வியாழன், 18 டிசம்பர், 2025

27. திருக்காவளம்பாடி

 


திருமங்கையாழ்வார்                                                                          பெரிய திருமொழி

 

 தா அளந்து உலகம் முற்றும்
     தட மலர்ப் பொய்கை புக்கு
நா வளம் நவின்று அங்கு ஏத்த
     நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி மன்னும்
     மறையவர் வாழும் நாங்கை
காவளம்பாடி மேய
     கண்ணனே களைகண் நீயே   1298   

 

உலகமுற்றும் தாமரை மலர்களைத் தேடி அலைந்து, ஒரு தடாகத்தில் பெரிய தாமரை மலர்களைக் கண்ட கஜேந்திரன் என்ற யானை அதில் இறங்கியது. அதைக் கண்ட கொடிய முதலையானது அதன் காலைக் கவ்வியது. யானை அதிர்ந்து ‘ஆதிமூலமே’ என்ற ஹரி நாமத்தைச் சொன்னவுடன் நேரில் வந்து தோன்றி அதன் நடுக்கத்தைப் போக்கியவனே! நிறைந்த செல்வம் பெருகியுள்ள வைதீகர்கள் வாழ்ந்து வரும் திருநாங்கூர் திருக்காவளம்பாடியில் எழுந்தருளி இருக்கும் கண்ணபிரானே.  நீ என்னைக் காத்தல் வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

உலகமெல்லாம் சுற்றித்திரிந்து பெரிய பூக்களையுடைய ஒரு தடாகத்தில் இறங்கி நாவுக்கு இனிய திருநாமங்களை சொல்லித் துதித்த  யானையின் அச்சத்தை போக்கினவனே! அதிக செல்வம் பெருகி இருக்கும் வைதிகர்கள் வாழும் திருநாங்கூரின் திருக்காவளம்பாடியிலிருக்கும் கண்ணனே நீயே காப்பாற்ற வேண்டும் என்கிறார் ஆழ்வார்.

      மனிதர்களுக்கு ஆபத்து வரும்போது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்  என்று யாரையேனும் உதவிக்கு அழைப்பது வழக்கம். அப்போதும் நாம் பகவானை நினையாமல் மனிதனை அழைப்போம்.  நாம் பகவானை நினைப்பதில்லை. ஆனால் யானையானது பகவானிடம் கொண்ட அன்பினால் தனக்கு ஆபத்து என்று அறிந்தபோது ‘ஆதிமூலமே’ என்று அழைத்தது. நமக்கு இத்தகைய நம்பிக்கை பகவானிடம் இல்லாததுதான் வியப்பு. கஜேந்திரனை காத்தது போல் பஞ்சேந்திரியம் என்ற முதலையிடமிருந்து காத்தருள வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.

      

மண் இடந்து ஏனம் ஆகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண் என மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே.    1299

 

ஆதிவராக அவதாரமாய் வடிவெடுத்து பூமியைக் குத்திப் பிரித்து எடுத்தவன், மகாபலியின் மிடுக்கையும், வலிமையையும் மாற்றத் தேவர்கள் வேண்டியதால் மூன்றடி மண் கேட்டவன், மாவலியின் யாகப் பூமியில் எழுந்தருளிவனே! தனக்கு வேண்டியதைப் யாசித்துப் பெற்றவனே! பகைவர்களை வேகமாக அழித்தவர்கள் வாழும் நாங்கூர் நகரில் உள்ள காவளம்பாடியில் கண்ணனாய் எழுந்தருளியிருக்கிறான் என்கிறார் ஆழ்வார்.

வராஹமாக அவதரித்துப் பூமியை குத்தி எடுத்து வந்தவனே! மஹாபலியின் பலத்தை போக்கும்படி தேவர்கள் யாசிக்க யாகப் பூமியில் சென்று யாசித்துப் பெற்றவனே! பகைவர்களைச் சீக்கிரமாக வென்று வாழும் வீரர்கள் இருக்கும் திருநாங்கூரின் குளிர்ந்த சோலைகளையுடைய  திருக்காவளம் பாடியிலிருக்கும் கண்ணனே நீயே காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      இந்தப் பூமியானது உயிர்களின் நன்மைக்காகப் படைக்கப்பட்ட கர்ம பூமியாகும். நாம் செய்த கர்ம வினைகளை அந்த வினைகளால்தான் களைய முடியும். தீவினைகளால் துன்பம் வருவது போல் நல்வினைகளால் இன்பம் வருகின்றது. அசுரசக்திகள் நம்மைச் சுற்றிக் கொண்டிருப்பதைப் போன்று நல்ல தேவைதைகளும் நம்மைக் காத்து வருகின்றன. எனவே நாம் அனாதைகள், நமக்கு யாருமில்லை என்று எண்ணுவது அறியாமையாகும். பகவான் நம்மைக் காத்து வருகிறார் என்று நம்பிக்கை ஏற்படுத்தவே இத்தகைய அவதாரங்களை ஏற்று அசுரசக்தியிடமிருந்து நம்மைக் காத்து வருகிறார். இதனை நாம் புரிந்து கொள்ள ஆழ்வார் இத்தகைய பாசுரங்கள் வழி தெரியப்படுத்துகிறார்.

 

உருத்து எழு வாலி மார்வில்
     ஒரு கணை உருவ ஓட்டி
கருத்து உடைத் தம்பிக்கு இன்பக்
     கதிர் முடி அரசு அளித்தாய்
பருத்து எழு பலவும் மாவும்
    பழம் விழுந்து ஒழுகும் நாங்கை
கருத்தனே காவளம் தண்
    பாடியாய் களைகண் நீயே   1300

 

மிகவும் கோபத்தோடு புறப்பட்டு வந்த வாலியின் மார்பில் பாயும்படி ஒரு அம்பு எய்தி அவனைக் கொன்று தனக்கு பிடித்த நண்பனான சுக்ரீவனுக்கு இன்பம் தரும் அரசாட்சியைத் தந்தவனே! மிகப் பெரிய பலா, மா மரங்களின் கனிகள் கீழே விழுந்து தேன் வழியும் வளமான நாங்கை காவளந்தண்பாடியின் பகவானே! நீயே எனக்குப் பாதுகாப்பு என்று கூறுகிறார் ஆழ்வார்.

 சற்று முன்னே சண்டைக்கு வந்து தோற்றோடிப்போன பையல் மறுபடியும் வெட்கமின்றி வந்தானே!’ என்று கோபமூண்டு கிளம்பி வந்த வாலியின் மார்பில் எத்தனையோ வீரர்கள் அம்புகளைப் பிரயோகித்ததுண்டு;  அவையெல்லாம் வாய் மடிந்து போயின வத்தனையொழிய ஒன்றேனும் காரியஞ் செய்யவில்லை; இராமபிரானுடைய கணையே காரியஞ் செய்ததுபற்றி ‘ஒருகணை’ எனப்பட்டது.

      வாலி பகவானுக்கு வேண்டாதவன் அல்ல. ஆனால் அவன் செய்த காரியம் தருமத்திற்கு உகந்ததாக இல்லை. தம்பி ஆட்சிபுரிந்த நாட்டை அபகரித்து அவனை நாட்டைவிட்டே துரத்தினான். நாட்டை விட்டு வந்த இராமனால் இச்செயல் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி சுக்ரீவனின் மனைவியை வாலி அபகரித்தான். இவை அனைத்தையும் சொல்லிச் சுக்ரீவன் இராமனைச் சரணடைந்தான். எனவே வாலியை வென்று சுக்ரீவனுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்தான். நாமும் அவனைச் சரணாகதி அடைந்து நம் செயல்களை நல்வினைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும்.

      

முனைமுகத்து அரக்கன் மாள
     முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே
     அரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாயச்
     சுரும்பு தேன் நுகரும் நாங்கை
கனை கழல் காவளம் தண்
     பாடியாய் களைகண் நீயே.       1301

 

போர்க்களத்தில் இலங்கை வேந்தன் இராவணன் அழியும்படி அவன் பத்துத் தலைகளையும் அறுத்துத்தள்ளி, அவனது தம்பி விபீஷணனுக்கு  இலங்கை அரசை அளித்தருளியவனே! சுனைகளில் கயல் மீன்கள் அஞ்சித் துள்ளிக் குதிக்க, கரிய வண்டுகள் ஆரவாரத்துடன் தேன் பருகும் திருநாங்கூர் நகரில் உள்ள காவளந்தண்பாடியில், ஒலிக்கின்ற வீரதண்டைக் கொண்டு அருள் புரிபவனே!  நீ எனக்குப் பாதுகாப்பு என்று கூறுகிறார் ஆழ்வார்.

      இப்பாசுரத்தில் பகவானின் பரிவுக்கு தருமமே அடிப்படையாக உள்ளது. இராவணன் செய்த பெரும் தவற்றினை தம்பி விபீஷணன் கண்டித்ததால் அவனை இலங்கை விட்டுச் செல்லுமாறு செய்தான். விபீஷணன் இராமனிடம் சரணடைந்தான். அதனால் இராமனுக்கு அவன்மீது பரிவு அதிகமானது. பணம் படைத்தவர்கள் கூறும் பேச்சினை கண்மூடி ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கினை நாம் ஏற்கலாகாது. ஆனால் இதனை ஏற்கும் அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். நமது தாழ்வுகளுக்கெல்லாம் இதுவே மூல காரணமாகத் திகழ்கின்றது.  அதர்மம் செய்வோரை தன்மானத்துடன் தட்டிக் கேட்கும் மனத்துணிவு நமக்கு வர வேண்டும். இறைவன் கருணைக்கு முன்னால் இத்தகைய அதர்மச் செயல் மழுங்கிப் போகும் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும்.

      

பட அரவு உச்சி தன்மேல்
     பாய்ந்து பல் நடங்கள்செய்து
மடவரல் மங்கை தன்னை
     மார்வகத்து இருத்தினானே
தட வரை தங்கு மாடத்
     தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளம் தண்
     பாடியாய் களைகண் நீயே.      1302

 

அகல விரிக்கப்பட்ட படங்களைக் கொண்ட காளிங்க நாகத்தின் முடிமேல் குதித்துப் அனேகவிதமான நர்த்தனங்களைச் செய்தவன், மடமை குணம் கொண்ட பெரிய பிராட்டியை மார்பில் நித்யமாக வைத்துக் கொண்டிருப்பவனான, பெரிய மலைகள் போன்ற மாளிகைகள் நிறைந்த புகழ்மிக்க திருநாங்கூரில் உள்ள காவளந்தண்பாடியில் எழுந்தருளி இருக்கின்ற இறைவனே! நீயே என்னைக் காப்பவன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

படங்களையுடைய  காளிய நாகத்தின் தலைமேல் பாய்ந்து பல நடனங்கள் ஆடி, மடமைக் குணம் வாய்ந்த  திருமகளை மார்பில் இருத்தினவனே! பெரிய மலைகள் போன்ற மாளிகைகளையுடையதும், தகுந்த புகழையுடையதுமான நாங்கை திருநாங்கூரின் குளிர்ந்த சோலைகளையுடைய திருக்காவளம்பாடியில் இருக்கும் கடவுளே! நீயே காப்பாற்ற வேண்டும் என்று  வேண்டுகிறார் ஆழ்வார்.

      காளிங்கனை அடக்கி அவனுக்கு உயிர் பிச்சை கொடுத்து மடுவை விட்டு அகன்றுவிடுமாறு கூறினார் பகவான். அதர்மத்தால் செய்யும் செயல்கள் அனைத்தும் பகவானால் ஒடுக்கப்படும். பகவானின் கிருபை நெருங்க அவை அகன்றுவிடும். நாகம் போன்று நம் புலன்களும் நம்மை ஆட்டுவிக்கின்றன. தவறு என்று தெரிந்தும் அதைக் கட்டுப்படுத்த இயலாதவர்களாக நாம் உள்ளோம்.  இப்புலன்களை அடக்கி ஆண்டால் இவ்வுலகமே நமக்கு அடங்குவதைக் காண்போம். புலன்களை அடக்கப் பகவத் பக்தியும் அவனது திருநாமங்களையும் இடைவிடாது சொல்வதில் மட்டுமே அது சாத்தியமாகும் என்பது இதன் பொருளாகும்.

      

மல்லரை அட்டு மாளக்
     கஞ்சனை மலைந்து கொன்று
பல் அரசு அவிந்து வீழப்
     பாரதப் போர் முடித்தாய்
நல் அரண் காவின் நீழல்
     நறை கமழ் நாங்கை மேய
கல் அரண் காவளம் தண்
     பாடியாய் களைகண் நீயே.     1303

 

மல்லர்கள் மாண்டு வீழும்படி அழித்து, கம்சனை எதிர்த்துக் கொன்று, பல்லாயிரம் அரசர்கள் இறக்க பாரதப் போரை முடித்தவன், அரண் போன்று நல்ல பாதுகாப்பாக உள்ள தோட்டங்களின் நிழலில் வாசனை வீசுகின்ற திருநாங்கூரில் கல் மதிலையுடைய காவளந்தண்பாடியில் எழுந்தருளி இருப்பவனே! நீயே எனக்குப் பாதுகாப்பு என்று பாடுகிறார் ஆழ்வார்.

மல்லர்களை மாளும்படி செய்து கம்ஸனை எதிரிட்டுச் சென்று கொன்று பல்லாயிரம் அரசர்கள்  மாண்டு விழ, பாரதப் போரை முடித்தவனே!  நல்ல அழகிய  சோலைகளின் நிழலிலே மணம் வீசும் திருநாங்கூரின் குளிர்ந்த சோலைகளையுடைய திருக்காவளம்பாடியிலிருக்கும் கடவுளே! நீயே காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.

      பூமி பாரத்தைக்குறைப்பதற்காகப் பாரதரத யுத்தம் நடந்தது. அதில் பல்லாயிர அரசர்கள் போரிட்டு மாண்டார்கள். பகவான் கௌரபாண்டவர்கள்மீது எவ்வித விருப்பு வெறுப்பும் காட்டவில்லை. பூபாரத்தைக் குறைப்பதே அவரது அவதார நோக்கம். தேவ ரகசியங்கள் மறைத்துக் காக்கப்படுகின்றன. நமது முற்பிறவிகள் நினைவுக்கு வந்தால் பலர் புத்தி பேதலித்து அலைவார்கள்.  எனவேதான் பகவான் அதை மறக்கும்படி செய்தார். இதன் சூட்சுமக் கயிறு பகவான் கையில் உள்ளது. அவர் சுழற்றுகிறபடி உயிர்கள் வாழத்தான் வேண்டும். இத்தகையவன் காவளம்பாடியில் எழுதருளியுள்ளான் என்று கூறுகிறார் ஆழ்வார். 

 

மூத்தவற்கு அரசு வேண்டி
     முன்பு தூது எழுந்தருளி
மாத்து அமர் பாகன் வீழ
     மத கரி மருப்பு ஒசித்தாய்
பூத்து அமர் சோலை ஓங்கிப்
     புனல் பரந்து ஒழுகும் நாங்கை
காத்தனே காவளம் தண்
     பாடியாய் களைகண் நீயே.       1304   

 

முன்பு பாண்டவர்களுக்காக அரசாட்சி அமைப்பதற்கு மூத்தவரான தருமருக்கு ஆட்சி வழங்க வேண்டித் தூது சென்றார் கிருஷ்ணன். மத்தகத்தின் மீதிருந்து பாகனும் வீழ்ந்து மடிய குவலயாபீடம் என்ற யானையின் தந்தத்தை முறித்தவரான பரமாத்மா, மலர் வனங்கள் நிறைந்த தோட்டங்களைச் சுற்றி நீர் பரவியுள்ள வளமான நாங்கை நகரில் உள்ள காவளந்தண்பாடியில் உறையும் நீயே என் துயரைப் போக்குபவன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      உலகினை சிருஷ்டித்த பிரம்மனைப் படைத்தவன் பகவான். உலகம் தோன்ற காரணமாக இருக்கிறான். அத்தகைய உலகில் சுயநலம் மிக்க மனிதர்கள் உள்ளார்கள். அதனால் நல்லவர்களுக்குத் துன்பம் வருகின்றது. மெய்ப் பொருளாகிய வேதமந்திரங்களால் பகவானின் திருப்பாதங்களை பூஜை செய்பவர்களை இத்தகைய சுயநலப் பேய்கள் நெருங்க முடியாது. எனவே நாம் நமது கடமையைச் செய்து அத்தியாவசியத் தேவைக்கான பொருட்களை ஈட்டுங்கள். மற்றவற்றை பகவானிடம் விட்டு விடுங்கள். நாராயண மந்திரத்தைச் சொல்லி வந்தால் துன்பங்கள் விலகிப் பரமபதம் செல்ல வாய்ப்பளிக்கும் என்பது இதன் கருத்தாகும்.  

      

 ஏவு இளங் கன்னிக்கு ஆகி
     இமையவர் கோனைச் செற்று
கா வளம் கடிது இறுத்துக்
     கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த
     புரந்தரன் செய்த நாங்கை
காவளம்பாடி மேய
     கண்ணனே களைகண் நீயே.       1305

 

இளம் மங்கையான சத்தியபாமாவுக்காகப் போரில் இந்திரனைத் தோற்கடித்து துரிதமாக மலர்வனங்கள் பாழ்பட கற்பக மரத்தினை  துவாரகைக்கு எடுத்து சென்று நட்டவனே! செழித்த மலர் வனங்களால் சூழப்பட்டதாய் இந்திரனால் உண்டாக்கப்பட்டதான நாங்கூரில் காவளந்தண்பாடியில் எழுந்தருளியிருக்கும் கண்ணனே! நீயே என் துயர் நீக்குபவன் என்று பாடுகிறார் ஆழ்வார்.

 இந்தப் பாரிஜாத விருக்ஷத்தை என் வீட்டு முற்றத்தில் கொண்டு நட்டுவிடு’ என்று ஏவின, இளங்கன்னிக்காக அம்மரத்தைக் கருடனைக் கொண்டு போகுமளவில் இந்திரன் அஃதறிந்து வஜ்ராயுதத்தைத் தீட்டிக் கொண்டு போர்புரிய வந்து பங்கப்பட்டுப் போயினன் என்பதும் இங்கு அறியத்தக்கது. ஸ்வர்க்க லோகத்திற்கு உண்டான ஏற்றம் பூலோகத்திற்கும் உண்டாகவேணும் என்று கருதின தேவேந்திரன் ஸ்வர்க்கலோகத்துக் கட்டளையாகவே திருநாங்கூரை அமைத்தனன் என்று ஒரு இதிஹாஸம் உண்டென்பர். 

      பாரிஜாத மலர் வனங்களில் சத்தியபாமா மிகுந்த மனநிறைவுடன் தன்னை மறந்த நிலையில் இருந்ததைக் கண்ணன் பார்த்துவிட்டான். அவளது மகிழ்ச்சிக்காக கருடன் உதவியோடு கற்பக மரத்தினை துவாரகைக்கு எடுத்து வந்தான். இது போன்றே அடியார்களுக்கும் தங்களது காரியங்களை செய்விப்பதற்காக காவளம்பாடியில் எழுந்தருளியவனே! சுவர்க்க லோகத்திற்கு உண்டான ஏற்றம் பூவுலகிலும் இருத்தல் வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திரன் காவளம்பாடியில் இத்தகைய மலர்வனத்தைத் தோற்றுவித்தான். அத்தகைய கருணையுள்ளவர், நம் குறைகளைப் பொறுத்து துன்பத்தை நீக்குபவர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

 

 

      

 சந்தம் ஆய்ச் சமயம் ஆகிச்
     சமய ஐம் பூதம் ஆகி
அந்தம் ஆய் ஆதி ஆகி
     அரு மறை அவையும் ஆனாய்
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்
     மட மயில் ஆலும் நாங்கை
கந்தம் ஆர் காவளம் தண்
     பாடியாய் களைகண் நீயே.      1306

 

காயத்ரி, திருஷ்டும், ஜகதி என்று சொல்லப்படுகின்ற சந்தசுகள் எல்லாம் உரியவனாய், பல நிலைகளுள்ள காலமாய், பஞ்ச பூதங்களுக்கும் தலைவனாய், உலக சிருஷ்டிக்கு முதலவனாய், இறுதியாய் அரிய வேதங்களாலான எம்பெருமானே! மந்தார மரச்சோலைகள் எங்கும் மயில்கள் வந்தாடும் நாங்கை நகரிலே மணம் வீசும் காவளந்தண்பாடியில் இருப்பவனே! நீயே என் துயரை நீக்குவாய் என்று பாடுகிறார் ஆழ்வார்.

      மூன்று வகையான மந்திரங்களுக்குத் தலைவனாக இருப்பவன் பகவான். மந்திரங்களின் வலிமையினால்தான் பல்வேறு அஸ்திரங்கள் பகைவர்களை அழிக்கப் பயன்பட்டன. அரிய தவங்கள் புரிந்து தேவர்களும் அசுரர்களும் இத்தகைய அஸ்திரங்களைப் பெற்றனர். தருமத்திற்கு எதிராக இவைகளைப் பிரயோகிக்கும்போது இதன் வலிமை மழுங்கி விடுகின்றது. அதை மழுங்கச் செய்பவனே பகவான். எல்லா மந்திரங்களும் பகவானின் வடிவம் என்பதை ஆழ்வார் வலியுறுத்துகிறார். மேலும் வேதத்தின் வடிவமும் அவனே என்கிறார். இருப்பது ஒரே பிரம்மம் தான். அதனை அறிந்து கொள் என்ற வகையில் பொருள் அமைகிறது.

 

மா வளம் பெருகி மன்னும்
     மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய
     கண்ணனைக் கலியன் சொன்ன
பா வளம் பத்தும் வல்லார்
     பார்மிசை அரசர் ஆகிக்
கோ இள மன்னர் தாழக்
     குடை நிழல் பொலிவர் தாமே    1307

 

பெரிய செல்வமானது உற்பத்தியாகும் திருநாங்கூரில் நிலையாக அந்தணர் வாழ்கின்றனர்.  அங்குத் திருக்காவளம்பாடியில் அருள்புரியும் கிருஷ்ணனைக் குறித்து கலியன் இயற்றிய இப்பத்து பாசுரங்களையும் பக்தியுடன் பாடக்கூடியவர்கள், பூவுலகில் மன்னராகி எல்லா அரசர்களும், இராஜகுமாரர்களும் வணங்கும்படி வெண்கொற்றக்குடையின் கீழ் புகழோடு வாழ்வார்கள் என்கிறார் ஆழ்வார்.

செல்வம் பெருகியிருக்கும் வைதிகர்கள் வாழுமிடமான நாங்கூரின் திருக்காவளம் பாடியிலிருக்கும் கண்ணனைக் குறித்து திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த பாசுரங்கள் பத்தும் ஓத வல்லார் பூலோகத்தில் அரசர்களாகி அரசர்களும் இளவரசர்களும் வணங்குமாறு ஒருகுடை நிழலில் பொலிந்து விளங்குவர் என்கிறார் ஆழ்வார்.

      மேற்கண்ட பாசுரங்கள் அனைத்தும் நமக்கு நல்வழி காட்டுவதாக அமைந்துள்ளன.  இப்பாசுரத்தில் எல்லையற்ற செல்வம் மேன்மேலும் கரைபுரண்டு வளரப்பெற்ற  அந்தணர்கள் வேதாந்த விழுப்பொருளாகிய எம்பெருமானை கண்ணாலே கண்டு திருநாங்கூர் திருக்காவளம்பாடியில் கண்ணனாக நித்யவாசம் பண்ணுகிறான் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். மண்ணுலக வாழ்க்கையில் நமக்கு அருள்வது போன்று விண்ணுலக வாழ்க்கையிலும் நமக்கு அருள்கிறான். மந்திரங்கள், வேதங்கள் ஆகியவற்றின் பொருளாக இருந்து நமக்கு உணர்த்துகிறான்.  நமது பக்குவத்தை அறிந்து நம்மை மேல்நிலைக்கு அழைத்துச் செல்கிறான். எல்லா உயிர்களுக்கும் வேறுபாடின்றி அவன் தாய் தந்தையாக இருந்து காத்து வருகிறான்.


28. திருக்காழிச்சீராம விண்ணகரம்


 

திருமங்கையாழ்வார்                                                                        பெரிய திருமொழி

      

ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈர் அடியால் 
ஒடுக்கி                                                                                                                   ஒன்றும்
தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.       1178

 

வாமனரூபியாகி மகாபலியிடம் சென்று மூன்றடி மண் கேட்டு, பூமியையும் விண்ணையும் ஈரடியால் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு, இயலாத மகாபலியை காலால் அழுத்திப் பாதாளத்தில் சிறை வைத்துக் கட்டிய பெருமானின் திருவடியை சரண் அடையுங்கள். அரிய வேதங்களின் திரள்கள் நான்கும்,  ஐந்து யாகங்களும், வியாகரணம் முதலான ஆறு அங்கங்களும், ஏழு ஸ்வரங்களும், வீதி நிறைய உத்ஸவச்  சிறப்புகளையுடைய காழிச் சீராமவிண்ணகரத்தை சென்றடைவீர்களாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

இப்பாட்டில் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு என்னும் எண்கள் அழகாக அமைந்திருத்தல் நோக்கத்தக்கது.  இத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற பெருமான் (மூல மூர்த்தி) உலகளந்த பெருமாளாதலால் ஒரு குறளாயென்று தொடங்குகிறார்.

      ஒப்பாற்ற வாமன அவதாரமெடுத்து இந்தப் பரந்த பூமியில் மூன்றடி நிலத்தை மாத்திரம் யாசித்து உலகு அனைத்தையும் இரண்டு அடிகளால் அளந்து மூன்றாமடிக்கு நிலம் தருக என  மகாபலியைக் கேட்க, அவன் தர இயலாத நிலையில் அவன் தலையை மண்ணில் அழுந்துமாறு வைத்த பெருமை பொருந்திய பெருமானின் பாதங்களை அணைய விரும்பும் அன்பர்களே! அவனுக்குத் தக்க கீர்த்தியுடைய அரிய வேதங்கள் நான்கும், வேள்வி ஐந்தும், வேதாங்கங்கள் ஆறும், ஏழு ஸ்வரங்களும் வீதி நிறைந்த உற்சவங்களும் திருவிழாக்களும் சிறப்பு மிக்க  காழியென்னும் க்ஷேத்திரத்தில் நடைபெறும். அத்தகைய சீராம விண்ணகரை நீங்கள் சென்று சேருங்கள் என்கிறார் ஆழ்வார்.

