நம்மாழ்வார் திருவாய் மொழி
கூடச் சென்றேன் இனி என் கொடுக்கேன்?
கோல்வளை நெஞ்சத்
தொடக்கம் எல்லாம்
பாடு அற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார்முன் பரிசு
அழிந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற
மாயக் கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல் போர்
ஆழிவலவனை ஆதரித்தே 3685
அழகிய மாட மாளிகைகளையும், கொடிகள்
பறக்கும் நெடிய மதிற் சுவர்களையும் உடைய தென்குளந்தை என்னும் தலத்தில் மேற்குத்
திசையில் நின்றருளும் மாயக்கூத்தன், கருடனைக் கொடியில் உயர்த்திப் பல்வேறு யுத்தங்களை
வென்றுள்ளான். அந்த சக்ரபாணியை விரும்பி தேடி அடைவதற்காக வந்து சேர்ந்தேன். என்
நெஞ்சம் தொடங்கி வளையல்கள் வரை எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன். இனி
கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. பல்வேறு வளைகள் அணிந்த மங்கையர் முன் நாணத்தை
விட்டு நிற்கிறேன் என்று தலைவி கூறுகிறாள்.
இத்தலத்துப் பெருமானான
மாயக்கூத்தன் மாயப்பிணையொன்றைப் பிணைத்து அதில் நம் எல்லாரையும் மயக்கிக் கட்டி
வைத்து இத்தகையதொரு கூத்தினை ஆடுகிறான். மரக்கால் கூத்து, குரவைக் கூத்து
என்று பல்வேறு கூத்துக்களை ஆடுகிறான். எம்பெருமான் தன் மீது அமர்ந்து சவாரி
செய்வதை எண்ணி ஆனந்தக் கூத்தாடும் கருட பகவானை ஆழ்வார் ஆடல் பறவை என்று
குறிப்பிடுகிறார். கருட பகவான் தன் மீது கொண்ட அளவற்ற பக்தியின் காரணமாக
இத்தலத்தில் தனக்கு சமமாக அமர்ந்து காட்சி தரும் பேற்றினை பெருமான் கருடனுக்கு
அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக