வியாழன், 18 டிசம்பர், 2025

26. திருஇந்தளூர்

 


திருமங்கையாழ்வார்                                                                      பெரிய திருமொழி      

 நும்மைத் தொழுதோம் நும் தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆ ஆ என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே?       1328

 

திரு இந்தளூரில் கோயில் கொண்டிருக்கும் பரிமள ரங்கநாதரே! தேவரீரை தாழ்ந்து வணங்கினோம். உமக்குச் சேவை செய்தே உயிர்  வாழும் தொண்டர்களாக இருக்கின்றோம். இப்பிறப்பிலே உம்மைப் பற்றின உணர்வாகிற ஆனந்தத்தைப் பெற்றிருக்கிறோம்.  இவ்விதமான எங்கள் விஷயத்தில் ஐயோ என்று மனமிரங்கி விரைவில் ஏதேனும் ஒரு கைங்கரியத்தை விரைவாக உண்டாக்கி தங்களை ஒருமுறையாவது தரிசிக்கும்படி செய்தால் நாங்கள் பிழைக்க மாட்டோமா என்று ஆழ்வார் கூறுகிறார்.

பெருவிடாய்ப்பட்டவன் ஒருகால் நாக்கு நனைக்கத் துளிதீர்த்தம் கிடைத்தால் போதும் என்பதுபோல இவ்வாழ்வார் திருவிந்தளூர்ப் பெருமானுடைய வடிவழகை ஒருகால் காணப்பெற்றால் போதுமென்கிறார்.  ஒருகால் கண்ட மாத்திரத்தில் தமக்குப் பூரணத்ருப்தி பிறந்துவிடும் என்று பொருளான்று; கண்ணில் சிறிது காணப்பெறுவோமாகில் பிறகு வளைத்துக்கொள்ளலாம் என்ற கருத்தாம்.

      மிகுந்த தாகம் கொண்டவன் நாக்கு நனைக்க ஒரு துளி நீர் கிடைக்குமா என்று தவிப்பது போல் ஆழ்வார் இந்தளூர் பெருமானின் வடிவழகை ஒரு நிமிடம் காணப்பெற்றால் அந்த ஒரு கணத்தில் பெருமாளைத் தனதாக்கிக் கொள்ளலாம் என்று கூறுகிறார். பகவானைக் காண்பது என்பது அவனுக்கு நாம் செய்யும் சேவையின் மூலமாக அவனை அடைவதாகும். அந்தச் சேவையை நமக்கு அளிப்பது பகவானின் விருப்பமாகும்.  நமது பக்குவ நிலையினை அறிந்து, நம் உள்ளத்தினை நன்கு உணர்ந்தபின் அத்தகைய சேவையினை பகவான் நமக்கு அளிப்பார். மனமென்னும் திருக்கோயிலை தூய்மையாக வைத்திருந்தால் அத்தகைய சேவையைப் பகவானே நமக்கு அளிப்பான் என்பது இதன் கருத்தாகும்.

      

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே.        1329

 

உள்ளத்தை விட்டு ஒரு நொடிப் பொழுதும் நீங்காதிருக்கும் என் செல்வமே! அனுபவிக்க அனுபவிக்க இன்பமாக இருக்கின்ற தேவகி மைந்தனே! அழகிய குளிர்ந்த திருவாலிநகர் மணாளனே! திருமாலிருஞ் சோலையில் உலாவி வரும் யானைக் கன்று போன்றவனே!  என்றும் அணையாத தீபச்சுடரே! திருநறையூரில் அருள் புரியும் பரிபூர்ணனே! இந்தளூர் எம்பெருமானே! அடியேனிடம் சிறிதும் இரக்கம் காட்டவில்லையே என்று ஆழ்வார் கூறுகிறார்.

 பிரானே! கடலிலே நீர் வற்றுவதுண்டோ?  உன் திருவுள்ளத்திலும் இரக்கம் மாறுவதுண்டோ? இப்படியும் என்னைப் படுகொலை அடிக்கலாமோ? பாவியேனுக்குச் சிறிதும் இரங்கியருள மாட்டாயோ? என்கிறார். சோலைக்குள்ளே வளர்ந்தவொரு இளவானைக் கன்றுபோலே இணியனாய் இருப்பவனே!  திருமாலிருஞ்சோலையில் திகழும் யானைக்குட்டியே! என்று செல்லமாக அழைக்கிறார். விளக்கில் திரியும் எண்ணெயும் புகையுமான அழுக்கின்றியே புகர்தான் ஒருவடிவு கொண்டதோ என்னும்படியாக ஞான ஸ்வரூபனாய்ப் பிரகாசிப்பவனே! சிறிதேனும் இரங்கவேணும் என்கிறார்.

      இப்பாசுரத்தில் ஆழ்வார் பகவானை இறைஞ்சிக் கேட்கிறார். கடலில் நீர் வற்றுவதுண்டோ. உன் திருவுள்ளத்தில் இரக்கம் மாறுவதுண்டோ, இப்படியும் என்னைக் கொல்லலாமா? பாவியான எனக்குச் சிறிதும் இறங்க மாட்டாயோ? என்று வினவுகிறார். நம் மீது இரக்கம் கொண்டுள்ளதால்தான் நாம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பகவானின் கருணை இன்றும் அமுதவெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் நாம் அற்ப பொருளுக்காக அவரது கருணையை அலட்சியம் செய்கிறோம். ஆத்ம தரிசனத்தைத் தவிர வேறு எதையும் பகவானிடம் வேண்டக் கூடாது என்ற மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள்.

             

பேசுகின்றது இதுவே வையம் ஈர் அடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர்! உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே     1330

 

நான் சொல்வது இதுவே. உலகங்களையெல்லாம் ஈரடியில் அளந்து கொண்ட இந்தளூர் நாதரே! வண்டுகள் மொய்த்து ரீங்காரமிட்டுக் கொண்டே தேனை உறிஞ்சும் மாலையைத் திருமுடியில் அணிந்து கொண்டிருக்கும் உம்மைக் கண் குளிர தரிசிக்க வேண்டுமென்கிற ஆசைக் கடலில் விழுந்து இங்கு விரைந்து வந்திருக்கின்றோம்.  மற்றவர்களின் கேலிப் பேச்சு எங்களது மூட நம்பிக்கையைப் பற்றியதாகும்.  உனக்கு ஒரு பழி வராமல் இருப்பதற்காகவாவது  நீ காட்சி தரக்கூடாதா? என்று வினவுகிறார் ஆழ்வார்.

இந்தளூரீரே! உலகங்களை இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவரும் வண்டுகள் மொய்த்துக்கொண்டு ரீங்காரம் செய்யும் மாலையை முடியில் அணிந்தவருமான இவ்வுலகில் உம்மைப் பார்க்க விரும்பி ஆசை என்னும் கடலில் வீழ்ந்து அறிவு கெட்டோம்.  நீர் முகம் காட்டாததால் அயலாரும் இதுபற்றிப் பழித்தார்கள். உமக்கொரு பழிச்சொல் வரக் கூடாது என்பதே நாம் விரும்புவது என்கிறார்.

      இந்தளூர் எம்பிரானே! உன்னை நான் சேவித்தாலும்  சரி, இழந்தாலும் சரி, இது விஷயமன்று. நீ குணசாலி என்ற பெயரெடுக்க பல இன்னல்களைப் பட்டுள்ளாய். மூன்றடி மண் அளந்தாய். பல்வேறு அவதாரங்களில் துன்பப்பட்டு இத்தகைய குணத்தினைப் பெற்றுள்ளாய். பல்லாண்டுகளாக வேண்டிவரும் எனது விருப்பத்தினை நிறைவேற்றாவிடில் உனக்குக் குணக்கேடு விளையாதா என்று கேட்கிறார் ஆழ்வார். நான் நாற்சந்தியில் வார்த்தை கிளப்பினால் அயலார் ஏசுவார்களே. யோசித்துக் கொள்வாய். சர்வ ரக்ஷகனான நீ இவ்விதம் நடந்து கொள்ளலாமா? என்று வினவுகிறார் ஆழ்வார்.   

