திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கல்லினால் கட்டப்பட்ட
திருமதில்களால் சூழப்பட்ட காஞ்சியில் வசிக்க
விரும்பிய, உலகமெல்லாம்
துதிக்குமாறு திருப்பாடகமென்னும் திருப்பதியில் உறையும் பகவான், இலங்கை அரசனான
இராவணனின் பலமான உடம்பை வில் வளைத்து அம்பெய்து அழித்த தென்பெருமானே!
விபீஷணனுக்கு நன்மைகள் புரிந்த எம்பிரான்
திருநாமத்தைச் சொன்னால் அது ‘ஓம் நமோ நாராயணாய’ என்பதாகும் என்று ஆழ்வார்
கூறுகிறார்.
காஞ்சிபுரத்திலுள்ள பாண்டவதூதர்
சந்நிதியை ‘பாடும் அகம்’ என்று கூறுவர். துரியோதனன் கண்ணபிரானை வஞ்சகமாகக் கொல்ல
குழி அமைத்து அதன்மேல் பட்டுத் துணி போட்டு அமர்த்தினான். பெருமான் விஸ்வரூபமெடுத்து
மல்லர்களை யெல்லாம் அழித்தார். அத்திருக்கோலத்தில் இத்தலத்தில் சேவை
சாதிக்கின்றார். பெரியாழ்வாரும் ‘அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவப் பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்’ என்று
பாடியுள்ளார். அத்தகைய பெருமான் திருநறையூரிலும் சேவை சாதிக்கின்றார்.
திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம்
உளுத்துப் போன மாமிசத் துகள்கள் உதிரும் மண்டையோட்டை தரித்து வெளி இல்லங்களில் பிச்சை ஏற்றுத் திரியும் சிவபிரானின் சாபத்தைத் தீர்த்த பகவான் ஸ்ரீமந் நாராயணன் அருள் புரியும் இடமான திருக்கண்டியூர், திருமெய்யம், திருவரங்கம், காஞ்சிபுரம், திருப்பேர்நகர், மாமல்லபுரம் போன்ற திவ்ய தேசங்களுக்கு சென்று சேவிப்பவர் பிறவிப் பயன் பெறலாம். மற்றவர்கள் பாவவினைகள் தீர்ந்தும் முக்தியடையாத நிலை பெறுவர். இங்கு பிறவிப்பயன் என்று கூறுவது பிறப்பு இறப்பு இல்லாத பேரானந்த நிலை, ஆத்மாவை அறிந்துவிட்ட தூய நிலை, வேறுபாடுகளைக் கடந்துவிட்ட ஒரு அற்புத நிலை, பகவானின் ஒரு கூறாய் நாம் இருப்பதை உணர்த்தும் நிலை என்பதாகும். எனவே மக்கள் அனைவரும் இத்தகைய திவ்ய தேசங்களுக்குச் சென்று பெருமானை சேவித்தல் வேண்டும் என்று உணர்த்துகிறார்.
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
‘‘மரக்கலங்களில் சிறந்த
இரத்தினங்களைக் கொண்டு தள்ளும் கடற்கரையைக் கொண்டுள்ள மாமல்லபுரத்தில் கோயில்
கொண்டிருப்பவனே! திருமதில்களை உடைய காஞ்சியில் வாழ்பவனே! திருப்பேர் நகரில்
குடிகொண்டிருப்பவனே! அழகிய கொன்றை மாலையை இடப்பக்கம் சூடிய மலைமன்னன் இமவானின்
மகளான பார்வதியை இடப்பக்கம் அமர்த்தியுள்ள சிவபெருமானுக்கு உன் மேனியில் இடம்
தந்தவனே! குளிர்ந்த திருவேங்கட மலையில் நின்றருள்பவனே! பவள நிறத்தவனே!
எங்கே போனாய்?
பகவானே! உன்னைத் தேடி இந்த ஏழை அலைகின்றேனே!’’ என்று ஆழ்வார்
பகவானை வேண்டுகிறார்.
பகவானைத் தேடுவதிலும் ஒரு
அடித்தளம் அமைய வேண்டும். பொன் வேண்டும், பொருள் வேண்டும் என்றெண்ணி தேடுவது சுயநலமாகும்.
இக்காரியத்தால் பகவான் நம்மை விட்டு விலகி விடுகிறான். சுயநலமில்லா அன்பைக் கொண்டு
அவனை அடைய வேண்டும் என்ற கருத்தில் ஆழ்வார் இப்பாசுரத்தை இயற்றியுள்ளார்.
‘நீண்ட மதில்கள் சூழ்ந்த காஞ்சித் திருப்பாடகத் தலத்தில் குடி கொண்டிருக்கும் யானையே! எக்காலத்திலும் யோக நித்திரை கொள்ளும் கனியே! மணமுள்ள மலர்களையும், தடாகங்களையும் சுற்று வேலியாகக் கொண்ட அழகிய திருவழுந்தூரில் நின்றருளி வரும் என் முறை மாப்பிள்ளையே! என்று சொல்லி நாதம் மிகுந்த நீணட இசையை கொண்ட வீணையை தனங்களில் உரசுமாறு தாங்கிப் பிடித்து, தூய்மையான புன்சிரிப்பால் பல்வரிசை தெரியுமாறு புன்னகை செய்து, தனது மெல்லிய விரல்கள் சிவக்கும்படி வீணையை மீட்டி என் பேதைப் பெண் கிளி போன்று அவன் பெயரை இசைக்கின்றாள்’ என்று தாயார் பாடுவது போன்று அமைந்துள்ளது. இம்மண்ணுலகத்தில் பிறந்த பயனை என் மகள் சரியாகப் பயன் படுத்திவிட்டாள். அற்ப மனிதர்களின் நடுவில் இவள் தனித்துவம் பெற்று விட்டாள் என்ற கருத்தில் அமைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக