வெள்ளி, 16 ஜனவரி, 2026

2. திருக்கோழி - உறையூர்

 


குலசேகராழ்வார்                                                                         பெருமாள் திருமொழி

       

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லை இல் அடிமைத் திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன்
சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே.    667

 

செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிராட்டியான திருமகளின் கணவரான அரங்கனுடைய உண்மையான பக்தர்களுடைய அளவிடமுடியாத அடிமைத் திறத்தினில் எப்போதும் ஈடுபாடு கொண்ட மனத்தவராய் இருப்பவர், கொல்லி நகர் காவலனாகவும், மதுரை அரசனாகவும், உறையூர் வேந்தனாகவும் விளங்கும் குலசேகர ஆழ்வார் அருளிய இந்த இனியதான சப்தங்களையுடைய பாசுரங்களை மெய்யன்போடு பாடும் பாகவதர்களுக்கு நான் என்றும் தொண்டனாக இருப்பேன்.

        பெருமானின் கல்யாண குணங்களில் ஒன்று அடியவர்களின் குற்றங்களையெல்லாம் குணமாகக் கொண்டு அக்குற்றங்களை நம்மிடத்திலிருந்து அகற்றி நமக்குக் கருணையை புரிபவன். சிறு குற்றத்தைப் பெரிதாக்கி அற்பசுகம் காணும் குணம் கொண்ட மக்களிடையில் பகவான் நாம் செய்யும் பெரிய பாவங்களையும் மன்னித்துக் காக்கும் கருணா மூர்த்தியாக விளங்குபவன். அத்தகைய பெருமானை நாம் மறந்து திரிகின்றோம். ஆனால் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் பெற்றோர் நம்மைக் காப்பதுபோல் பெருமான் காத்து வருகிறான்.

 

திருமங்கையாழ்வார்                                                                           பெரிய திருமொழி

       

கோழியும் கூடலும் கோயில் கொண்ட
     கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்
     பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்
     மா கடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி
     அச்சோ ஒருவர் அழகியவா.   1762

 

உறையூரிலும் தென்மதுரையிலும் குடிகொண்டிருக்கும் கோபாலன் தமது திடமான தோள்களில் மணம் வீசும் திருத்துழாய் மாலையும், கைகளில் சுதர்சனச் சக்கரமும், பாஞ்சஜன்னியம் என்று சங்கினையும் தரித்துள்ளார். அனைவராலும் விரும்பத் தக்க எம்பெருமான் நம் இல்லத்தில் உள்ளார்.  பண்புள்ளம் கொண்ட இளைவரான இவரது வாயின் நிறம் செம்பவளமாகும். மரியாதைக்குரிய இவரது உருவமோ அழகிய பவளக் குவியலாகும். இத்தகைய அழகை நான் என்னவென்று சொல்வேன்’ என்கிறாள்.

தோழி! இப்பெரியவர்‌ உறையூரிலும்‌ தென்மதுரையிலும்‌ கோயில்‌ கொண்டிருந்து காட்சிதந்த பெரியவர்‌ போலே இருக்கன்றார்‌. மலை போன்று வலிமை பொருந்திய நான்கு திருத்தோள்களை உடையவராக யிருக்கன்றார்‌; திருமேனி நிறத்தில்‌ கருங்கடலை ஒத்திருக்கின்றார்‌. திருக்கைகளில்‌ திருவாழியும்‌ திருச்சங்குமாய்த்‌ திகழ்‌கின்றார்‌. இப்பெரியவரை இதற்கு முன்‌ எங்கும்‌ கண்டதாக நினைவில்லை. இவர சிற்சில அம்சங்களுக்கு ஏதோ சிலவற்றை உவமை கூறினேனத்தனை ஒழிய இவருடைய வடிவழகு பேச்சுக்கு நிலமன்‌றுகாண்‌ என்கிறாள்‌.

        பகவான் ஆண், பெண், விலங்குகள், பறவைகள் ஆகிய அனைத்து உயிர்களுக்கும் தலைவன். அதில் பெண்ணும் அடங்குவாள். இக்காலத்தில் ஆண் பெண் உறவில் காமம்தான் முன்வந்து நிற்கிறது. காமத்திற்கு அப்பாற்பட்டது தெய்வீக நிலை. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ஆத்மாதான். இதை நமக்குப் புரிய வைக்கவே பெண்ணை முன்னிருத்தி பாசுரங்கள் அமைத்துள்ளார் ஆழ்வார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...