      

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர்! வாழ்ந்தே போம் நீரே.      1331

 

பூவுலகிலே ஆசை குறையாமல் துதிக்கின்ற எமக்கு இங்கு அதுவே இழுக்காய் அமைந்தது.  உலகமெல்லாம் அறியும்படி உங்கள் தொண்டராய்த் திரிகின்ற எமக்குத் தங்கக் காசைவிட ஒளிமிக்கதாய் விளங்குகின்ற உமது வடிவழகினைக் காட்ட மறுக்கிறீர்.  இந்தளூரில் உள்ள சுகந்தவன நாதனே! உனது சௌந்தர்யத்தை நீரே அனுபவித்து இரசியுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      திருவிந்தளூரில் உலகமறிய சேவை சாதிக்கும் பெருமானே! எங்களுக்குப் பொன்னொளியைக் காட்டிலும் அதிக வடிவழகை காட்டுமாறு வேண்டுகிறேன். எங்களுக்கான திருமேனியை எங்களுக்குக் காட்டாமல் இருப்பது ஏனோ? நம் மேனியை நித்யசூரிகள் மட்டும் காணட்டும். இத்தகைய அற்பனெல்லாம் காண வேண்டாம் என்று கருதுகிறீரா? நித்ய சம்சாரிகளுக்கும் உன் வடிவழகை காட்ட மாட்டீரோ? உம்முடைய உடம்பு உம்மை ஆசைப்பட்டவர்களுக்காக உள்ளது என நினைத்திருந்தோம். அது இல்லாத நிலையில் நீரே கண்டு, தொட்டு, முகர்ந்து, கட்டிக்கொண்டு நீரே வாழும் என்று வெகுண்டு கூறுகிறார் ஆழ்வார்.    

திரு இந்தளூர் பெருமானே! நீங்கள் தீயாக, நீராக, திசைகளாக, நிலமாக, ஆகாயமாக இருப்பதை வேத புராணங்கள் சொல்லுகின்றன. எமக்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் இருப்பது உண்மை. ஆனால் அடியார்கள் உனது வடிவழகைக் காண விரும்புகிறோம். தாங்கள் எங்களுக்கு அனுகூலமாக உதவ மாட்டீரா? என்ற பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.

      நமது கண்ணால் காணும் பொருளெல்லாம் எம்பெருமான் என்று துணிவுடன் ஆழ்வார் கூறுகிறார்.  இத்துணிவு இல்லாதவர்தான் வருந்த வேண்டும். இத்தகைய துணிவு பெற்றவர்களுக்குப் பெருமானின் கடாக்ஷம் நிறைந்தே கிடைக்கும். சங்கும், சக்கரமும், சிரித்த முகமும், தொங்கும் பதக்கங்களும் கொண்ட அசாதாரணமான விக்ரக வடிவத்தினை நான் கண்டு களிக்க ஆவல் கொண்டுள்ளேன். தாங்கள் ஜகத் சொரூபியாக இருந்து என்ன பயன் என்று வினவுகிறார். நீரும், நெருப்பும் உன் வடிவே என்று சொல்லிக் கொள்வதில் யாதொரு தயக்கமுமில்லை. அப்படியாவது உனது திருமேனி வடிவழகைக் காண்போமா என்கிறார். ஆனால் அவர் தரும் வடிவழகை நமது ஊனக்கண் கொண்டு பார்க்க இயலாதவர்களாக இருக்கிறோம் என்பதே இதன் கருத்தாகும்.

