வியாழன், 27 நவம்பர், 2025

60. திருவல்லிக்கேணி

 


திருமங்கையாழ்வார்                                                                                       பெரிய திருமொழி 

வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே!    1068 

       தனுர்யாகம் என்ற திருவிழாவினை கம்சன் சிறப்பாக நடத்தினான். அதற்கு கண்ணனை வரவழைத்து மல்லர்களைக் கொண்டு அவனை அழிப்பது என்ற எண்ணத்தில் இருந்தான். கண்ணனைக் கொல்வதற்காக மதம் பிடித்த குவலயாபீடம் என்ற யானையைக் கொண்டு அவனை கொல்லத் துணிந்தான்.  ஆனால் கண்ணனானவன் அனைவரையும் அழித்து துவம்சம் செய்தான்.  அத்தகையவன் திருபுரமெரித்த சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை பதரிகாச்ரமப் பெருமானாக நின்று போக்கி சிவனைக் காத்தார்.  களைந்தொழிந்த தேவனும் எதிரிகள் வீழும்படி சாட்டையை திருக்கையில் பற்றிக்கொண்டு பார்த்தசாரதியாய் சேவை சாதிக்கின்றான். தனது சிற்றன்னை சொன்ன சொல்லை ஏற்று முடியினைத் துறந்து வனம் சென்றவன். இவ்வாறு கண்ணனாகவும், ராமனாகவும்  அவதரித்து அக்கால மகான்களை வாழ்வித்தருளின பகவான் திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான்.     

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதில் இன் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுதேத்தும்    
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே      1069     

      பகவான் வேதத்தின் பொருளாகவும், சுவையாகவும் விளங்குபவன். பற்றற்ற வாழ்வினை மேற்கொள்ளும் முனிவர்கள் உண்ணும் குற்றமற்ற கனி போன்றவனும் அவனே. உலகத்தார் பணிந்து போற்றும் ஆதிநாயகனும் அவனே. அமிர்தத்தைப் போன்றவனாவான். என்னை எந்நாளும் அடிமை கொண்டவன்.  இத்தகைய பெருமைகள் உடையவனை நிகரில்லலாப் பெண்கள் வாழும் மாடங்கள் நிறைந்த திருமயிலையின் அடுத்துள்ள திருவல்லிக்கேணியில் கண்டேன் என்ற கூறுகிறார் ஆழ்வார்.
      பகவான் வேத ஸ்வரூபியாக இருப்பவன். உலகில் ஒவ்வொரு மக்களின் விருப்பத்திற்கேற்றவாறு உபாயங்களையும், பலன்களையும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருமங்களின் பலன்படி அளிப்பவன். நந்தகோபன் வயிற்றில் பிறந்த ஆனைக்கன்று போன்ற பிள்ளையானவன். தினமும் அவனைக் காண வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுபவன். பூமியில் உள்ளோரெல்லாம் வணங்கித் துதிக்கும் ஜகத்காரணனானவன். தன்னை விரும்பி வருபவனைத் தூக்கி கழுத்தில் அமர்த்தி சுமப்பவனும், தன்னை நிந்திப்பவர்களை விட்டு விலகும்படி இருப்பவனும் அவனே. தினமும் சேவிக்கத்தகுந்த வடிவழகைப் பெற்றவனானவன் திருவல்லிக்கேணியில் வாசம் செய்கின்றான் என்பது இதன் பொருளாகும்.                                         

வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண் உரு ஆகி
அம்சுவை அமுதம் அன்று அளித்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே       1070  

        கிருஷ்ணனைக் கொல்லத் தாய் வடிவில் கபடமாக வந்து பாலூட்டிய பூதனை என்ற அரக்கி அலறிப் பூமியில் விழும்படி செய்தவன் எம்பெருமான். அசுரர்களுக்குக் காலனாக இருப்பவன்.  வித்யாதரர், தேவர், சாரணர், சித்தர் முதலானவர்கள் வியந்து போற்றும்படி மோகினி வடிவம் எடுத்துத் தேவர்களுக்கு அமுதத்தை வழங்கியவன். அத்தகைய பெருமைகளைக் கொண்டவனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன் என்ற கூறுகிறார் ஆழ்வார்.

      கம்சன் பலவிதமாக கிருஷ்ணனைக் கொல்வதற்கு முயன்று தோற்றுப் போனான். பூதனை என்னும் அரக்கியை பெண் உருவம் கொண்டு தனது விஷப்பாலை அருந்திக் கொல்ல நினைத்தாள். கிருஷ்ணன் அவளை கொன்று முடித்தான். அதுபோன்று திருமால் தேவர்களுக்காக பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, அசுரர்கள் அதனைப் பறித்தனர். ஜெகன்மோகனனான பெருமான் மோகினி உருவம் கொண்டு அமுதத்தை மீட்டெடுத்தார். இத்தகைய பெருமான் நம்மைக் காக்க திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான் என்பது இதன் பொருளாகும். 

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து
ஆயர் எந்தம்மோடு இன ஆநிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக்கேணிக்கண்டேனே.   1071                             

      இந்திரனுக்கென்று யாதவர்கள் கொண்டாடிய விழாவில் பழங்காலம் தொட்டு செய்து வருகின்ற மந்திர விதிப்படி பூஜை நடத்தாமல் தடுத்த கண்ணன் மீது சினம் கொண்டு இடைவிடாமல் மழை பொழிவிக்க ஆயர்கள் மனம் நொந்தனர். எங்கள் தலைவனே! எங்களோடு பசுக்கள் இனமும் துன்பப்படாது காத்தருள்வாய் என்று பிரார்த்தனை செய்தனர். அப்போது பெரிய கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து அருளினவனை திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார் ஆழ்வார்.

      இந்திரனுக்கு செய்யவுள்ள பூஜை குறித்து கண்ணன் வினவியபோது வருடத்திற்கு ஒருமுறை இத்தகைய பூஜை செய்து அவனை மகிழ்விப்போம் என்றனர். உங்களை எல்லாம் காப்பது இந்த கோவர்த்தன மலை. எனவே அதனை வழிபடுவதே சிறந்தது என்றான். இதனால் சினம் கொண்ட இந்திரன் கோகுலத்தில் அடைமழை பெய்வித்து அவர்களை துன்பத்தில் ஆழ்த்தினான். ஆனால் கண்ணனோ கோவர்த்தனத்தை தாங்கிப் பிடித்து மக்களையும் ஆநிரைகளையும் காத்தருளினான். அத்தகையவன் இன்று திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான். 

இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு  இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு  எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக்கேணிக் கண்டேனே.   1072     

      தனக்கு இனிய  துணைவியான தாமரையில் பிறந்த திருமகளை மார்போடு இணைத்துக் கொண்டவன். பூமிதேவியின் நாயகன். ஆயர்குலச் செல்வியான நப்பின்னையின் மணாளன். மற்றவர்க்கெல்லாம் உறுதுணையாக இருப்பவன், பஞ்ச பாண்டவர்களுக்காக தூது சென்றவன். என் குலத் தந்தையாகிய பகவானைத் திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார் ஆழ்வார்.
      திருப்பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமியை துணையாக ஏற்றார் பகவான். பூமி பிராட்டிக்கு வந்த துன்பங்களைக் களைந்து அவளையும் துணையாக ஏற்றார்.  ஏழு காளைகளை அடக்கி நப்பின்னையின் மணாளனாகப் பெற்றார். இத்தகையவன் உலக உயிர்கள் அத்தனையும் காத்து அருள்கிறான். சத்தியத்தைப் பின்பற்றுபவர்களுக்குத் துணையாக இருப்பவன். எளியவர்களையும் ஏற்பவன். இத்தகைய நற்குணங்களைப் பெற்ற பெருமான் திருவல்லிக்கேணியில் உள்ளான். அவனை சரண் புகுந்து பேரின்ப வாழ்வினைப் பெற வேண்டும் என்பது இதன் பொருளாகும். 

அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்அணி இழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது எம் பெருமான் அருள் என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை திருவல்லிக்கேணிக் கண்டேனே!      1073 

      திருதராட்டினன் மகனாகிய துரியோதனனின் தம்பி துச்சாதனன் திரௌபதியிடம் சென்று எங்களுக்கு அடிமை செய்வாய் என்று சொல்ல, அது கேட்டுத் துடித்து கண்ணனைக் காப்பாற்றுமாறு அழைத்தாள். திரௌபதியின் இந்த வருத்தத்தால் கௌரவர்கள் நூறு பேர்களின் மனைவிகளின் மாங்கல்யம் இழக்குமாறு செய்தான் கண்ணன். இந்திரன் மகனான அர்ச்சுனன் தேருக்குச் சாரதியாக நின்று பாரதப் போரில் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்த பகவான் திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான்.
      அரசர்க்கெல்லாம் தாம் அரசன் என்ற செருக்குடன் செயல்பட்ட துரியோதனனின் தம்பி துச்சாதனன் கூறிய சுடுசொற்களைக் காது கொடுத்து கேட்க முடியாமல், கரிய இருள் போன்ற கூந்தலையுடைய திரௌபதி கண்ணனை நினைத்து ‘கோவிந்த! புண்டரீகாக்ஷ; ரக்ஷமாம் சரணாகதாம்’ என்று பெருமானைச் சரணடைந்தாள். அவளின் வயிற்றெரிச்சல்  காரணமாகவே பார்த்தனுக்கு சாரதியாக இருந்து கௌரவர்களின் மனைவிகள் அனைவரையும் கைம்பெண்களாக்கி கதறி அழுமாறு  செய்து முடித்தான் கண்ணன். இத்தகைய பெருமான் அல்லிக்கேணியில் பார்த்தசாரதியாக அருள் பாலிக்கின்றான் என்பது பொருளாகும். 

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.  1074 

      பரதாழ்வானும், சத்ருக்னனும், இலட்சுமணனோடு சீதாப் பிராட்டியும் எல்லாக் காலங்களிலும் துதி செய்யும்படி வீற்றிருப்பவன், இராவணனைக் கொன்ற எம்பெருமான், அவனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன். அல்லி மலர்கள் மணம் வீசும் குளிர்ந்த சோலைக்குள் குயில்களின் பாட்டிற்கேற்ப ஆடும் மயில்கள் நிறைந்தது. சூரியனின் கதிர்கள் நுழைந்தறியாத சோலை சூழ்ந்தது அந்த திருவல்லிக்கேணி என்ற பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.
      தந்தைக்கு மகனாக, தாய்க்குப் பிள்ளையாக, மனைவிக்கு கணவனாக, தம்பிக்கு அண்ணனாக, பகைவர்களுக்கு காலனாகத் திகழ்ந்தவன் இராமன். இலக்குமணன் ஸ்ரீராமனை விட்டு பிரிய இயலாத காரணத்தினால் பிராட்டியுடன் தம்மையும் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டினான். இவற்றோடு பரத சத்ருக்னனையும் தம் மனதில் சேர்த்தான். இத்தகைய ஸ்ரீராமனை திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார் ஆழ்வார். சூரியனே உள்ளே வராதவாறு குளிர்ச்சியான அழகிய மணம் வீசும் சோலைகள் நிறைந்தும், அழகு மயில்கள் நடனம் புரியவும், குயில்கள் கானம் இசைக்கும் தலமாக இத்தலமாக விளங்கியது என்ற பொருளில் இப்பாடல் அமைந்துள்ளது. 

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிரம் நாமம்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.       1075 

      பள்ளியில் படித்துவிட்டு வந்த தன் மகனாகிய பிரகலாதனுடைய வாயிலிருந்து விஷ்ணுவின் ஓராயிர நாமங்கள் வெளிவர, அதை எள்ளளவும் பொறுக்க மாட்டாமல் இரணியன் மகனைக் கோபித்தான். தூணிலே இருப்பான் என்று மகன் சொல்ல தூணை கதையால் உடைக்க, பிறை போன்ற வளைந்த பற்களுடன், தீக்கண்களுடன், அகன்ற வாயைத் திறந்து இரணியனை மடிமீது இருத்தி அழித்த தெளிசிங்கப் பெருமானாக வந்தவரை திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார் ஆழ்வார்.
      இறவாத வரம் பெற்றவனும், அனைவரும் தன்னைக் கடவுளாக வணங்குமாறு செய்வித்த இரணியன் தன் மகனையும் ‘இரண்யாய நம: என்று கூறுமாறு தெரிவித்தான். ஆனால் பிரகலாதனோ அஷ்டாக்ஷர மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்று தொடர்ந்து சொல்லி வந்தான். இதனைக் கண்டு வெறுப்புற்ற அசுரன், மகனென்றும் பாராமல் பல்வேறு சித்ரவதைகள் புரிந்தான். தூணில் இறைவன் உள்ளான் என்று கூற, இரணியன் தூணை உதைக்க அதிலிருந்து பிரவேசித்த நரசிம்ம மூர்த்தி அசுரனை வதம் செய்தார். அத்தகைய பெருமானை திருவல்லிக்கேணியில் கண்டேன் என்று கூறுகிறார் ஆழ்வார். 

மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கைஎடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட்டானை
தேன் அமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.     1076     

      மீன்கள் நிறைந்த தடாகத்தில் தினமும் வழிபாட்டிற்காக புதுத் தாமரை மலர் பறிக்கும் கஜேந்திரன் என்ற யானை துதிக்கையைத் தூக்கிப் பிளிறுமாறு, முதலை ஒன்று அதன் காலைப் பற்றியது. அந்த யானையின் துன்பம் தீர்க்க கருடன் மீது அமர்ந்து விரைந்து வந்த பகவான் சுதர்சனச் சக்கரத்தை முதலை மீது ஏவினான். யானையும் முதலையும் முற்பிறவியில் அரசர்களாக பிறவி எடுத்து பெரியோர்களை அவமதித்த காரணத்தால் அவர்கள் இட்ட சாபத்தின் காரணமாக அடுத்த பிறவியில் யானையாகவும், முதலையாகவும்  பிறந்தனர். யானையை முதலையிடமிருந்துக் காத்த அந்த எம்பெருமானைத் திருவல்லிக்கேணியில் நான் கண்டேன். தேன் நிறைந்த மலர்களையுடைய சோலைகள் நிறைந்த பெரிய மாடங்களைக் கொண்ட மயிலையை அடுத்து இருப்பது அந்தத் திருத்தலமாகும். 

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நல் மயிலைத் திருவல்லிக்கேணி  நின்றானை
கன்னி நல் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்து உடன் வல்லார் சுகம் இனிது ஆள்வர் வான்  உலகே.     1077 

      நித்யமாய் குளிர்ந்த நந்தவனங்களும், நீர்நிலைகளும், பொய்கையும், மதில் சுவரும், மாட மாளிகைகளும், மண்டபங்களும் கொண்ட பாண்டிய குல மன்னனான தொண்டைமான் அமைத்த மயிலைக்கு அருகிலுள்ள திருவல்லிக்கேணியில் நின்றருளும் பெருமானைக் குறித்துப் பாடியவரும், சிறந்த வைஷ்ணவ லஷ்மியை தன்னகத்தே கொண்டவருமான திருமங்கை மன்னன் அருளிய சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் பக்தியுடன் பாடவல்லவர்கள் ஆனந்தமயமான வைகுந்தத்தை ஆளப்பெறுவர் என்று ஆழ்வார் கூறகிறார்.
      திருவல்லிக்கேணி தலத்தின் அருகில் அழகிய மலர்வனங்களும், பொய்கையும், மாட மாளிகைகள் கொண்ட மதில் சுவர்களை அரசன் தொண்டைமான் அமைத்துள்ளான். இத்தலத்துப் பெருமான் அடியார்களை எதிர்பார்த்த வண்ணம் நின்றருளுகிறான். பாண்டிய மன்னனுக்குத் தென்னவன் என்றும் பெயர் உள்ளது. ‘தென்கூடல் கோன் தென்னவன்’ என்று பெரியாழ்வாரும் பாடியுள்ளார். அழகிய சிறந்த மாதர்கள் வாழும் இடமான மயிலையைக் குறிப்பிடுகிறார் ஆழ்வார். இதனை வடமொழியில் ‘மஹிளாபுரீ’ என்றும் தமிழில் ‘மயிலை’ என்றும் குறிப்பிடுகின்றனர். இத்தனை சிறப்புமிக்க மயிலைக்கு அருகில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாக பெருமான் சேவை சாதிக்கின்றார் என்ற பொருளில் அமைந்துள்ளது. 

