வியாழன், 27 நவம்பர், 2025

59. திருஎவ்வுள் - திருவள்ளூர்

 


திருமங்கையாழ்வார்                                                                                       பெரிய திருமொழி 

காசை ஆடை மூடி ஓடிக் காதல் செய்தான் அவன் ஊர்
நாசம் ஆக நம்ப வல்ல நம்பி நம் பெருமான்
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று
ஏச நின்ற எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே.     1058 

      காவி உடையால் தன் சரீரத்தை மறைத்து பஞ்சவடிக்கு விரைந்து வந்து சீதா தேவியிடம் மையல் கொண்ட இராவணனது ஊரான இலங்கையை அழிய அம்பெய்து முடித்த பூரண சக்தியுடைய வீரத்திருமகனான எம்பெருமான் மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய ஆய்ச்சியர், இவன் வெண்ணெய் திருடி உண்டவன் என்று பரிகசித்த கோவிந்தன், திருஎவ்வுளூரில் கண் வளர்ந்தருளுகிறான்.
      முன்னடிகளில் ஸ்ரீராமனாகவும், பின்னிரண்டடிகளில் ஸ்ரீகிருஷ்ணனாகவும் இவ்வூரில் சேவை சாதிக்கின்றான். இராவணன் சீதையைக் கவர்வதற்காக சன்னியாசி வேடமிட்டு பிச்சை கேட்பதுபோல் கேட்டு கவர்ந்து சென்றான். அத்தகையவனை தன் அம்பால் நிர்மூலம் செய்தவன் இங்குள்ளான். அது போன்று வெண்ணெயுண்டவனான கிருஷ்ணனும், இவ்விதம் இராமகிருஷ்ணராக இங்கு வாசம் செய்கின்றான். எவராலும் வெல்ல முடியாத இராவணனை போரில் வென்று முடித்தார். அதே சமயம் கிருஷ்ணாவதாரத்தில் விளையாட்டாக வெண்ணெய் உண்டு அனைவரின் பரிகாசத்தையும் ஏற்றான். 

தையலாள்மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன்
பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம் போர் தன்னில் அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள
எய்த எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே.       1059 

      அழகில் சிறந்தவளான வைதேகி மேல் மோகம் கொண்ட சந்திரஹாசம் என்ற வாளையுடைய இராவணனது மெய்யான பொன் முடிகள் பத்தையும், முன்பு இராமாவதாரத்தில் நடந்த இராம இராவணப் போரினால் ஒரே அனல் உமிழ் என்ற சிவந்த பாணத்தினால் மண்ணில் உருளச் செய்த என் தலைவனான வீரராகவன் திருஎவ்வுளூரில் கண் வளர்ந்தருளுகின்றான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
      பிராட்டியைப் பிரிந்த பெருமான் வெண்மையான மேகக் கூட்டங்களைக் கண்டவுடன் சீதையின் நினைவில் தவித்தான். இதைக் கண்ட அனுமன் ஒரு பெண்ணிற்காக வீரம் பொருந்திய இராமன் இவ்வாறு கலங்குகிறானே என்று நகைத்தான். பின் இலங்கை சென்று அசோகவனத்தில் சீதையைக் கண்டவுடன் அய்யகோ! இத்தகைய பிராட்டியைப் பிரிந்த பின்பும் உயிர் வாழ்கிறானே, அவனிலும் மிக்க கலநெஞ்சம் உண்டோ என்று நினைத்தான் அனுமன். இவ்வாறு எண்ணத் தூண்டியது சீதையின் வடிவழகே ஆகும். அத்தகைய அழகு பொருந்திய பிராட்டியிடம் காதல் கொண்ட பெருமான் வீரராகவனாக திருஎவ்வுளூரில் சேவை சாதிக்கின்றான். 

முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன் ஊர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்
இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே    1060 

      ஸ்ரீராமாவதாரத்தில் அனுமனை பிராட்டிக்குத் தூது அனுப்பி சிறந்த இலங்கையை ஓர் அம்பினால் மாண்டு போகும்படி அழித்தவன், கிருஷ்ணாவதாரத்தில் மன்னர் குலத்தில் அவதரித்தும் பாண்டவர்களுக்காகத் தூது சென்று பாண்டவ தூதன் என்று உலகத்தவரால் போற்றப்பட்ட வீரராகவன் எவ்வுளூரில் கிடந்தான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      ஸ்ரீராமன் அதர்மம் செய்த இராவணனிடம் சென்று சமரசம் பேச விரும்பவில்லை. மேலும் அரச பரம்பரையில் இத்தகைய தூதினை தானே மேற்கொள்ளத் தவிர்ப்பார்கள். எனவே இராமதூதனான அனுமனை அனுப்பி எச்சரித்து வருமாறு கூறி அனுப்பினார். இருப்பினும் தான் தூது பணியினை மேற்கொள்ள இயலாமல் போனது சிறிது வருத்தம்தான் என்றார். ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் துரியோதனன் பாண்டவர்களக்குச் செய்த துரோகத்திற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக தானே தூது சென்றார். இந்த அவதாரத்தில் தூது சென்ற பிறகுதான் பெருமானுக்குத் திருப்தி உண்டாயிற்று என்பது பட்டர் வியாக்யானமாக உள்ளது. 

பந்து அணைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால்
வெந் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே     1061     

      பந்தினைத் தன் மெல்லிய விரல்களால் அணைத்துப் பிடித்திருக்கும் நப்பின்னைப் பிராட்டியை மணமுடிக்க குரூரமான மிடுக்குடைய ஏழு முரட்டுக் காளைகளையும் வென்ற துவாரகாபதி, உலகெங்கும் பரந்த புகழையுடைய நந்தகோபனுக்கு திருக்குமாரனாக பரிபூரணமாக அவதரித்த எம்பெருமானும், நற்குலத்துக்கெல்லாம் நாதனுமானவன் திருஎவ்வளூரில் கண் வளர்ந்து அருளுகிறான் என்ற பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.
      நப்பின்னையின் தந்தை சொன்னபடி வலிமையுள்ள ஏழு காளைகளை அடக்கிய பெருவீரன் அந்த விடாய் தீர திருஎவ்வுளில் திருக்கண் வளர்ந்துள்ளான். கையிலே பந்தைப் பிடித்து அதைவிட மென்மையான விரல்களைக் கொண்டவளான நப்பின்னை சித்திரப் பதுமைப் போன்று திகழ்வாள். கண்ணபிரானைப் பிள்ளையாகப் பெற நோன்பு நூற்றவன் வசுதேவன். அவனைப் பார்த்த கணத்தில் நன் நோன்பின் பயனைப் பெற்றான். அத்தகைய மகனை நந்தகோபனிடம் விடவேண்டியது ஆகிவிட்டது. ஏழு காளைகள் என்பது நம்மில் உள்ள ஏழு அசுர குணங்களாகும். அதனை அடக்குபவனும் எம்பெருமானே என்ற கூறுகிறார் ஆழ்வார். 

பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆல் இலைமேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி
ஏலம் நாறும் பைம் புறவின் எவ்வுள் கிடந்தானே.            1062 

      நினைத்துப் பார்த்தால் முன்பொரு காலத்தில், ஊழிக்கால முடிவில், சிறு குழந்தையாய் ஏழு உலகங்களை உண்டு ஆலந்தளிரின்  மேல் நீண்ட காலம் பள்ளி கொண்ட கிருஷ்ணன், நீல வண்டுகள் தேனை உண்டு வாழும் நெய்தல் மலர்களில் படிந்த வண்டுகள் மலரில் உள்ள தேனைப் பருகி வாழப்பெற்ற அழகிய குளிர்ந்த நெய்தல் வயல்களையும், மணம் கமழ்கின்ற சோலைகளையுடைய திருஎவ்வுளூரில் சயனித்திருக்கிறான் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
      உலகமெல்லாம் மறையும் நிலையில் இருந்த ஊழிக்காலத்தில் தான் மட்டும் மறையாமல் சிறு குழந்தையாக ஆலிலைமேல் சயனித்திருப்பது அனைத்தையும் மறைப்பதற்காக. ஆனால் திருஎவ்வுளூரில் சயனித்திருப்பது உலகத்தைக் காத்துக் கரையேற்றுவதற்காக. அவனைப் பொருத்தவரை இப்பிரபஞ்சம் இயங்குவதும் முடிவதும் ஒரு விளையாட்டாகும்.  இந்த உலகம் கொடியதாக தெரிந்தாலும் அதுவும் பகவானின் விளையாட்டு என்று கொள்ள வேண்டும். பகவானின் திருவடியைப் பற்றியபடி இவ்விளையாட்டில் நாமும் பங்கு கொண்டால் ஒரு துன்பமும் நேராது என்பதாக பொருள் அமைகிறது. 

சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தன் நம்பி செங்கண் நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம்
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது
ஏத்தும் நம்பி எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே.     1063 

      அடியவர்கள் ஒன்று கூடி நெருக்கமாகத் திரண்டு, ‘சுவாமி! குணங்களால் நிறைந்தவனே! உனக்கு வணக்கம்’ என்று கூறி இடைவிடாமல் போற்றும்படி இருப்பவன். செந்தாமரைக்  கண்ணுடையவன். ஸ்வாமியாய் இருப்பவன், குறைகளை நீக்குபவன், தேவர்களுக்கெல்லாம் தலைவன். சிவனுக்கும் தேவன் என்று சனகர் முதலிய முனிவர்கள் போற்றும் பரந்தாமன் திரு எவ்வுளூரில் சயனித்திருக்கிறான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      பெருமானை பக்தி மார்க்கத்தோடு தொழுபவர்கள் அதற்கு அநுகூலமாகத் தாழ்ந்த தோற்றத்தில் இருப்பார்கள். அத்தகையவன் ஆபத்பாந்தவனாக இருந்து அருள் புரிகிறான்.  இவ்விதம் நாம் அழைத்துவரும் அளவிற்கு எளியவனாக இருந்தாலும் அவன் சாமானியனல்ல. தேவர்களுக்கெல்லாம் மூத்தவனென்றும், முக்கண்ணனான சிவனுக்கு அந்தர்யாமியாக இருந்து காரியங்கள் பல நடத்துபவனாக இருக்கின்றான். இவ்விதமான உண்மைகளை அறிந்த சனகாதி முனிவர்கள் தொழுதேத்தும் பரம் பொருளாகத் திகழ்பவன்.  சௌலப்யமும், பரத்வமும் உடைய பெருமான் திருஎவ்வுளூரில் இருந்து சேவை சாதிக்கின்றான். 

திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசை முகனார்
தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண்
தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூடநின்ற
எங்கள் அப்பன் எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே.   1064 

      சந்திரன் ஜலம்  ஆகாசம் அக்னி  வாயு ஆகியவற்றை சரீரமாயும்  நான்முக பிரம்மாவுக்கு  தந்தையாயும்  ஸாமவேதத்தால் ஸ்தாபிக்கப்பட்ட  காரணபூதனானான எம்பெருமான்  தனது சரீரத்தின் ஒருபக்கத்திலே  இருப்பவனாய்  வண்டுகள் நிறைந்த  கொன்றை மாலையையும்  கங்கா ஜலத்தையும்  நீண்ட சடையிலுடைய சிவ பெருமான்  உலகமெல்லாம் தாவி அளந்த விசாலமான எம்பெருமானின் திருவடிகளை  தன் தலைமீது சூடி  வணங்கச்செய்த  எங்கள் அப்பன்  எம்பெருமான்   பள்ளிகொண்டுள்ளார்.
      காரியவர்க்கங்களை எல்லாம் தனக்கு சரீரமாகக் கொண்டு, தான் அவற்றிற்கு ஆத்மாவாக இருப்பவன். உலகங்களைப் படைத்த நான்முகக் கடவுளைப் படைத்தவனாவான். கீதையில் ‘வேதங்களுக்கெல்லாம் நான் சாமவேதமாக இருக்கிறேன்’ என்கிறார். கங்கா தீர்த்தத்தை தன் சடையில் தாங்கி திருமேனியில் ஏகதேசத்தில் உறைகின்ற சிவபெருமான் தனது தலையினால் சுமக்கின்ற திருவடிகளை உடைய எம்பெருமான் எவ்வுளூரில் சேவை சாதிக்கிறான். 

முனிவன் மூர்த்தி மூவர் ஆகி வேதம் விரித்து உரைத்த
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன்
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு
இனியன் எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே.    1065 

      உலகங்களைப் படைக்க சங்கல்பம் செய்தவனும், கபிலனாய் அவதரித்தவனும், பிரம்மா, விஷ்ணு, சுவன் என்று மும்மூர்த்திகளுக்கு அந்தர்யாமியாய் இருப்பவனும், வேதத்தின் பொருளைக் விரிவாகச் சொன்னவரும், காயாம்பூ நிறம் கொண்டவனும், எல்லா உயிர்களுக்கும் தலைவனும், வடிவு கொண்ட புண்ணிய வடிவானவனும், ஸர்வ ஸ்வாமியுமாய், தேவர்களின் நாயகனும், எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி ஒரே வடிவாக நின்றவனும், நித்ய சூரிகளுக்குத் தலைவனாகவும், ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம’ என்று உபநிஷத்தில் ஓதப்பட்டவனும், கீதையை ஓதியவனும்,  தான் ஒருவர்க்கு மனத்தினால் எட்டாதவனாக  இருப்பினும், தன் அடியார்களுக்கு நெருங்கி இருப்பவனும், ஆலிலை மேல் பாலகனாகக் காணப்பட்ட போதும் அடியவர்களுக்குத் தந்தையாக விளங்குபவனுமான பகவான் திருஎவ்வுளூரில் கண் வளர்ந்தருளினான் என்று கூறுகிறார்.  மேலும் நாம் உடல்கள் அல்ல. அழியாத ஆத்மா என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆழ்வார் இப்பாசுரத்தை நமக்கு வழங்கியள்ளார்.      

பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகன் ஆய் அமைந்த
இந்திரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே.      1066 

      சீதையாய் அவதரித்து பந்தைப் பிடித்து மெல்லிய விரல்களை உடையவளும், குளிர்ந்த தாமரையில் பிறப்பிடமாகக் கொண்ட மகாலட்சுமி உறையும் மார்பை உடையவனும், நீலமணி போன்ற நிறத்தை உடையவனும், சுவர்க்கத்தில் வாழும் தேவர்களுக்குத் தலைவனான தேவேந்திரனுக்கும் நாயகனாக விளங்கும் எம்பெருமான் திருஎவ்வுளூரில் சேவை சாதிக்கின்றான் என்ற ஆழ்வார் கூறுகிறார்.
      ஒரு நாளும் எம்பெருமைனைப் பிரியாமல் பெருமான் மீது கொண்ட நித்ய அன்பினாலும், கையில் பந்துமாய் கொண்டு, அந்தப் பந்தையும் தாங்கி ஏந்த முடியாத தளிர் போன்ற மெல்லிய விரல்களைக் கொண்டவளான பிராட்டியானவள் தனது குளிர்ந்த தாமரைப் பூவைப் பிறப்பிடமாகக் கொண்டவள். என்றுமே எம்பெருமானை நினைத்தவண்ணம் உள்ளதால் இளம் பூவும் அவளுக்கு நெரிஞ்சி முள்ளாக நினைத்து அவனது திருமார்பில் வாசம் கொள்கிறாள். நீலநிறம் என்பது தூய்மையின் அடையாளம்.   எனவேதான் பகவான் நீலநிறத்தைக் கொண்டிருக்கிறார். அத்தகையவன் திருஎவ்வுளூரில் வாசம் கொண்டுள்ளான் என்பது இதன் கருத்தாகும். 