      

நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழு சே ஓடச்
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத் தொல் குருகு சினை என்னச் சூழ்ந்து இயங்க                                                                                        எங்கும்
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.     1179

 

ஆயுள் தனக்கே அதிகமென நான்முகன் ஆணவம் கொண்டிருக்க, வேதத்தை அனுட்டிக்கும் நற்குணங்களுடைய உரோமச முனிவரின் விருப்பப்படி ஒரு ரோமம் உதிரும்போது பிரம்மனின் ஒரு தலை உதிரும் என்று வரமளித்து, நான்முகனின் செருக்கை அடக்கிய சிவனின் கையில் ஒட்டிய மாமிசங்களாலான பிரம்ம கபாலத்தை கையிலிருந்து விழச்செய்த பரந்தாமனின் அழகு மிக்க திருவடிகளை அணுக நினைப்பவர்களே, உழுகின்ற காளைகள் வயல்களில் ஓடுவதால், பிரசவிக்கும் நிலையில் உள்ள சங்குகள் வளைகளில் ஈன்ற முத்துக்களை  கொக்குகள் தங்களது முட்டைகள் என்று மயங்கி அந்த முத்துக்களைச் சுற்றிவர,  எல்லா இடங்களிலும் தேன் சிந்தும் தாமரை மலரில் மீன்கள் துள்ளி விளையாடும் வயல்களைக் கொண்ட காழிச் சீராம விண்ணகரத்தை அடையுங்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.

ஊழிக்காலம் முடியும் காலம் பிரம்மா உறங்கப் போகும் காலமாகும். அந்த விதிப்படி பிரம்மா உறங்குவதற்குச் சென்றார்.  அப்போது எல்லா உயிர்களும் ஊழியின் பெருவலியால் மறைந்து போயின. மீண்டும் பகவான் உலகங்களை உண்டாக்கி சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவையும் படைத்தார். உடனே மீண்டும் இயக்கம் தொடங்கியது. ஊழிக்காலங்களில் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றது. இதனைத் தவறாகப் புரிந்து கொண்டு, இவையனைத்தும் தன்னால் நடைபெறுகிறது என்று இறுமாப்பு கொண்டார். இதனைக் கண்ட சிவபெருமான் பிரம்மனின் தலையைக் கிள்ளியெடுக்க அது அவரது கைகளில் ஒட்டிக் கொண்டது. அந்தப் கபாலத்தை கீழே விழச்செய்தது திருமால் என்ற கருத்தினை இங்குத் தருகிறார் ஆழ்வார்.

      

வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்
செய் அணைந்து களை களையாது ஏறும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.     1180

 

கூரான முனையுடைய கோரைப் பற்களைக் கொண்ட வராகமாகி பூமியை மீட்டுக் கொண்டு வந்தவன், வாணாசுரனுடைய வலிமையான கரங்களைத் திருவாழியால் அறுத்த எம்பெருமானின் திருப்பாதங்களை அடைய விரும்பும் மனிதர்களே! வயலில் களை எடுக்கும் பெண்கள் இறங்கி நெய்தல் மலரையும்,  குவளை மலரையும் தங்கள் விழிகள் என்றும், சிவந்த ஆம்பல் மலரைத் தங்கள் வாயாகவும் கருதி களை பறிக்காமல் கரையேறும் இடமான காழிச் சீராம விண்ணகரத்தைச் சென்றடையுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

கூர்மையான முனையும் கோரைப் பற்களையும் உடைய ஒப்பற்ற வராகமாகப் பூமி முழுவதையும் பிளந்து எடுத்துக்கொண்டுவந்து சாதனை செய்தவனும் வாணாசுரனின் திடமான தோள்களைக் கூர்மையான சக்கரத்தால் துணித்தவனுமானவனின் பாதங்களைப் பற்ற நினைக்கும் அன்பர்களே! பள்ளஸ்த்ரீகள் நெய்தல் மலரையும் கருத்த குவளை மலரையும் தங்களுடைய கண்களென்றும் சிவந்த ஆம்பல் மலரை தங்களுடைய வாயாகவும் பிரமித்து வயல்களில் களை பறிக்காமலே கரை ஏறும் காழியிலிருக்கும் சீராம விண்ணகரை நீங்கள் சென்று சேருங்கள் என்கிறார் ஆழ்வார்.

      இங்கு வாழும் களை பறிக்கும் பெண்களும் அழகு பொருந்தி சிறந்துள்ளார்கள். கடைசிமார்களின் அழகே இவ்விதம் இருந்தால் குலப் பெண்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று ஆழ்வார் பெண்களின் அழகினை வர்ணிப்பது இவ்விடத்திற்கு சிறப்பு சேர்க்கும். ‘ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மாமயிலைத் திருவல்லிக்கேணி’ என்று மற்றொரு பாசுரத்தில் மாதர்களின் அழகினை வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆணவத்தை வேரறுக்கும் ஆதிமுதல்வனை விண்ணகரம் சென்று சேவிப்பீர் என்ற பொருளில் அமைந்துள்ளது.

      

பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலைத்
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்
செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே    1181

 

முற்காலத்தில் பஞ்சு போன்று மிக மென்மையான பாதங்களைக் கொண்ட நப்பின்னைக்காகப் பலமுள்ள காளைகள் ஏழினை அடக்கியவனும், நகங்களை வேலாகக் கொண்டு இரணியனைப் பிளந்தவனுமாகிய பெருமானின் திருப்பாதங்களைச் சேர விரும்பும் மக்களே! மாடங்களில் பதிக்கப்பெற்ற நீல மணிகள் மாலையிலேயே இருட்டை அதிகமாக்க அவற்றின் அருகே பதிக்கப்பட்ட முத்துக்கள் குளிர்ந்த நிலவினைப் போல ஒளி தர, இடையிடையே பதிக்கப் பெற்ற பவளங்கள் உதயகால சூரியனுடைய சிவந்த வெயில் போலப் பிரகாசிக்க, அழகு பொருந்திய சீராம விண்ணகரத்தைச் சென்றடைவீராக! என்று கூறுகிறார் ஆழ்வார்.

      இத்தலத்து திருமாளிகைகளெல்லாம் நவமணிகளால் இழைக்கப் பட்டனவே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீலமணிகள் முத்துக்கள், பவழங்கள் திருக்கோயிலில் பதிந்துள்ளதால் நீலமணிகள் பதிந்துள்ள இடத்தில் நீலச்சுடர்கள் ஒளி மழுங்கி இருளாகக் காட்சி தருகின்றது. முத்துக்கள் பதிக்கப் பெற்ற இடத்தில் நிலவொளி போல் மின்னுகின்றது. பவழமணிகள் பதித்துள்ள இடங்களில் செஞ்சுடராகி உதயகாலத்து ஆதவன் போன்று சிவந்து காணப்படுகின்றது. இருளான அறையில் ஒளி வந்ததும் இருள் அகன்று விடுகின்றது. அது போன்று அறியாமையான இருள் நம் மனத்தில் உள்ளது. இறையொளி கொண்டு அதனை நம் மனதிலிருந்து அகற்ற பகவானின் நாமங்களைச் சொல்வோம்.     

      

தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர் கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர்
அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்
செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.      1182

 

      எதிரிகளாகிய க்ஷத்திரியர்களின் குருதியால் தன் வம்சத்தில் இறந்தவர்களுக்குத் தர்ப்பணம் செய்த பரசுராமனாகத் தோன்றியவனும், குதிரை வடிவில் கேசியை அழித்தவனும், குவலயாபீடத்தைக் கொன்றவனுமான தேவாதி தேவனின் திருப்பாதங்களை அடைய விரும்பும் பக்தர்களே! நெய்தல் மலர்கள் வயலில் வேலை செய்யும் பெண்களின் விழிகள்போல விளங்கவும்,  கமலங்கள் அவர்களது வதனம் போல் பிரகாசமாகவும், இவற்றின் அருகில் உள்ள செவ்வல்லி மலர்கள் அவர்கள் வாய்போல் ஒளிரவும், கழனிகளால் சூழ்ந்துள்ள காழிச் சீராம விண்ணகரத்தை அடைவீராக என்று கூறுகிறார் ஆழ்வார்.

      சத்ருக்களாகிய வீர அரசர்களின் ரத்தத்தாலே தன் வம்சத்தில் மாண்டவர்களுக்கு தர்ப்பணம் செய்த பரசுராமனும்,  கொடிய வாயையுடைய குதிரையாக வந்த கேசி என்னும் அசுரனின் வாயைக் கிழித்தவனும், கம்ஸனது யானையை முடித்தவனுமான தேவாதி தேவனுடைய தாள் பற்ற விரும்பும் அன்பர்களே! வேறுபாடுகளுள்ள பெண்களின் அப்படிப்பட்ட ஒளி பொருந்திய நீண்ட கண்கள் கருநெய்தற் பூக்களைக் காட்டவும், தாமரை மலர்கள் முகத்தொளியைக் காட்டவும் அருகில் உள்ள அல்லி மலர்கள், சிவந்த வாயின் கூட்டங்களைக் காட்டும் நெல் வயல்களால் சூழ்ந்த  காழியிலிருக்கும் சீராம விண்ணகரை நீங்கள் சென்று சேருங்கள் என்கிறார்.

      தனது தந்தையைக் கொன்ற பரசுராமர் க்ஷத்ரியர்களை வேரறுத்துத் தன் பழியைத் தீர்த்துக் கொண்டார். அவர்களது இரத்தத்தைக் கொண்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வித்தார். அவரே ஸ்ரீமந் நாராயணன் ஆவார்.  பெரிய பிராட்டியார், பூமி பிராட்டியார், நீளாதேவி இவர்களின் நாயகனும், அநந்த கல்யாண குணங்கட்கு கொள்கலனாக இருப்பவனும், ஒரு காலத்தில் எல்லா உலகினையும் திருவயிற்றில் வைத்துக் காத்தவனுமான பெருமான் நம்மை நீடுகாலம் அடிமை கொள்வான் என்பது இதன் பொருளாகும்.