பேயாழ்வார்                                                                                                     மூன்றாம் திருவந்தாதி 

வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை
ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக்கேணியான் சென்று          2297 

      அழகிய இதழ்களைக் கொண்ட தாமரைப் பூவில் தோன்றிய மகாலட்சுமி வீற்றிருக்கும் திருமார்பை உடையவன். கரையில் வந்து வீசும் வெண்மையான அலைகளில் உண்டான சிவந்த பவழங்களும், வெண்மையான முத்துக்களும், மாலையில் ஏற்படும் அலங்காரத் தீபங்களாகத் தோற்றமளிக்கும் திருவல்லிக்ககேணியில் அருள் புரியும் பாரத்தசாரதி எனக்குத் தஞ்சம் அளிப்பார் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      திருப்பாற்கடலிலிருந்து தம் திருவுள்ளத்திற்கு வரும்போது திருவல்லிக் கேணியில் வந்து தங்கினார். அருகிலுள்ள கடலில் அலைகள் வந்து வீசி மோதும்போது சிவந்த நிறம் கொண்ட பவழங்களும், வெண் முத்துக்களும் கொழிக்கப்படுகின்றன. அவை சந்தியா காலத்தில் ஏற்றப்படும் மங்கள தீபமோ என்று எண்ணும்படி உள்ளது. இவை இரு வர்ணத்தில் பிரகாசிப்பதால் திருவிளக்கு என்று போற்றப்படுகின்றது. எந்நேரமும் மாலைப் பொழுதின் திருவிளக்காக உள்ளது. திருவல்லிக்கேணி தலத்தில் எப்போதும் மாலைப் பொழுது திருவிளக்கு எரிந்து கொண்டிருப்பது போல் உள்ளது. இத்தகைய தலத்தில் எழுந்தருளியுள்ள திருமாமகள் கொழுநன் எனக்கு ஸ்வாமியாகத் திகழ்கிறார் என்று கூறுவது போல் உள்ளது.      
 

திருமழிசையாழ்வார்                                                                             நான்முகன் திருவந்தாதி 

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்?
வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீள் ஓதம்
வந்து அலைக்கும் மா மயிலை மாவல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்து அணை.      2416 

      பெரிய அலைகள் கடலில் வந்து வீசும் சிறந்த மயிலை நகருக்கு அருகே உள்ள திருவல்லிக்கேணியில் தொண்டைமான் சக்ரவர்த்தியின் பிரார்த்தனைக்காக பார்த்தசாரதியாக தரிசனம் கொடுத்தவன், ஐந்து தலைகளையும், ஐந்து வாய்களையும் கொண்ட ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கிறான். வாய் திறந்து ஒன்றும் பேசாமல் உள்ளானே!  திருவடியால் உலகினை அளந்த களைப்போ என்று வினவுகிறார் ஆழ்வார்.
      அர்ச்சாவதாரத்தில் பெருமான் நின்ற, கிடந்த, இருந்த நிலையில் நமக்கு சேவை சாதிக்கின்றார். ஒருநாளும் தனது சோதிவாயால் பேசியதில்லை என்பது ஆழ்வார்கள் அறிவார்கள். இருப்பினும் பகவான் பெயரில் கொண்ட அதீத பக்தியால் நேரடியாகப் பேசி தனது அன்பை வெளிப்படுத்துகிறார்கள். நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் புளிங்குடி திவ்ய தேசப் பெருமாளிடம் நேரில் பேசுவது போல் அமைந்துள்ளது. இவரே திருக்குடந்தை ஆராவமுதனை பாடும்போது ‘நடந்த கால்கள் நொந்தனவோ’ என்று பரிவுடன் பாடுகிறார். இருப்பினும் சோதிவாய் திறந்து ஒரு வார்த்தை பேசாமல் அரவணையின் மேல் அரிதுயில் கொண்டுள்ளாரே என்று கேட்டு, காடும், மேடும், பூமியையும் தனது கால்களால் அளந்ததால் ஏற்பட்ட களைப்போ என்று வினவுகிறார் ஆழ்வார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...