 

 தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும்
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம் பெருமான் தந்தை தந்தை ஆவீர் அடியோமுக்
கே எம் பெருமான் அல்லீரோ நீர்? இந்தளூரீரே.      1332

 

திரு இந்தளூர் பெருமானே! நீங்கள் தீயாக, நீராக, திசைகளாக, நிலமாக, ஆகாயமாக இருப்பதை வேத புராணங்கள் சொல்லுகின்றன. எமக்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் இருப்பது உண்மை. ஆனால் அடியார்கள் உனது வடிவழகைக் காண விரும்புகிறோம். தாங்கள் எங்களுக்கு அனுகூலமாக உதவ மாட்டீரா? என்ற பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.

நாம் கண்ணால் காண்கிற பொருள்களெல்லாம் எம்பெருமான் வடிவேயென்று இவர் துணிந்திருப்பவராதலால், ‘இத்துணிவு இல்லாதவரன்றோ வருந்த வேண்டும். இத்துணிவுடையார்க்கு எம்பெருமானுடைய ஸாக்ஷாத்காரம் எப்போதும் குறையற்றிரக்கின்றதன்றோ, ஆகையாலே இவர் வீணாக வருந்துகின்றார்’ என்று திருவிந்தளூர்ப் பெருமான் திருவுள்ளம் பற்றி இருப்பதாகக்கொண்டு, பிரானே! நீ எல்லாப் பொருளுமாக நிற்கின்றாய் என்கிற சாஸ்த்ரார்த்தம் அடியோமுக்குத் தெரியாமையில்லை.சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களும்;” என்றாற் போலே  அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ வேஷத்தைக் கண்டுகளிக்க ஆவல் கொண்டிருக்கிற அடியோமுக்கு ஜகத் ஸ்வரூபனாயிருக்கும் இருப்பு என்ன பயனளிக்கும்? தீ, நீர் முதலானவையெல்லாம் உன்வடிவே என்று அநுஸந்தித்துக்கொள்வதில் யாதொரு ஆக்ஷேபமுமில்லை.  அப்படி அநுஸந்திப்பதனால் அவற்றில் உனது அஸாதாரணத் திருமேனியைக் காண்போமோ.  யாம் காணமாட்டோம்; நாங்கள் கண்டுகளிப்பதற்கன்றோ நீ திருவிந்தளூரிலே வந்து நிற்கிறது என்கிறார்.

      

சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்தில்
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே   1333

 

இந்தளூர் பெருமானே! அடியேன் சொல்ல நினைப்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.  நான் மனதில் உணர்வதைக் கூறுகிறேன். உம்மைப் பிரிக்க முடியாத அடியேனை, நீங்கள் உமது மற்ற மனிதர்களோடு சமமாக எண்ணியுள்ளீர். நல்லவர் யார், தீயவர் யார் என்பது உமக்குத் தெரியும்.  இவ்வுலக நடைமுறைகளை நீர் அறியாதவரா. இருப்பினும் என்னுடைய தன்மையினை அறிந்து கொள்ள மாட்டேன் என்கிறீரே என்று வருந்திப் பாடுகிறார் ஆழ்வார்.

