வியாழன், 18 டிசம்பர், 2025

25. தலைச்சங்க நாண்மதியம்


 

திருமங்கையாழ்வார்                                                                     பெரிய திருமொழி

      

கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும் 

தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்கமேல் திசையுள் 

விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை 

கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ.     1736

 

      நோக்கிய விழிகளை மீட்டெடுக்காதபடி காட்சி தரும் திருக்கண்ணபுரத்திலும், சோளிங்கபுரத்திலும், மணமுள்ள குளிர்ச்சியான தாமரை மலர்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்த தலைச்சங்கத்தில்  மேற்கு திசையில் வானவர்கள் நாள்தோறும் அனுபவிக்கும் சந்திரன் போன்றவனை,  காலை நேரக் கதிரவனை, அடியேனின் கண்கள் கண்ணார தரிசித்து மகிழும் நாள் எந்நாளோ என்று ஆழ்வார் கூறுகிறார்.

      மேற்குத் திசையி்ல் வானவர்கள் நாள்தோறும் அனுபவிக்கும் சந்திரன் போன்றவனே! நான் திருப்தியடையும்படி தரிசித்து மகிழும் நாள் என்று வருமோ? என்று ஆழ்வார் வினவுகிறார். நாம் காணும் காட்சிகள் நிலையற்றது என்று அறியாமல் ஏமாந்து துன்பம் அடைகிறோம். மனம் போன போக்கில் நாம் செல்கிறோம். அதனால் மோகமும், காமமும், பணப்பித்தும் நம்மைச் சீர்குலைக்கின்றன. ஒருநாள் மரணமும் நம்மை வந்து சேர்கின்றது. போகத்தில் வாழ்ந்தவர்கள் நற்கதியை எவ்விதம் அடைய முடியும்? எனவே நாளும் நம் மனதை பெருமானின் பாதக்கமலங்களில் பதிக்க வேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்தாகும்.

      சோழநாட்டுத் திருப்பதிகளுள் ‘தலைச்சங்க நாண்மதியம்’ என்பது ஒரு திருப்பதி.  (திருநாங்கூர் சமீபத்திலுள்ளது.) அங்குள்ள எம்பெருமானுக்கு ‘நாண்மதியப் பெருமாள்’ என்று திருநாமம்.  சிறந்த திருச்சங்கையேந்திய, நாண்மதியப் பெருமானையுடைய தலமாதலால் தலைச்சங்க நாண்மதியம் என்று திருநாமமென்பர்.  இது ‘தலைச்சங்காடு’ என்று வழங்கப்படும். தலைச்சங்கநாடு’ என்பது மருவிற்றுப் போலும்.  தலைச்சங்கப் பெருமாளுடைய இருப்பிட மென்றவாறு. கைப்பால் அலைச்சங்கமேந்த மணியரங்கத் தம்மான், தலைச்சங்க நாண்மதியத் தான்” என்பது பிள்ளை பெருமாள் ஐயங்காரது நூற்றெட்டுத் திருப்பதியந்தாதிப் பாசுரம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...