வெள்ளி, 5 டிசம்பர், 2025

46. திருவேளுக்கை

 


பேயாழ்வார்                                                                                                   மூன்றாம் திருவந்தாதி 

சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே
தாம் கடவார் தண் துழாயார்          2307 

      குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பரந்தாமன் ஒருநாளும் நீங்காத இடங்கள் எவையெனில் அனைத்திலும் சிறந்ததான என் நெஞ்சமும், சிவந்த கண்களையுடைய ஆதிசேஷனும், நிறைவான செல்வ வளம் கொண்ட பெரிய காஞ்சித் திருக்கச்சியும், திருவேங்கடமும், திருவெஃகாவும், திருவேளுக்கையும், ஆயர்பாடியுமாகும் என்று ஆழ்வார் கூறகிறார்.
       இவ்விதம் ஆழ்வார் சிறந்து தொழுத தம் உள்ளத்தை, பெருமான் நித்யசூரிகளிலும், உகந்தருளின நிலங்களைக் காட்டிலும் ஆழ்வார் விரும்பியவாறே அவரது நெஞ்சில் நித்யவாசம் செய்தார். திருவனந்தாழ்வானோ மதுவைப் பருகி மயங்குபவர் போல வேதங்களில் குறிப்பிடும் ஆராஅமுதைப் தினசரி அனுபவிப்பதால் ஏற்பட்ட சிவந்த கண்களைக் கொண்டுள்ளான். இதே கருத்தினை பெரியாழ்வார் தமது பெரியாழ்வார் திருமொழியில் ‘அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக வைத்து, என் மனந்தனுள்ளே வந்துவைகி வாழச்செய்தா யெம்பிரான்’ என்று கூறுகிறார். இதுபோன்று நாம் சொல்வதற்கான உறுதியை நாம் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருளாகும். 

அன்று இவ் உலகம் அளந்த அசைவே கொல்?
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று
கிடந்தானைக் கேடு இல் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே! காண்       2315 

      மனமே!  முன்பொரு காலத்தில் நின்று கொண்டே இவ்வுலகங்களை எல்லாம் அளந்ததால் உண்டான சிரமத்தாலேயோ திருவேளுக்கையில் வீற்றிருந்து, திருவெஃகாவில் சயனித்துக் கிடந்தானை, அழிவற்ற கல்யாண குணங்களைக் கொண்டவனை, முன்பு கம்சனை கொன்றவனைத் தரிசித்து வணங்கு என்று கூறுகிறார் ஆழ்வார்.
      நாம் பாவங்கள் பல புரிந்தாலும் அதைப் பற்றி சிறிதும் எண்ணாமல் நமது தலையிலே திருவடியை வைத்து நம்மைக் காத்து வருகிறான்.  காடும் மேடும் கொண்ட இவ்வுலகை அளந்த சிரமத்தினால் வேளுக்கையில் அமர்ந்தும், வெஃகாவில் பள்ளி கொள்ளவும் செய்தான். நம்மாழ்வாரும் தனது திருவாய் மொழியில் ‘கொடியார் மாடக் கோளூரகத்து புளிங்குடியும்’ என்ற பாசுரத்தில் இப்படிப் பல திருப்பதிகளிலே களைப்பாற இருப்பதும், கிடப்பதும் செய்தவனை என்று பாடியள்ளார். கொடிய புத்தி கொண்ட கம்சனை அழித்து அவன் நினைவை அவனுக்கே உணறுமாறு செய்வித்தார். இத்தகையவனை, நெஞ்சமே! பரிவுடன் அநுசந்திப்பாயாக என்று கூறுகிறார். 

விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு           2343 

      திருவிண்ணகரமும், திருவெஃகாவும், நீர்வளம் மிக்க திருமலையும், பூமியிலுண்டான வைகுந்த மாநகர் போன்ற பெரிய மாடங்களை உடைய திருவேளுக்கையும், அழகிய திருக்குடந்தையும், தேன் பாயும் சோலைகளையுடைய திருவரங்க மாநகரும், திருக்கோஷ்டியூரும், தனது உள்ளங்கையாலே (மாவலியிடம்) நீர் ஏற்ற பெருமான் தங்கும் இடங்களாகும்.  போகும் போது எத்தகைய எளிமையும் சௌசீல்யமும் கொண்டவனாகத் தோன்றினானோ அது போல் இத்திருப்பதிகளில் எளிமையாகக் காட்சி தருகிறான். இத்திருத் தலங்கள் அனைத்தும் மூர்த்தி சிறப்பு பெற்ற திருத்தலங்களாகத் திகழ்கின்றன.
      பிரம்மனின் துயர் துடைக்க திருவரங்கம் திவ்யதேசத்தில் பாம்பணையில் மேல் பள்ளி கொண்டு நம்மையெல்லாம் காத்து வருகின்றார். சிறப்பு மிக்க இத்தகைய தலங்களுக்குச் சென்று மிகவும் எளிதாக வரங்களைப் பெற முடியும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...