இந்தளூர் பெருமானே! அடியேன் விண்ணப்பஞ் செய்ய நினைத்த விஷயத்தைக் கூசாமல் விண்ணப்பஞ் செய்துவிடுகிறேன்; சேஷபூதன் சேஷியை நிர்ப்பந்திக்கலாகாது என்று முறையறிந்து இருக்கமாட்டுகின்றிலேன்; ஸர்வஜ்ஞரான உமக்கும் தெரியாத விஷயம் ஒன்றுண்டு என்று அடியேன் நினைத்திருக்கிறேன்.  உமக்குப் பல்லாயிரம் பேர்கள் அடியாருண்டு. மற்ற அடியார்கள் எல்லாரையும் போலே இக்கலியனும் ஓரடியான்’ என்று நீர் நினைத்திருக்கின்றீர் அத்தனையல்லாது எனக்குள்ள வாசியைச் சிறிதும் அறிகின்றிவீர். ஊர்த்வம் மாஸாந்நஜீவிஷ்யே” (ஒரு மாதம்வரையில் உயிர்தரித்திருப்பேன்) என்று சொன்ன அசோகவனத்துப் பிராட்டியையும் என்னையும் ஒருதட்டாக நினைத்திருக்கிறீரே யொழிய ‘ஒரு நொடிப்பொழுதும் நம்முடைய பிரிவைப் பொறுக்கமாட்டாத சுகுமார ஸ்வபாலன் இவன்’ என்று என்னுடைய வாசியை அறிந்திலீர் என்கிறார்.

      அடியேன் தங்களிடம் விண்ணப்பம் செய்து விடுகிறேன். உமக்குத் தெரியாத விஷயம் என்பது ஒன்றுமில்லை. பல அடியார்கள் போன்று இந்தக் கலியனும் ஒரு அடியன். ஒரு மாதம்வரை உயிர் தரிப்பேன் என்று அசோக வனத்தில் பிராட்டி சொன்னதையும் என்னையும் ஒரு தட்டில் வைக்கிறீரே. ஒரு நொடியும் நம் பிரிவைத்தாங்க மாட்டான் என்று நீர் அறியவில்லையா? உலகத்தவர் சிலர் தங்களை மறந்து வேறு பாதையில் செல்கின்றனர். ஒரு சிலரோ அனுதினமும் தங்களையே துதித்து வருகிறார்கள். இருவரும் ஒருவரா என்பது போன்று ஆழ்வார் வினா எழுப்புகின்றார்.

      

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மைப் பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நும் தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன நாங்கள் உய்யோமே.      1334

 

இந்தளூர் பெருமானே! தாங்கள் எனது சேவையை நிராகரிப்பவராய் உள்ளீர். அடியேனுக்குக் கைங்கர்யத்தின் மகிமையை உணர்த்திவிட்டு கைவிட்டுவிட்டீர். எனது ஆதங்கத்தினால் இதைச் சொல்கிறேன். தேவரீருடைய திருப்பாதக் கமலங்களை இதுவரை காட்டவில்லை. அதை மட்டும் நாங்கள் தரிசித்துவிட்டால் தொண்டு செய்து நாங்கள் பிறவிப் பயனை அடைய மாட்டோமா என்று வினவுகிறார் ஆழ்வார்.

இந்தளூர்! பெருமானே நீர் எம்மிடத்தில் கைங்கரியங்கொள்ள விரும்பாதவராயிருக்கின்றீர் அடியோங்களுக்கு பணியை உணர்த்திவிட்டு கைவிட்டு விட்டீர். இதனைத் தனியே சொன்னோம். உம் பாதங்களைக் காட்டாமல் போனீர். காட்டியருளினால் இந்த நாட்டிலே உமக்கு இசைந்து வந்து உங்கள்  தொண்டர்கள் ஆன நாங்கள் உய்ந்து போகமாட்டோமோ?

      பெருமாளே! நீர் மிகுந்த சக்தி உள்ளவராக இருந்த போதிலும் என்னுடைய கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்வதற்கான சக்தி உம்மிடம் இல்லை.  இந்த நீசனால் என்ன கைங்கர்யம் செய்து விட முடியும் என்று நினைக்கின்றீரா? நிறையில்லாத நீசனையும் சேவை புரிமண்கட்டியாகப் படைத்திருக்கலாமே சேதனனாகப் படைத்திருக்கிறீரே. கைங்கர்யம் செய்யாவிடில் அதன் பலனை அனுபவிக்க இயலாது என்று கூறுகிறீர். இத்தகைய அறிவைப் படைத்து என்னை ஒதுக்கி விடுகிறீரே. தங்களது அருளை வழங்க இயலாவிட்டாலும் தங்கள் திருவடி சேவையை நான் தரிசிக்கக் கூடாதா என்று ஆழ்வார் வருந்திக் கேட்கிறார்.