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈர் ஐந்தும் வல்லார்
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர் அமர் உலகே.     1067 

மலர் மாலைகளை ஏந்திக் கொண்டு வரும் பக்தர்கள் வணங்கும்படியாக எம்பெருமான் திருஎவ்வுளூரில் பள்ளி கொண்டுள்ளான். வண்டுகள் ரீங்கரிக்கும் மலர் வனங்களையுடைய, பகவத் குணங்களால் திருமங்கை நாட்டுக்கு அரசனான கலியன் அழகிய தமிழில் பாடிய இந்தப் பத்துப் பாமாலைகளையும் பக்தியுடன் சொல்ல வல்லவர் இந்த அண்டங்களை எல்லாம் ஆள்வது நிச்சயம். அவ்விதம் உலகப் பற்றில் இச்சை கொள்ளாதவர்கள் வைகுண்டத்தில் நித்ய சூரிகளாவர் என்ற கூறுகிறார் ஆழ்வார்.
      ஸ்ரீவைஷ்ணவர்கள் மலர்மாலைகளைக் கொண்டு ஆராதித்து அடிமை செய்து வாழும்படியான திருஎவ்வுளூரில் சேவை சாதிக்கும் எம்பெருமான் பற்றி ஆழ்வார் பாடும் பாசுரங்கள் அனைத்தும் இறைவனைப் போற்றும்படி அமைந்துள்ளது. இறைவனின் பெருமைகளைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இவை வரப்பிரசாதமாக அமையும் என்பது அசைக்க முடியாத உண்மையாகும். இப்பாமாலையை படிக்க வல்லவர்கள் துன்பம் என்ற பாதையை விட்டு விலகி உண்மையான பாதைக்கு திரும்புவார்கள். மேலும் இவ்வுலகைப் ஆளும் பேற்றினைப் பெறுவார்கள்.     

திருமழிசையாழ்வார்                                                                            நான்முகன் திருவந்தாதி 

நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள்
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான்            2417 

      ஆதிசேஷன் என்ற படுக்கையின் மேல் திருப்பாற்கடலில், திருக்குடந்தையில், திருவெஃகாவில், திருவள்ளூரில், திருவரங்கத்தில், அன்பில் என்ற திவ்யதேசங்களில்  அரிதுயில் கொள்ளும் எம்பெருமான், ஆதிமுதல்வன் அடியார்கள் உள்ளத்திலும் புகுவதற்கு காத்துக் கிடக்கிறான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      பல புனித தலங்களில் சயனித்திருக்கும் பெருமானை நாம் நெருங்கினால் அவன் விரைந்து நம்மில் புகுந்து கொள்ளக் காத்திருக்கிறான்.  ஆனால் நாம் இத்தகைய பேரானந்தப் பெருவாழ்வினைப் புறந்தள்ளிவிட்டு அழியும் பொருட்களுக்குப் பின்னால் சென்று காலத்தை விரயமாக்கி, பின் மரண காலத்தில் புலம்புகிறோம். எனவே பகவானை அடைவதற்கு வாழும் காலத்திலிருந்தே அவனை நெஞ்சில் நிறுத்த முயற்சிக்க வேண்டும். எம்பெருமான் நம் உள்ளத்தில் வந்து நித்தியவாசம் புரிவதற்கு தயாராக உள்ளார். அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆழ்வாரின் கருத்தாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...