரோ என்று நமுட்டுச் சிரிப்புடன் இகழ்ச்சியாக அருகில் இருப்பவரிடம் ஏளனமாக சிரிக்கும் காலம் வருவதற்கு முன்னர் நமக்கு ஐஸ்வர்யம் போன்றவனும், நம்மை வாழ வைப்பவனுமான நாராயணன் குடியிருக்கும் திருவதரியை வணங்குவோமாக என்று கூறுகிறார் ஆழ்வார். வாலிப பருவத்தில் ஏக்கப் பார்வை பார்க்கும் பெண்கள் வயோதிகத்தில் ஏளனப் பார்வை பார்ப்பார்கள். இத்தகைய இழிவான நிலையை நாம் சந்திக்க வேண்டுமா? என்று ஆழ்வார் கேட்கிறார். நம்மை முழுவதும் புரிந்துள்ள திருவதரி நாராயணனின் பொற்பாதங்களைப் பற்றி இத்தகைய நிலையத் தவிருங்கள் என்கிறார். 

‘ஈசி போமின் ஈங்கு இரேன்மின் இருமி இளைத்தீர் உள்ளம்
கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர் பால்
நாசம் ஆன பாசம் விட்டு நல் நெறி நோக்கல் உறில்
வாசம் மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே          975 

      வெளியே போங்கள்! இனி இவ்விடத்தில் இருத்தல் கூடாது. இருமி, இருமியே நெஞ்செலும்பு தெரியுமளவு இளைத்து விட்டீர்கள். இப்படி நாங்கள் பேசும்போது கூசினால் போதுமா? என்று கருநெய்தல் போன்ற கரிய கண்களையுடைய மாதர்கள் பேசுவதற்கு முன்பே, ஸ்வரூபநாசத்தை விளைவிக்கவல்ல ஆசாபாசத்தை விட்டுத் தொலைத்து அவர்கள் மேல் கொண்ட ஆசையை முற்றிலுமாகத் துறந்து, நல்ல வழியில் செல்ல நினைத்தால், மணம் நிறைந்த துளசி மாலையை அணிந்திருக்கும் பரந்தாமன் குடிகொண்டிருக்கும் திருவதரியை வணங்குவோமாக! என்று கூறுகிறார் ஆழ்வார். என்னைவிட்டு என்றும் பிரியக்கூடாது என்று இளமையில் கூறிய பெண்கள் வயது முதிர்ந்தவுடன் நம்மை விரட்டிவிடுவார்கள். திருவதரியில் பரந்தாமன் இருக்க பெண்களின் மோக வலையில் விட்டில் பூச்சிகளாக விழுந்து விடாதீர்கள் என்று ஆழ்வார் நம்மை எச்சரிக்கிறார். 

புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்து இருந்து உள்ளம் எள்கி
கலங்க ஐக்கள் போத உந்திக் கண்ட பிதற்றாமுன்
அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு ஆயிரம் நாமம் சொல்லி
வலங்கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே         976 

      நம் உடலில் உள்ள கர்மேந்திரங்கான வாய், கை, கால், குதம், குறி போன்றவையும், ஞானேந்திரியங்களான நாக்கு, மூக்கு, கண், காது மற்றும் உடல் ஆகியவைப் பழுதடைய, வயோதிகத்தை அடைந்து நான்கு பேர் இருக்கும் இடத்தை விட்டுத் தனியாக இருந்து மனம் விகாரப்பட்டுக் கலங்கி, வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று பகுதிகளும் வேறுபட்டதாய், கபத்தை உடல் வெளியே தள்ள, மனம் போனபடி வாயில் வந்ததைக் கண்டபடி பிதற்றும் முன்னரே, குளிர்ந்த துளசி மாலையுடன் ஆயிர நாமங்களையும் சொல்லியபடியும் பாமாலை பாடி ஆடியும் அடியார்கள் வலம் வரும் திருவதரி சென்று அடிபணிவோம்! என்று கூறுகிறார் ஆழ்வார்.       வாதம், பித்தம், கபம் ஆகியவை முதுமையில் மாறுபட்டு நோய்களாக மாறுகின்றன. இத்தகைய மாற்றம் இயற்கையே. நாம் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனைப் பற்றிக் கவலை கொள்ளாமல் திருவதரிப் பெருமானின் நாமங்களைச் சொல்லி உய்வீராக! என்கிறார் ஆழ்வார்.     

வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடு மாலைக்
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி ஆடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே.   977 

      வண்டுகள் தேனைக் குடித்து வாழும் திருவதரியில் குடி கொண்டுள்ள திருமாலை, தாழைகள் வேலியாக உடைய, திருமங்கைக்குத் தலைவரான திருமங்கையாழ்வார் பாடியுள்ள சிறப்புமிக்க இந்தப் பத்துப் பாடல்களையும் அடியார்கள் கூடிப் பாடி அடுவார்களேயானால் பரமபதத்தில் வாழ்வர் என்பது நிச்சயம் என்கிறார் ஆழ்வார். இளமைப் பருவத்தில் பல சோதனைகளைச் சந்தித்து அற்ப பொருளுக்கு ஆசைப்பட்டு அதில் மதிமயங்கும் மனிதன், வரப்போகும் கொடிய துன்பத்தை அறியாமல் முதுமையும் அடைந்து பல இன்னல்களை அனுபவிக்கிறான். இத்தகைய முதுமையின் இழிவைப் புலப்படுத்தி வாலிப வயதினிலேயே திருவதரிப் பெருமானைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார். அத்தகைய பெருமான்மீது ஆடிப்பாடி பக்தி கொள்பவர்கள் பரமபதத்தில் வாழ்வார்கள் என்பது இதன் கருத்தாகும். 

ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க
தானவன் ஆகம் தரணியில் புரளத் தடஞ் சிலை குனித்த என் தலைவன்
தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிராமத்து உள்ளானே.     978 

      கொடிய அசுரனான இரண்யாக்ஷகன் பூமிதேவியைக் கவர்ந்து சென்று பாதாள லோகத்தில் சிறை வைத்தான். உலகத்தின் இயக்கங்கள் அனைத்தும் முழுவதுமாக நின்றுபோய்விட்டன. தேவர்கள் அனைவரும் பூமாதேவியை காக்குமாறு எம்பெருமான் திருவடிகளை வணங்கினர். பெருமான் வராக அவதாரமெடுத்தது பூமிதேதவியைக் காத்தான். அது போன்று இராமாவதாரத்தில் ஸ்ரீராமனாக அவதரித்து இராவணனது சரீரம் மண்ணில் புரளும்படி கோதண்டத்தை வளைத்தவன் என் தலைவன். அவன் தேன் மிகுந்த சோலையாக உள்ள கற்பக மரம் பூத்த தெய்வத் தன்மையுள்ள வாசனையுள்ள மலர்களைக் கொண்டு வந்து அமரர்கள் வணங்கும் கங்கைக் கரையிலுள்ள திருவதரியாச்சிரமத்தில் எழுந்தருளியுள்ளான் என்று கூறுகிறார் ஆழ்வார். திருமால் வராக அவதாரம் எடுத்ததை இங்கு குறிப்பிடுகிறார். பின் இராமனாகி இராவணனை வதம் செய்ததைக் கூறுகிறார். இத்தகைய பெருமான் திருவதரிகாச்சிரமத்தில் சேவை சாதிக்கிறார் என்கிறார்.  

இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன் கொழுஞ் சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில் வெண் துகில் கொடி என விரிந்து
வலம்தரு மணிநீர்க் கங்கையின் கரைமேல் வதரிஆச்சிராமத்து உள்ளானே.         979 

      பிராட்டியை இராவணன் கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்ததால் அன்னையை மீட்டுவர பெருங்கடலில் அணைகட்டி கடலரசனின் அகந்தையை அழித்து வானரர்களோடு அங்கு சென்று இலங்கையை அழித்தான் ஸ்ரீராமபிரான். குபேரனை வென்று சங்கநிதி, பதுமநிதி ஆகிய இரண்டையும் கைப்பற்றிய இராணவனையும், அரக்கர்களையும் குலத்தோடு அழியும்படி தனது பாணங்களைச் செலுத்திய அயோத்தி இராமன் திருவதரிகாச்சிரமத்தில் அருள் புரிகிறான். அழகிய தீர்த்தத்தைக் கொண்டுள்ள இத்தலமானது கொழுஞ்சுடரான சூரியன் வலம் வந்து விலங்கலான மேரு மலையில் விழுந்து மோதி ஆகாயத்தின் வெண்மையான கொடியாடையென விரிந்து மிடுக்கான வேகமுடையதாய் ஸ்படிகமணி போல் தெளிவான நீர் நிரைந்த கங்கைக் கரையில் அமைந்துள்ளது. விஷ்ணு புராணத்திலும் இதே கருத்தினை விரிவாக எடுத்தாளப்பட்டுள்ளது. இத்தகைய பெருமான் திருவதரிகாச்சிரமத்தில் சேவை சாதிக்கிறார் என்கிறார். 

துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே! தொழுது எழு தொண்டர்கள்  தமக்கு
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான்
அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  980 

      மனமே! இப்போது உனக்கு உறுதியாக ஒன்று கூறுகிறேன் கேட்பாயாக. பக்தர்களுக்குண்டான நோய்களையெல்லாம தீர்த்து அவர்களைக் காத்து விண்ணுலக வாழ்வு தரும் அருளைத் தருபவன் பகவான். அழகிய மலர்களைச் சூடிய தேவ மங்கையரின் ஆடைகளையும், ஆரங்களையும் அடித்துத் தள்ளியபடி இரத்தினங்களோடு வந்து விழுகின்ற கங்கைக் கரையில் உள்ள திருவதரியாச்சிரமத்தில் நாராயணன் எழுந்தருளியிருக்கின்றான்! அவனை வணங்கி உய்வாயாக என்று தன் மனதிற்குக் கூறுகிறார்.  இங்கு ஆழ்வார் குறிப்பிடும் நோயானது பற்றை உண்மையென்று நம்பி உணமையைப் புறக்கணிக்கும் நோய் ஆகும். மனதில் ஆத்மஜோதி இருக்க தன்னை வெற்றுடல் என்று எண்ணி நோயுடன் வாழ்கிறார். இத்தகைய நோய்களை நீக்குமாறு திருவதிரிநாதனை நாள்தோறும் வேண்டுமாறு ஆழ்வார் கூறுகிறார்.     

பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் பெரு முலை சுவைத்திடபெற்ற
தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த செம்பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிராமத்து உள்ளானே.     981 

      யசோதையின் வேஷங்கொண்டு பொய்யாக வந்த பூதனையின் இடுப்பில் அமர்ந்துகொண்டு அவளது மார்பில் கண்ணன் பால் குடித்ததை யசோதைப் பார்த்து இனி இப்பிள்ளையை மடியிலெடுத்துக் கொள்ளக் கூடாது, இக்குழந்தை தன்னிடம் பால் குடிக்கும்போது உயிரை எடுத்துவிடுவானோ என்று கலங்கினாள்.  இக்குழந்தையின் இயல்புக்கு அஞ்ச வேண்டியுள்ளதே என்று வருந்தினாள். தாயே அஞ்சும்படி இத்தகைய சூரனாக வளர்ந்த பிள்ளை திருவதியாசிரமத்தில் வீற்றிருக்கிறான். அந்தத் திருத்தலம் உயர்ந்த சிகரத்தின் உச்சியிலே  அண்டத்தையே தாங்குகின்ற தங்கம் நிறைந்த மேரு பர்வதத்திலே இடப்பக்கத்திலிருந்து விழுகின்ற கங்கைக் கரையில் உள்ளது. நம்மை வீழ்த்த பல தீயசக்திகள் இருந்த போதிலும் நம்மைக் காக்க பலம் பொருந்திய தேவதைகளின் வடிவில் பகவான் காக்கின்றான். அவன் நமக்கு சூட்சும சக்தியை அளித்து நம்மைக் காக்கின்றான் என்ற கருத்தில் ஆழ்வார் தெரிவிக்கின்றார். 

தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த பனி முகில் வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிளவு எழக் குத்தி       
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிராமத்து உள்ளானே.      982 

      தேர்த்தட்டு போன்ற அழகிய இடையையும், கயல்மீன் போன்ற அழகிய விழிகளையும் கொண்ட, கும்பன் என்னும் இடையர் தலைவனின் மகளான நீளா பிராட்டியான நப்பின்னையை அடைய, கோபம் கொள்ளும் செயல் புரியும் அசுரவேஷம் கொண்ட ஏழு காளைகளையும் கண்முன்னே அழித்த குளிர்ந்த மேக வண்ணனான எம்பெருமான் திருவதரிகாச்சிரமத்தில் எழுந்தருளியுள்ளான். அத்திருத்தலம் பகீரதனின் தவத்தால் வெகு வேகமாகப் பெருகி வந்து வழியைத் தடுக்கும் பெரிய மலைகளைப் பிளந்து கொண்டு, அங்கு வாழும் யானைகளையும் தள்ளிக்கொண்டு விழும் கங்கைக் கரையில் உள்ளது. இத்தலத்தில் வந்து ஸ்ரீமந் நாராயணனான வதரிகாச்சிரமப் பெருமானைத் தரிசித்தால் பாவங்கள் நிரந்தரமாக ஓடிவிடும் என்று ஆழ்வார் தெரிவிக்கின்றார்.   

வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும் விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிராமத்து உள்ளானே.        983 

      பாற்கடல் கடையப்பட்டு அதில் தோன்றிய ஐராவதம் என்ற யானையை தேவேந்திரனுக்கு அளித்தான். அதில் வந்த தேவாமிர்தத்தையும், சொர்க்கத்துடன் தேவர்களுக்கு அரசாளும் பாக்கியத்தையும் இந்திரனுக்குத் தந்தவன் எம்பெருமான். அதேசமயம் நமக்கு அருள்புரியும் தந்தையாய், தலைவனாய், தெய்வமாய்க் காக்கிறான். தேவர்கள் அவன் திருப்பாதங்களை வணங்க, ஆயிரம் முகம் கொண்டு அருளினான். அவன் மந்திர மலையிலிருந்து வந்து விழும் கங்கைக் கரையிலுள்ள திருவதரியாச்சிரமத்தில் வீற்றிருக்கிறான் என்கிறார் ஆழ்வார். கங்கையானது ஆர்ப்பரித்துக் கொட்டுவது கடல் சீற்றத்துடன் பெருகி வருவது போலிருக்கும் என்கிறார். அத்தகைய இடத்தில் குடிகொண்டிருக்கும் திருவதரிப் பெருமானை சரணடைந்து எல்லா நன்மைகளையும் பெற முடியும் என்பதை இப்பாடலின் கருத்தாக அமைகிறது. 

மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன் நிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம் தவிர்த்தவன் தவம்புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிராமத்து உள்ளானே.      984 

      ஒரு சமயம் பஞ்சவடியில் ஸ்ரீராமன் எழுந்தருளியிருந்தபோது வஞ்சகமாக மான் வடிவில் வந்த மாரீசனை அழித்தவன் அயோத்தி மன்னன். பரம பக்தனான பிரகல்லாதனின் துன்பத்தை அகற்ற அவன் தந்தையான இரண்யகசிபுவின் பொன்நிற சரீரம் இரண்டாகப் பிளந்து கிழித்த நரசிம்மன் திருவதரியாச்சிரமத்தில் எழுந்தருளியுள்ளான்.  சிவபெருமான் கிள்ளிய பிரம்மாவின் தலை கபாலமாக அவரைப் பற்றியது. தன் திருமேனி இரத்தத்தால் கபாலத்தை நிரப்பி அவனது பிரம்மஹத்தி சாபத்தைத் தீர்த்த நாராயணன், பகீரதன் கொண்டு வந்த கங்கையின் கரையிலே எழுந்தருளியுள்ளான் என்கிறார் ஆழ்வார். தவம் புரிந்த மாமுனியான விசுவாமித்திரர் கொண்டு வந்த கங்கை என்று பராங்குசதாசர் பொருள் கொள்ள, அதைக் கேட்ட நஞ்சீயர் இல்லாக் கருத்தைக் கொள்ளலாகாது என்று உரைத்து பகீரதன் தவம் செய்து கொண்டு வந்த கங்கை என்று பொருளுரைத்தார்.     

கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் குரை கடல் உலகு உடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும்
மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிராமத்து உள்ளானே.       985 

      மேகங்கள், காற்று, மலைகள், சப்தமிடும் கடல், உலகங்கள் போன்ற அனைத்து விதமான பதார்த்தங்களை பிரளயம் கொண்டு போகாமலிருக்க அதனை உண்ட பெரிய வயிறு உடையவன், சூரிய, சந்திரர்களையுடைய வானுலகத்தையும், ஊழியையும் தனக்கு அங்கங்களாகக் கொண்ட உபயவிபூதி நாதனான மகாவிஷ்ணு திருவதரியாச்சிரமத்தில் எழுந்தருளியுள்ளான்.  அத்திருத்தலம் பகீரதன் கங்கையை வரவழைத்த சமயம், பிரம்ம லோகத்தின் வழியே வானிலிருந்து இறங்கி பூமிதேவி வருந்தும்படி பெருகி நிறைந்து, ஸ்படிகம் போல் தெளிந்த நீரையுடைய கங்கைக் கரையில் உள்ளது என்கிறார் ஆழ்வார். அண்டசராசரங்கள் அனைத்தும் மகாவிஷ்ணுவின் அங்கங்களாக உள்ளன. தேவர்கள் மட்டுமன்றி அசுரர்களும் அவனுள் ஐக்கியமாக உள்ளார்கள். அத்தகையவனை திருவதரியில் வந்து தரிசியுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.     

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானை
கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகு உடன் மருவி
இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவர் ஆகுவர் தாமே.      986 

      மிக வேகத்தோடு வருகிற அலைகளையுடைய, ஸ்படிகம் போல் தெளிந்த நீரினையுடைய கங்கைக் கரையிலுள்ள திருவதரியாச்ரமத்தில் கோயில் கொண்டிருப்பவனை ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் ஆகிய மூன்று வகையான நீரினைக் கொண்ட கருங்கடல் போன்ற நிறத்தவனை மனதில் நிறுத்தி திருமங்கையாழ்வார் இயற்றிய இப்பாமாலையிலுள்ள பத்துப் பாடல்களையும் வரம் பெற்றவர்களே பாட இயலும். அவர்கள் வானவரோடு கூடி இருந்து மறுபிறவியில் சக்கரவர்த்தியாக உலகை ஆண்டு, மறுபிறப்பில்லாமல் தேவ லோகத்தில் நிரந்தரமாக வாசம் செய்வர் என்று கூறுகிறார் ஆழ்வார். மேலும் பலன் வேண்டி இப்பாசுரங்களைப் பக்தியுடன் பாடுவோர்க்கு அத்தகைய பலன் கிடைக்கும். எனவே இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்காட்டும் பாசுரமாக அமைந்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...