      

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே.     1335

 

இந்தளூர் பெருமானே! தேவரீருடைய திருமேனி நிறத்தை ஆராய்ந்து பார்த்தால் முதல் யுகமான கிருதயுகத்தில் பால்போல் வெண்மையாக எப்போதும் நிலை நிற்பதாக இருந்தீர்கள். கடைசி யுகமான கலியுகத்தில் கரு நிறமான காளமேக வண்ணனாக இருக்கின்றீர்.  நினைத்துப் பார்த்தால் திரேதாயுகத்தில் பொன் வண்ணமாகவும், துவாபரயுகத்தில் நீலமணி வண்ணனாகவும் கூடக் காட்சி  அளிக்கும் தாங்கள் இதுதான் நிலையான நிறமென்று காட்டியருள வேண்டும் என்கிறார் ஆழ்வார்.

எம்பெருமான் ஒவ்வொரு ஒவ்வொரு யுகத்திலும் நிறத்தைக்கொள்வன்; கிருத யுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காகப் பால் போன்ற நிறத்தைக்கொள்வன்;  த்ரேதாயுகத்திலே சிவந்த நிறத்தைக்கொள்வன்; த்வாபரயுகத்தில் பசுமை நிறத்தைக் கொள்வான்; கலியுத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீலநிறத்தைக் கொன்வன்.

இந்தளூரீர்! உமக்குப் பல நிறங்கள் உள்ளனவாகச் சாஸ்த்ரங்களில் விளங்காநின்றது; இங்கு அர்ச்சையாக எழுந்தருளியிருக்கு மிருப்பிலே எந்தநிறம் கொண்டிருக்கிறீர் என்பதை அடியேன் அறியவேண்டாவோ? இதோபாராய், இதுவே என்வண்ணம்” என்று சொல்லி வடிவைக் காட்டியருளீர் என்கிறார்.

      பெருமானின் நிறம் யுகத்திற்குத் தகுந்தாற்போல் மாறும் என்கிறார் ஆழ்வார்.  கிருத யுகத்தில் இருந்தவர்கள் சத்வ குணத்தைக் கொண்டதால் பெருமான் வெண்மையாக இருந்துள்ளான்.  த்ரேதாயுகத்தில் சிவந்த நிறத்தைக் கொண்டவனாக இருந்துள்ளான்.  துவாபர யுகத்தில் பசுமை நிறத்தவனாகக் காட்சி அளித்துள்ளான். கலியுகத்தில் எந்த நிறம் கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே கருநீல நிறத்தைச் சார்ந்தவனாக உள்ளான். எனவே இறைவன் பல நிறங்களில் பல வடிவங்களில் இருக்கிறார். உருவமற்ற அருவமாகவும் உள்ளார். இதில் எவ்வித விவாதமுமின்றி அவனை அடைவது எப்படி என்று சிந்திப்போம்.

      

      

எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே    1336

 

இந்தளூர் பெருமானே! என் தந்தை, என் பாட்டனார், அவரது தகப்பனார் என்று எனது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் உமக்கான கைங்கர்யத்திற்கு அர்ப்பணித்திருக்கிறோம். இத்தகைய கைங்கர்யம் மேற்கொண்ட எங்களிடமே வேறுபாடு கொண்டு கணக்குப் பார்க்கிறீர். எனது இதயத்தில் தயங்காமல் குடிபுகுந்த உமக்கு இப்போது திருமேனி நிறம் இன்னதென்று காட்ட மனம் இல்லையே என்று வருந்திக் கூறுகிறார் ஆழ்வார்.

