செவ்வாய், 25 நவம்பர், 2025

64. சோளசிம்ம்புரம் என்னும் திருக்கடிகை -

 


திருமங்கையாழ்வார்                                                                                      பெரிய திருமொழி 

மிக்கானை மறை ஆய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங் குன்றின்மிசை இருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்துபோனேனே    1731 

      மிகவும் சிறந்தவனை, வேதமாய் விரிந்த தீபம் போன்றவனை, என் மனத்தினுள் புகுந்தவனை, புகழ் பெற்ற ஒளி பொருந்திய தங்கமலை போன்றவனை, எல்லாத் தகுதிகளும் கொண்டவனை, கடிகை என்னும் பெரிய மலையின் மீது வீற்றிருப்பவனை, இனிப்பான வெல்லக்கட்டி போலவும், கனி போலவும் இருக்கும் யோக நரசிம்மரைச் சரண் அடைந்து உய்ந்தேன் என்ற பொருளில் இப்பாடல் அமைந்துள்ளது.
      பகவான் தீப ஒளியாக விளங்குகிறார்.  தேவைப்படும் காலங்களில் அவர் உருவங்களைத் தாங்குகிறார். இறைவனது ஒளி என்றும் மறைவதில்லை. எனவே அவனை ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்று போற்றுகிறோம்.  உடலுக்குத்தான் மரணம், அதிலுள்ள ஆத்மாவும் இல்லை. அதை எவராலும் அழிக்க முடியாது. துணிந்து நின்று உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்வாயாக என்று பகவத்கீதையில் பகவான் அருளியிருக்கிறார். சோளசிம்மபுரம் என்கின்ற திருக்கடிகை என்னும் தலத்தில் நரசிம்மராகக் குடியிருகிறார். கடிகை என்றால் நாழிகை என்பதாகும். இத்தலத்தில் ஒரு நாழிகை இருந்தாலும் நமக்கு முக்தி கிடைப்பது நிச்சயம் என்பது இதன் பொருளாகும். 

கண் ஆர் கண்ணபுரம் கடிகை கடி கமழும்
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல்திசையுள்
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெம் சுடரை
கண் ஆரக் கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்றுகொலோ?     1736 

       நோக்கிய விழிகளை மீட்டெடுக்காதபடி காட்சி தரும் திருக் கண்ணபுரத்திலும், சோளிங்கபுரத்திலும், மணமுள்ள குளிர்ச்சியான தாமரை மலர்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்த தலைச்சங்கத்தில்  மேற்கு திசையில் வானவர்கள் நாள்தோறும் அனுபவிக்கும் சந்திரன் போன்றவனை,  காலைநேரக் கதிரவனை, அடியேனின் கண்கள் கண்ணார தரிசித்து மகிழும் நாள் எந்நாளோ என்று ஆழ்வார் கூறுகிறார்.
      நாம் காணும் காட்சிகள் நிலையற்றது என்று அறியாமல் ஏமார்ந்து துன்பம் அடைகிறோம். மனம் போன போக்கில் நாம் செல்கிறோம். அதனால் மோகமும், காமமும், பணப்பித்தும் நம்மை சீர்குலைக்கின்றன. ஒருநாள் மரணமும் நம்மை வந்து சேர்கின்றது. போகத்தில் வாழ்ந்தவர்கள் நற்கதியை எவ்விதம் அடைய முடியும். எனவே நாளும் நம் மனதை பெருமானின் பாதக் கமலங்களில் பதிக்க வேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்தாகும். கைப்பால் ‘அலைச்சங்கமேந்து மணியரங்கத் தம்மான் தலைச்சங்க நாண்மதியத்தான்’ என்று பிள்ளை பெருமாள் அய்யங்கார் தனது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் பாடியுள்ளார்.   

பேயாழ்வார்                                                                                                 மூன்றாம் திருவந்தாதி 

பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை
இளங் குமரன் தன் விண்ணகர்       2342 

      திருப்பாற்கடல், வைகுந்தம், திருவேங்கடம் வண்டு கூட்டங்கள் நிறைந்த நந்தவனங்களைக் கொண்ட அழகிய சோளிங்கபுரம், திருவிண்ணகர் போன்றவற்றில் நித்திய வாலிபனான ஸ்ரீமந் நாராயணனுக்கு முன் காலத்திலிருந்தே கோயில்களாக உள்ளன. இப்போது என் உள்ளமும் அவன் உறைவிடமாக ஆகிவிட்டதே என்று கூறுகிறார் ஆழ்வார்.
      ஸ்ரீவைகுண்டத்தில் நித்யவாசம் செய்பவனுக்கு வியூகஸ்தானமான திருப்பாற்கடலும், மண்ணுலகிலுள்ள திருவேங்கடமும், வண்டு கூட்டங்கள் நிறைந்து காணப்படும் திருக்கடிகையும், அடுத்துள்ள திருவிண்ணகரும் ஆகிய திருப்பதிகளில் வாசம்புரியும் பெருமான் பல எதிரிகளை அழித்துள்ளான். அதுபோன்று என்னுள்ளில் இருக்கும் தடைகளான எதிரிகளை அழிப்பது அவன் பொறுப்பாகும். அது மட்டுமின்றி என் நெஞ்சிலே புகுவதற்காக திருப்பாற்கடலிலும், திருவேங்கடத்திலும் எழுந்தருளி நித்யவாசம் செய்கின்றான்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...