 இந்தளூர்! பெருமானே! என் தகப்பனார் தகப்பனாரின் தகப்பனார் என்கிற முறையில் எமது முன்னோர்கள் ஏழு தலைமுறையாகக் கைங்கரியத்திற்கு இசைந்து வந்திருக்கும் தொண்டர் விஷயத்தில் வித்யாசம் பார்கிறீர்! என் மனதில் வந்து நிற்கிறீர்! ஆனால் சிறிதும் திருமேனி இந்த நிறமுடையது என்று காட்டவில்லையே

      எனது தலைமுறையே உமக்குக் கைங்கர்யம் செய்து வந்த நிலையிலும், ஏழு பிறவியிலும் உனக்கு அடிமை செய்து வரும் குடியில் பிறந்த நிலையிலும்என்மீது ஏன் இத்தகைய சந்தேகம் படுகிறீர். நம் திருமேனியைக் காணஇவனுக்குத் தகுதி உள்ளதா என்று ஐயம் கொள்கிறீரா. இவ்வளவு நினைக்கும் தாங்கள் எவ்வித சிந்தனையுமின்றி என் நெஞ்சில் புகுந்தீரே. அதை ஏன் செய்தீர். நெஞ்சில் பிரகாசிக்கும் நீர் என் கண்ணில் பிரகாசிக்கக் கூடாதா? நித்யசூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை, அந்தத் திருமேனியின் அழகினை, அடியேனுக்கு காட்சி அளிக்க என்ன தயக்கம்? என்று மனமுருகிக் கேட்கிறார் ஆழ்வார்.

      

ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானை
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய்த
சீர் ஆர் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்தில்
ஆர் ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே.       1337

 

அழகுமிக்க சோலைகளால் சூழப்பட்ட திரு இந்தளூரில் அருள் புரிகின்ற பகவானைக் குறித்து மேகங்கள் படிந்த தோப்புகளையுடைய திருமங்கை நகர்க்குத் தலைவரான கலியன் இயற்றிய சிறந்த மதுரமான இப்பாசுரங்களைக் கற்று பரப்புபவர் எவர் எவரோ அவர்களெல்லாம் எப்போதும் தேவர்களால் கௌரவிக்கத்தக்கவராவர் என்பது இப்பாசுரப் பொருளாகும்.

எம்பெருமானை அடிபணிந்தவர்கள் எக்குற்றவாளரா இருப்பினும் எவ்விழி பிறப்பாளராயினும் எவ்வியல்வினரா இருப்பினும் எம்பெருமானாரை ஆச்ரயிக்கப் பெற்ற பெருமையினால் மிகச் சீரியவரேயாவர் என்றாற் போலே, இத்திருமொழியை ஓதுமவர்களும் எத்தன்மையரா இருப்பினும் இந்த ஸ்ரீஸூக்தியை அதிகரிக்கப் பெற்ற பெருமையினால் சிறந்தவரேயாவர் என்கிறார். 

      இராமானுசனை மேவும் நல்லோர் எக்குற்றவாளர் எது பிறப்பு ஏதியல்வாக நின்றேர், அக்குற்றமப்பிறப்பு அவ்வியல்வே நம்மையாட்கொள்ளுமே’ என்று எம்பெருமானாரை அடி பணிந்தவர்கள் எக்குற்றவாளாராக இருப்பினும் எவ்விழிபிறப்பாளராயினும், எவ்வியல்வினராயிருப்பினும் எம்பெருமானாரை ஆச்ரயிக்கப் பெற்ற பெருமையினால் சிறந்தவரேயாவர் என்பது போன்று இத்திருமொழியை ஓதுபவர்களும் எத்தன்மையரா யிருப்பினும் இந்த ஸூக்தியை அதிகரிக்கப் பெற்ற பெருமையினால் சிறந்தவரேயாவர் என்று இராமானுஜ நூற்றந்தாதியில் சொல்லப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...