 

பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை
வெம்கண் விறல் விராதன் உகவில் குனித்த விண்ணவர்கோன் தாள் அணைவீர் வெற்புப் போலும்
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே     1183

 

மிடுக்கான பார்வையும் சிவந்த முகமுடைய வாலி இறக்கவும், சுபந்திரன், விராதன் ஆகியோரும் அழியுமாறு வில்லை வளைத்த தேவாதி தேவன் திருப்பாதங்களை அடைய விரும்புகிறவர்களே!  மலை போன்ற மாளிகையில் மேலிருந்து நட்புடன் பேசிக் கொண்டிருக்கும், நுண்ணிய இடையை உடைய பெண்களின் தாமரை போன்ற முக ஒளியால் நிலவின் முகத்திலே வருத்தம் உண்டாகப் பெற்ற அழகிய காழிச் சீராம விண்ணகரத்தைச் சென்றடைவீராக என்று பாடுகிறார் ஆழ்வார்.

 சந்திர மண்டலத்தளவும் ஓங்கியுள்ள மாடங்களின் மீது  மாதர்கள் ஒருவர்க்கொருவர் தோழமை கொண்டாடி வார்த்தையாடா நிற்கையில் அவர்களுடைய முகச்சோதியைப் பார்த்துச் சந்திரன் “இவர்கள் முன்னே நாம் பிழைக்கிற பிழைப்பு ஒரு பிழைப்பா! என்று வெட்கி வருந்துகின்றானென்ற, இதனால்  இத்தலத்து மாட மாளிகைகள் மிகவும் ஓங்கி விளங்குகின்றன என்பதும், இத்தலத்து மாதர்கள் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் என்பதும் பெறுவிக்கப்பட்டனவாம்.

      சந்திர மண்டலத்தைத் தொடுமளவு உயர்ந்த மாடங்களின் மீது மாதர்கள் நின்று கொண்டு மகிழ்வுடன் ஒருவருக்கொருவர் தோழமையுடன் உரையாடிக் கொண்டிருக்கையில், அவர்களது முகப் பொலிவினைக் கண்ட சந்திரன் மெல்ல மேகக் கூட்டங்களிலிருந்து சற்றே கண்ணுற்று, இவர்கள் முன்னே நமது பிரகாசமான ஒளி எம்மாத்திரம், இதுவும் ஒரு பிழைப்பா என்று நாணித் தலை குனியுமாம். அத்தகைய பெருமை மிக்க நங்கையர்களைப் பெற்றுள்ள சீராம விண்ணகரத்துப் பெருமானை சென்று சேவிப்போமாக என்பது போன்று பொருள் அமைகிறது.

      

பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த
செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த்                                                                                தெள்கி
மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.     1184

 

ஒப்பற்ற வலிமைமிக்க இராவணனது பத்துத் தலைகளும் புற்றுச் சரிவது போன்று கீழே இற்று விழும்படி யுத்தத்தில் கோதண்டத்தைத் திருக்கரத்தால் வளைத்த மலை போன்ற தோள்களைக் கொண்டவனின் பாதகமலங்கள் சரண் அடைந்து உய்ய விரும்பும் பக்தர்களே! வலம்புரிச் சங்குகள் கடலை வெறுத்து சீர்காழியில் தாழைகள் மலிந்த சுழியினுள்ளே வந்து சேர்ந்து வயல்களை அடையும். அங்கிருந்து மழைநீர் கால்வாய்வழி வீதிகளில் வந்து சேர்ந்து சங்குகளையும், முத்துக்களையும் பெற்றுவிடும் வளம்மிக்க காழிச் சீராம விண்ணகரத்தை சென்றடைவீர்களாக என்று பாடுகிறார் ஆழ்வார்.

கடலிலே வாழ்ந்து கொண்டிருந்த சங்குகளானவை  இத்தலத்தின் நீர்வளத்தைப் பார்த்துக் கடலின் வாஸத்தை இகழ்ந்து விட்டிட்டு இத்தலத்தில் தாழைகள் மலிந்த கழிகளிலே வந்து சேர்ந்து, பிறகு வயல்களிலே சென்று பாய்கின்ற அக்கழிகள் மூலமாக வயல்களிலே வந்து சேர்ந்து, அவ்விடத்தில் நீர்தேங்கி நின்று அது வாய்க்காலாலே ஊரிலே வந்து புகுர அவ்வழியாலே தெருக்களிலே வந்தேறி, அந்நீர் வழிந்தவாறே பின்னைப் போகமாட்டாதே அவ்விடந்தன்னிலே கிடந்து சங்குகளையும் முத்துக்களையும் ப்ரஸவிக்கின்றனவாம்.  இத்தால் நீர்வள நிலவளங்கள் சொல்லப்பட்டன.

      புற்றுகளை சிதைப்பது எவ்வளவு எளிதான காரியமோ அது போன்று வலிமையான இலங்கை வேந்தனின் பத்து தலைகளை எளிதில் கொய்தான் ஸ்ரீராமன். எனவே இராமனின் பராக்கிரமம் இதிலிருந்து தெரிகின்றது. இராவண சம்ஹாரம் செய்து வெற்றி பெற்ற கோதண்டராமனுடைய திருவடிகளைச் சேருமிடம் காழிச் சீராம விண்ணகரமாகும். மனிதனின் மறதி போன்று நாம் உடல் அல்ல ஆத்மா என்பதையும் மறந்து போகிறான். இத்தகைய மறதியைப் போக்க அவனை அடையுங்கள் என்று கூறுவதாகப் பொருள் அமைகிறது.     

      

பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்பணை நெடுந் தோள் பிணை நெடுங் கண் பால்                                                                      ஆம்இன்சொல்
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ
நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.       1185

 

பட்டாடை  அணிந்துள்ள, பாம்பின் படத்தைப் போல் அழகியதும் அகன்றதுமான நிதம்பத்தையும், பவழத்தைப் போன்று சிவந்த அதரத்துடன் மூங்கிலையொத்த தோள்களையும் மான்விழிகளையும், அமுதம் போன்ற பேச்சையுமுடைய, கூந்தலில் சூடிய மலர்களிலிருந்து தேன் வடிந்து மணக்கும் சத்யபாமாவுக்காகத் தேவலோக சோலையில் உள்ள பாரிஜாத மரத்தை வேருடன் பறித்து வந்த பெருமானுடைய திருவடிகளைச் சேர விரும்பும் அன்பர்களே! அணில்கள் கிளைக்குக் கிளை தாவித் தவழ்வதனால் நீண்ட இலைகளைக் கொண்ட கறுத்தப் பாக்குமரக் காய்கள் உதிர்ந்து விழுகின்றன. நீண்ட பலா மரங்களின் காய்களின் கனத்தால் தாழ்ந்த கிளைகளில் நெருங்கியுள்ள பருத்த கனியப்பெற்ற பலாப்பழங்கள் நசுங்கித் தேன் சொரிகின்றது. பெருமானின் அடியைப்பேண விருப்பமுடையார்க்குக் காழிச் சீராம விண்ணரமே கதி என்றும் அதனை அடைவீராக! என்று கூறுகிறார் ஆழ்வார்.    

அணிற்பிள்ளைகள் மரங்களிலே தாவித் திரிவது வழக்கமாகையாலே பாக்குமரங்களின் பணைகளிலே தாவும்போது அந்த உராய்தலினால் பழுக்காய்கள் உதிர்ந்து அவை பலாப்பழங்களின் மேல் “தொப்“  என்று விழ அதனால் அப்பழங்கள் பிளவுற்று உள்ளிருந்து தேன் வெள்ளமிட்டுப் பெருகுகின்றதாம். எம்பெருமானார் இத்திவ்யப்ரபந்த காலக்ஷேபம் நடத்தியருளும்போது இவ்விடத்தில் உள்ள “தெட்ட“ என்பதற்குச் சரியான பொருள் விளங்கவில்லையென்று அருளிச் செய்து வைத்து, பின்பொருகால் திவ்யதேச யாத்திரை யெழுந்தருளும்போது இத்தலத்தின் சோலை வழியே  வந்து கொண்டிருக்க, அங்கே காவல் மரங்களின் மீது சில சிறு பிள்ளைகள் ஏறிப் பழம்பறியா நிற்கையில் கீழேயிருந்த சில பிள்ளைகள், அண்ணே! தெட்டபழமாகப் பார்த்துப் பறித்துப் போடு என்ன  அதை யாத்ருச்சிகமாகக் கேட்டருளின எம்பெருமானார்“ பிள்ளாய்! தெட்ட பழமென்றால் என்ன? அதை யாத்ருச்சிகமாகக் கேட்கப் பழுத்த பழம் என்று இப்பிள்ளைகள் சொல்ல, உடையவரும் திருவுள்ளமுவந்து“ இது ஒரு திசைச்சொல் போலேயிருந்தது“ என்றார்.

     

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடங் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடித்
துறை தங்கு கமலத்துத் துயின்று கைதைத் தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.      1186

 

பிறைச் சந்திரனை தனது நீண்ட திருமுடியில் சூடிக்கொண்ட சிவபெருமானை பரந்தாமன் தன் வலப்புறத்தே வைத்திருந்தான்.  பிரம்மனை நாபிக் கமலத்தில் உண்டாக்கினான். எதிரிகளின் குருதியின் கரை படிந்த வேல் போன்ற விசாலமான திருவிழிகளையுடைய திருமகளை தன் மார்பில் வைத்துள்ளான். இத்தகைய பெருமானின் திருப்பாதங்களைச் சேர வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்களே! வண்டுகள் செங்கழுநீர் பூக்களில் தம் துணையோடு நீர் நிலைகளில் உள்ள தாமரை மலரில் புகுந்து தேனை உண்டு உறங்கி, பின் தாழை மடல்களின் மகரந்தத் தூள்களில் புரண்டு, களித்து, ரீங்கரிக்கும் கழனிகள் சூழ்ந்த இடமான சீராம விண்ணகரத்தை சென்றடையுங்கள் என்கிறார் ஆழ்வார்.

வண்டுகளானவை செங்கழுநீர் மலர்களிலே பேடைகளுடன் கூடிரமித்து அதனுள் உண்டான துவட்சிக்குப் பரிஹாரமாகத் தாமரைப் பூக்களிலே வந்து துயில் கொண்டிருந்து (தேனைப் பருகிக் களை தீர்ந்து) பின்பு தாழை மடற் சுண்ணங்களிலே போய்ப்புரண்டு களிப்பின் மிகுதியாலே இசை பாடுகின்றனவாம்.

      சங்கர நாராயணனாகக் காட்சிதரும் பெருமானை பேயாழ்வாரும் ‘தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்’ என்று திருமலை வேங்கடவனைப் பாடுகின்றார். மும்மூர்த்திகளின் எல்லா வடிவங்களும் பரந்தாமனே என்று ஆழ்வார் எடுத்துக்காட்டுகிறார். ஆகவே வடிவ மாற்றங்களைக் குறித்து வாதம் செய்யாமல் ஸ்ரீமந் நாராயணனே எல்லாம் என்று நினையுங்கள் என்று இப்பாசுரம் பொருள்படுகிறது. 

 

செங் கமலத்து அயன் அனைய மறையோர் காழிச் சீராமவிண்ணகர் என் செங் கண் மாலை
அம் கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முகத் தமிழ் மாலை பத்தும் வல்லார் தடங் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே.     1187

 

நாபிக் கமலத்தில் பிறந்து பிரம்மன் போன்ற வைதிகர்கள் வாழும் காழிச் சீராம விண்ணகத்தில் செந்தாமரைப் போன்ற கண்ணனான பகவானைப் பற்றி அழகிய தாமரைத் தடாகங்கள் உள்ள, வயல்களால் சூழ்ந்துள்ள திருவாலி நாட்டுத் தலைவரும், பக்தர்களுக்கு அருள் புரியும் மாரி போன்றவரும் தீங்கு விளைவிப்போரை தலையெடுக்க விடாமல் அடக்குபவரும், எதிரிகளுக்குச் சிங்கம் போன்றவரும், தேன்மிக்க மலர்கள் அணிந்த கூந்தலையுடைய மாதர்களால் விரும்பத்தகுபவரும், திருமங்கை நாட்டுக்குத் தலைவரும், பகைவரின் எதிரியும், வெற்றி பொருந்திய வேல் படையை உடைய, கூட்டம் கூடி கொண்டாடத் தகுந்த கலியன் இயற்றிய இப்பாமாலையினைப் பக்தியுடன் பாட வல்லவர்கள் கடலால் சூழப்பட்ட இவ்வுலகிற்கு தலைவராவர் என்று கூறுகிறார் ஆழ்வார்.

திருநாராயணனின்  நாபிக் கமலத்தில் பிறந்த பிரம்மனை யொத்த வைதிகர்கள் வாழ்கிற காழி சீராம விண்ணகரத்திலிருக்கும் செந்தாமரைப் போன்ற கண்களையுடைய பெருமானைக் குறித்து அழகிய தாமரைத்  தடாகங்களின் வயல்களால் சூழ்ந்த திருவாலி நாட்டுக்குத் தலைவரும் அருளைப் பொழியும் மேகம் போன்றவரும், தீங்கு செய்யுமவர்களை அமுங்கச் செய்பவரும், சத்ருக்களுக்கு ஸிம்ஹம் போன்றவரும், தேன்மிக்க மலரணிந்த கூந்தலையுடையவர்களுக்கு விரும்பத்தக்கவரும், திருமங்கைக்கு அரசனும் எதிரிகட்கு யமன் போன்றவரும், வெற்றி தரும் வேலையுடையவருமான திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த புலவர்கள் அனுபவிக்கத் தகுந்த தமிழ் இலக்கணத்தோடு கூடின  இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லார் பரந்த கடலால் சூழப்பட்ட உலகத்திலுள்ளோர் அனைவருக்கும் தாங்களே தலைவர் ஆவர் என்கிறார் ஆழ்வார்.

இவ்வூரில் திருமங்கையாழ்வார் திருஞானஸம்பந்தரை வாதில் வென்று அவருடைய வெற்றி வேலைப் பரிசு பெற்றதுடன் "கடியுண்டநெடுவாளை" என்ற ஓர் அழகிய பாடலாலும் புகழப் பெற்றார். நாலுகவிப் பெருமாள் என்ற விருதையும் பெற்றார் என்று ஒரு செய்தியும் உள்ளது.

பகவான் மும்மூர்த்திகளின் வடிவங்களாக இருந்து உலக இயக்கத்தை நடத்துவது, இலங்கையை அழித்து இராவணனின் பத்துத் தலைகளையும் மண்ணில் உருளச் செய்தது, சத்திய பாமாவுக்காக இந்திரனை வென்று பாரிஜாத மலரைக் கொண்டு வந்தது. நப்பின்னை பொருட்டு ஏழு காளைகளையும் அடக்கியது போன்ற தீரச் செயல்கள் நம் முன்னே கொண்டு வரப்பட்டன. இவையெல்லாம் நம் மனங்களைத் தூய்மைப்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட அஸ்திரங்கள் என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

29. திருஅரிமேய விண்ணகரம்


திருமங்கையாழ்வார்                                                                      பெரிய திருமொழி

      

திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத்
     தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
     அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
     தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
     அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.      1238

 

நிலமகளும், திருமகளும் இருபுறமும் நின்று அடியவர்களின் கொடிய பாவங்கள் விலக எப்போதும் அருள்புரிந்து, ஏழுலகத்தவரும் வணங்க, வானுலகில் உள்ளோர் துதிக்க, பகவான் வாழுமிடம் நாங்கூர் அரிமேய விண்ணகரமாகும். இங்குப் புகழ்பெற்ற வைதிகர்கள் வாழ்கின்றனர். செங்கழுநீர் மலர்கள், தாமரைகள், தாழைகள் தடாகங்களிலும், அவற்றின் கரைகளிலும் செழித்து வளர்கின்றன. அழகிய சோலைகள் நிறைந்த இத்தலத்துப் பெருமானை வணங்குவாயாக, மடநெஞ்சமே! என்று கூறுகிறார் ஆழ்வார்.

திருமகளும் மண்மகளும்  இரண்டு பக்கமும் இருக்க  பக்தர்களுக்கு என்றும்  அருள் புரிந்து  கொடிய பாபங்கள்  ஓடும்படி இந்த ஏழ் உலகத்தவர்களும்  வணங்க   நித்யசூரிகள் பூலோகத்தில் வந்திருந்து துதிக்க தகுந்த இடமாய்  பெரும் புகழ்வாய்ந்த  வைதிகர்கள்  வாழ்கின்ற  இடங்களை உடையதாய்  மிகுந்த மலர்களை உடையதாய்  தாழைகளும்,  செங்கழுநீர் பூக்களும்,  தாமரைகளும்  தடாகங்கள் தோறும்  பார்க்கும் இடங்களெல்லாம்  சோலைகள் சூழ்ந்த  ஆகாசம் வரை உயர்ந்து நிற்கும் மதில்களையுடைய அழகிய நாங்கூரிலிருக்கும்  அரிமேய விண்ணகர எம்பெருமானை வணங்கு  மட நெஞ்சே! என்கிறார் ஆழ்வார்.

      இவ்வுலகத்தவர்கள் பெரும்பாலும் குற்றம் புரிந்தவர்களாக உள்ளார்கள். நம் பாவங்களுக்கேற்ப பகவான் தண்டிப்பானே என்று அஞ்சும்போது, சேதநர்கள் எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் பிராட்டியும், பூமிபிராட்டியும், என்றும் பெருமானுடன் உடனிருக்கும் இவர்கள் பெருமானிடம் நம் பாவங்களை எடுத்துரைப்பர். அரிமேய விண்ணகரம் ஹரிர் ஹரதி பாபாநி, என்கிறபடி பாபங்களைப் போக்குவதினால் ஹரி என்கிற பெருமான் நித்யவாசம் புரியும் இடமாகத் திகழ்கின்றது. உண்மையான பக்தி, அன்பு இவற்றைச் செலுத்தி பகவானை வணங்கு நெஞ்சே! என்று கூறுவது போல் அமைகிறது.

      

வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும்
     விறல் ஆழித் தடக் கையன் விண்ணவர்கட்கு அன்று
குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்
     குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில்
என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர்
     ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர்
     அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.        1239

 

மிகுந்த வெற்றிகளைக் கண்ட நரகாசுரனின்  மிடுக்கான வலிமை அழியுமாறு, அவன்மீது எறிந்த சக்ராயுதத்தை திருக்கரத்தில் கொண்டவன். அன்று தேவர்களுக்காக மந்தார மலையை மத்தாக்கி பாற்கடலைக் கடைந்தவன். எனது ரத்தினமே, எனது பரிபூரண அமுதம் வாழும் இடம் நாங்கூர் அரிமேய விண்ணகரமாகும். ஞானமுள்ள அந்தணர்கள் வாழுமிடம். ஏழிசையும், வேதங்களும் கற்ற பண்பாளர்கள், பிரம்மன் வாழ்ந்த இடத்தில் குடிகொண்ட பெருமானை நீ வணங்கு நெஞ்சமே! என்கிறார் ஆழ்வார்.

வெற்றியடையக்கூடிய  நரகாசுரனின்  மிடுக்கு அழிய  வீசி எறியப்பட்ட  வலிய சக்கரத்தைக் கையிலுடையவனாய்  தேவர்களுக்காக அன்று  மந்திர மலையை நட்டு   சப்திக்கும் கடலைக்  கடைந்து  அமுதம் அளித்தவனும்,  சிறந்த மணி போன்றவனும்  அமுதம் போன்றவனும்  கொண்டாடிக் கொண்டு  இருக்கும் கோயில்  தினமும் பெருகி வரும்  பெருஞ் செல்வமுடையவராய்  அழகிய வேதத்தை  நன்கறிந்தவராய்  ஸப்த ஸ்வரங்களும்  அவற்றின் அங்கங்களும்  அறிந்த பெரும்  குணமுடையவர்களாய்,  அன்று உலகம்  படைத்த பிரம்மாவைப் போன்ற  வைதிகர்கள் வாழும்  திருநாங்கூரின்  அரிமேய விண்ணகர  எம்பெருமானை வணங்கு  மட நெஞ்சே! என்கிறார் ஆழ்வார்.

      தான் சென்று போர் புரிந்த இடங்களெல்லாம் வெற்றியடைந்த எம்பெருமான், திருவாழியினால் தாயை புண்படுத்திய நரகாசுரனைக் கொன்றான். துர்வாசரின் சாபத்தால் அரசிழந்த தேவர்களுக்குக் கடல்கடைந்து அமுது எடுத்தவனும், சிறந்தவனும், பரம போக்யனுமாகத் திகழ்கின்றான். தாயைப் புண்படுத்திய அனைவரும் நரகாசுரன்தான். அனைத்து பாவங்களையும் புரிபவர்கள் நரகாசுரர்கள்தான். அவர்களை அழிக்கப் பெருமான் வியூகம் கொண்டுள்ளான். எனவே செய்த பாவங்களைப் போக்க விண்ணகரம் செல்லுங்கள் என்பது இதன் பொருளாகும். சிலர் அறியாமல் பாவம் செய்வார்கள். சிலர் நாம் செய்வது பாவம் என்று அறிந்தே செய்வார்கள். அதனால் அவர்களின் பாவக்கணக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தப்பு செய்தால் அதற்குத் தண்டனை கண்டிப்பாக உண்டு. ஏதாவது ஒரு ரூபத்தில் நாம் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். சிலரோ மரணத்தைவிடக் கடுமையான தண்டனையைக் கூட அனுபவிப்பார்கள். எனவே நம்முடைய பாவக்கணக்கு தீர நாம் விண்ணகர பகவானை அடிதொழுது தீர்த்துக்கொள்ள வேண்டும்.

      

உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம்
     உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன்
     குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட
     பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர்
     அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே    1240

 

தேவர்கள், ஏழு உலகங்கள், ஏழு கடல்கள் ஆகிய அனைத்தையும் ஊழிக்காலத்தில் திருவயிற்றில் அடக்கிய பகவான், யாதவர்கள் மகிழும்படி குவலயாபீடம் என்ற யானையின் தந்தங்களை முறித்து, கம்சனை கீழே தள்ளி அழித்த பெருமான் கோயில் கொண்ட இடம் நாங்கூர் அரிமேய விண்ணகரமாகும்.  அங்குப் புன்னை மரங்கள் பூத்துக் குலுங்கி பசும் பொன்னும், வெண்முத்தும்  போல் ஒளி விடுகின்றன. பலாக்கனிகள் தேன் சொரிய, பாம்பின் இடையும், அம்பின் கண்களையொத்த பெண்கள் மகிழும் இத்தலத்தை அடைவாய் மடநெஞ்சமே! என்று கூறுகிறார் ஆழ்வார்.

பொதுவாக எல்லா ஆழ்வார்களுமே இங்ஙனம் எம்பெருமானின் வெற்றிச் செயல்களையும் வீரச்செயல்களையும் போற்றுவர் என்பதையும் நினைக்கின்றோம். சில சமயம் ஆழ்வார்கள் தாமான தன்மையை விட்டுப் பிராட்டியின் நிலையை ஏறிட்டுக் கொண்டு அகத்துறை அமைந்த பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்யும் அநுபவத்தையும் சிந்திக்கின்றோம். ஆகவே, எம்பெருமானைப் பற்றியே அகத்துறை, புறத்துறைகள் அமைந்த பாசுரங்களாலானதே ‘நாலாயிர திவ்விய பிரபந்தம்’ என்னும் திருமறையாகும் என்ற பொது உண்மையை நினைந்து பரவசப்படுகின்றோம்.

      பிரளயப் பெருங்கடலில் உலகமெல்லாம் அழிந்து போயிருக்க, வேண்டிய காலத்தில் அவை எல்லாவற்றையும் தன் வயிற்றில் அடக்கி, பிரளயம் தீர்ந்தவுடன் உலகினை உமிழ்ந்து, உயிர்களைக் காத்தவன் எம்பெருமான். கம்சனை மஞ்சத்திலிருந்து கீழே தள்ளிக் கிரீடம் சிதற அவனைக் கொன்றான். அத்தகையவன் எழுந்தருளியுள்ள அரிமேய விண்ணகரமானது எங்கு நோக்கினும் புன்னை மரங்கள், அதன் மொக்குகள் முத்துக்கள் போலவும்  மலர்கள் பொன் போல் வழங்கப்பெற்ற அழகிய தலத்தினை சென்றடை என்று நம் மனதைப் பார்த்துக் கூறுவது போல் அமைந்துள்ளது.

        

ஓடாத ஆள் அரியின் உருவம் அது கொண்டு அன்று
     உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி
வாடாத வள் உகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு
     அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர்
சேடு ஏறு மலர்ச் செருந்தி செழுங் கமுகம் பாளை
     செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே
ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர்
     அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.       1241

 

முன்பு போருக்குப் பின்வாங்காத நரசிம்மராய்த் தோன்றி இரணியனைக் கிழித்து பிரகலாதனுக்கு அருள் புரிந்தான்.  அத்தகையவன்  வாழும் ஊர் அரியமேய விண்ணகரமாகும். மல்லிகை, செங்கழுநீர், சுரபுன்னை, செண்பகம் போன்ற மலர்களும், பாக்குப் பாளைகளும் மணம் வீசும்.  அவற்றின் நடுவே கழனியில் கரும்பு ஆலைகளில் வரும் புகையானது மணம் கமழும்.  அத்தலத்து பகவானை நெஞ்சே! நீ சென்று வணங்கு என்று கூறுகிறார் ஆழ்வார்.

முன்பு ஒரு சமயம்  முதுகுக் காட்டி ஓடாத  நரசிம்மமாகத் தோன்றி  அனேக வரங்களைப் பெற்ற  இரணியனைப் பிடித்து அவனை  வளையாத, வலிய  நகங்களால் பிளந்து  அவன் பிள்ளை  பிரகலாதனுக்கு  அருள்செய்தவன்  வாழும் இடம்,  மல்லிகை பூவும்  செங்கழுநீர் பூக்களும்  திரளாகப் பூத்த புன்னைகளும்  அழகிய பாக்கு  பாளைகளும்  மணம் கமழும்  செண்பகங்களும்,  அழகிய சோலைகளின்  நடுவே  கரும்பு ஆலைகளுக்காக ஏறின.  வயலில்  ஆலைப்புகை கமழும்  திருநாங்கூரின்  அரிமேயவிண்ணகர  எம்பெருமானை வணங்கு  மட நெஞ்சே! என்பது ஆழ்வாரின் அருள்வாக்கு.

      இரணியன் தெய்வ நிந்தனை செய்து தூணை எட்டி உதைக்க அதில் தோன்றிய நரசிம்மர் அவனது உடலைக் கிழித்து அழித்தார். பிரகலாதனின் தந்தையால் வந்த எல்லா ஆபத்துகளையும் பெருமான் தீர்த்து வைத்தார். பகவானுக்கு தேவர், அசுரர், மனிதர், கந்தர்வர் என்ற  வேறுபாடு கிடையாது. நற்செயல்கள் புரிந்த அனைவருக்கும் பகவான் உதவுவார். அது போன்று தீவினைகள் செய்பவரை அழிப்பார். நாம் அனுபவித்து வரும் துன்பங்கள்  அனைத்தும் முன்வினைப் பயனால் ஏற்பட்டது. இவை பகவான் நமக்குத் தந்ததல்ல என்ற உண்மையினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

      

கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்விக்
     களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்
     அளந்த பிரான் அமரும் இடம் வளங் கொள் பொழில் அயலே
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும்
     அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்
     அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.        1242

 

பார்த்தவர்கள் மனம் மகிழும்படி, மகாபலியின் யாகப் பூமியில் வஞ்சனை மிகுந்து சிறுத்த வாமன வடிவில் போய் மூன்றடி மண் கேட்டு உலகங்களையும், கடல்களையும் ஈரடியால் அளந்த பகவான் வாழும் ஊர் நாங்கூர் அரிமேய விண்ணகரமாகும். அங்கு வளம் மிக்க தோட்டங்களும், வாத்ய கோஷமும், வண்டுகளின் ரீங்காரமும், வேத முழக்கங்களும் பெண்களின் சிலம்பொலியும், கடலோசையும் சேர்ந்து கேட்கும். இத்தகைய தலத்தை நெஞ்சமே! சென்று வணங்குவாயாக என்று ஆழ்வார் கூறுகிறார்.

கண்டவர்கள் அனைவரும் மனம் மகிழ  மகாபலியின்  வேள்வியில்  கபடமில்லாது தோன்றுமவனாய்  சிறிய வாமனனாய்  மூன்று அடி நிலம் தர வேண்டுமென்று  யாசித்து  ஆகாசமும்  அலை கடலும்  ஏழுலகங்கள் அனைத்தையும்  அளந்த பிரான்  இருக்குமிடம்  வளமுள்ள  சோலைகள் அருகே  ஆகாசத்தில் சென்று   முழங்கும் வாத்ய கோஷங்களும்  வண்டுகளின் ரீங்காரமும்  வேத கோஷங்களும்  நடனமாடும் பெண்களின்  நூபுர த்வனியும்  அண்டப்பித்தில் வரும்  அலைகடலின்  ஓசையும் திகழும்  திருநாங்கூரின்  அரிமேய விண்ணகர  எம்பெருமானை வணங்கு  மடநெஞ்சே! என்பது ஆழ்வாரின் வாக்கு.

      அநுகூலரோடும் பிரதிகூலரோடும் சேர்ந்து யார் பார்த்தாலும் அவர்களுடைய நெஞ்சு கவருமாறு வாமனமூர்த்தியாக யாகபூமியில் எழுந்தருளி மூன்றடி மண்ணை யாசகம் கேட்டார். அதற்கான அவசியம் அவருக்கில்லை. இருப்பினும் அசுரர்களின் வலிமை அதிகரித்தால் மக்கள் துன்பம் கொள்வார்கள். எனவே பகவான் சூழ்ச்சியினால் மகாபலியை வென்று அவனைப் பாதாளத்தில் அழுத்தினார். எனவே நாம் அனைவரும் அசுர குணங்களை அகற்றி, சுயநலத்தை விடுத்து, தூய்மையான மனத்துடன் நம்மைப் பகவானுக்கு காணிக்கையாக்க வேண்டும். அதன்பின் எல்லா நலன்களும் நம்மைத் தேடி வரும் என்பது இதன் கருத்தாகும்.

 

வாள் நெடுங் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை
     மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர
தாள் நெடுந் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என் தன்
     தனிச் சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர்
சேண் இடம் கொள் மலர்க் கமலம் சேல் கயல்கள் வாளை
     செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம்
வாள் நெடுங் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர்
     அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.       1243  

 

வாள் போன்ற கூர்மையான நீண்ட திருக்கண்களையும், வாசமுள்ள மலர்க்கூந்தலையும் உடைய மைதிலியைக் கவர்ந்து சென்ற குற்றத்திற்காக இராவணனின் பத்து தலைகளும், இருபது தோள்களும் விழுமாறு கதையோடு கூடிய வில்லினை வளைத்த தசரதனின் புதல்வன், எனது ஈடில்லா பாதுகாவலன், தேவர்களின் தலைவன் மகிழ்ந்து வாழுமிடம் திருநாங்கூர் அரிமேய விண்ணகரமாகும். பொய்கைகள் நிறைந்து ஓங்கி வளர்ந்த தாமரை மலர்களையும், சேல், கயல், வாளைப் போன்ற மீன்களையும், சம்பா நெற்பயிர்களோடு சேர்த்து பிடித்து அறுக்க அவற்றிலிருந்து செழுமையாக உதிர்ந்த அழகிய முத்துக்கள்  வாள் போன்ற நீண்ட கண்களையுடைய வலைச்சியர்கள் வாரித் திரட்டுகிறார்கள். நாங்கூர் அருகே கடல் உள்ளதால் அலைகளுடன் மீனும் முத்தும் வயலில் சேர அவை மீன்களின் வயிற்றில் புகும். அவை அறுவடையில் வெளிப்பட்டன. அத்தகைய சிறப்பானதொரு தலத்தை அடை நெஞ்சமே! என்று பாடுகிறார் ஆழ்வார்.

நாங்கூர், ஒரு சங்ககால வாழ்விடம். நாங்கூர் குறித்த குறிப்புகள் பட்டினப்பாலையிலும், பொருநராற்றுப்படையிலும் இடம்பெற்றுள்ளன. இடைக்காலத்தில் நாங்கூர் ஒரு நாட்டுப் பிரிவாக இருந்தது. காவிரிப்பூம்பட்டினம் நாங்கூர்  நாட்டின் கீழ் இருந்தது. காவிரிப்படுகைப் பகுதியில்  நாடு உருவாக்கம் போன்ற செய்திகள் தொடர்பாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருநாங்கூர் சமீபத்தில் கடலுள்ளதனால் அக்கடலோரமும் இங்கே வந்து கூடும் அவ்வோதங்களுடனே முத்துக்களும் வந்து சேரும். அவை மீன்களின் வயிற்றினுள்ளே புகும். அவை அறுவடையில் வெளிப்பட்டதென்பர் என்று அண்ணங்கராச்சாரியார் தமது விளக்கவுரையில் குறிப்பிட்டுள்ளார். 

      

தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
     தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான்
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான்
     கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து
     வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர்
     அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.        1244

 

பொல்லாத மனமுடையக் கம்சன் ஏவலால் வஞ்சனையில் திரியும் தேனுகனை கண்ணபிரான் கொன்றொழித்தான். பெண்ணாக வந்த பூதனையின்  உயிரை முடித்தவனாகவும், மன்மதனை மகனாகப் படைத்தவனும், கரிய திருமேனியுடைய எம்பெருமான் விரும்பி இருக்குமிடம் அரிமேய விண்ணகரமாகும். இத்தலமானது அலைகளையுடைய துறைதோறும் முத்துக்களைத் தள்ளி வரும், நாவாலும் மனத்தாலும் மந்திரங்களையும், நான்கு வேதங்களையும் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கங்களையும் கற்று மற்றுமுள்ள கலைகளையும் பயின்று ஓதி பரிசுத்தமான மனமுடைய வைதிகர்களைக் கொண்டதாக உள்ள அழகிய திருநாங்கூரின் அரிமேயவிண்ணகர எம்பெருமானை வணங்கு மடநெஞ்சே! என்கிறார் ஆழ்வார்.

தீய எண்ணங்கள் கொண்ட கம்சனது சதியால் கழுதை உருவில் வந்த தேனுகாசுரனும், பேய்ச்சி பூதனையும் கண்ணனால் கொல்லப்பட்டனர். ஸ்ரீகிருஷ்ண ருக்மணி பிராட்டியின் மகனான பிரத்யும்னனை பெற்ற கரிய திருமேனியான பகவான் உறையும் இடம் நாங்கூர் அரிமேய விண்ணகரமாகும்.  தண்ணீர் அலையெறிந்து துறைகள் தோறும் முத்துக்களை ஒதுக்கி வீசும்.  வேதியர்கள் மனதாலும், சொல்லாலும் பகவானின் வேத மந்திரங்கள், ஆகமங்கள் ஆறு அங்கங்கள் அனைத்தையும் சொல்வார்கள். கலைகளைக் கற்று பஞ்ச மஹா யக்ஞங்களை நடத்தி நிலையான  புத்தியுடன் பொருந்தியவர்களான வைதிகர்கள் வாழ்வார்கள். இத்தகைய சிறப்புமிக்க பகவானின் தலத்தை அடை மனமே என்று கூறுகிறார் ஆழ்வார்.

      

கன்று அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்று அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன்
குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதியொடு மிகப் பயிலும் சோலை
அன்று அலர்வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே    1245

 

கன்று வடிவில் வந்த வத்சாசுரனைக் அழித்தான் கண்ணன்.  கபித்தாசுரன் மேல் விளாம்பழங்கள் உதிரச் செய்த பகவானும் அவனே. பரத்துவம், ஸௌலப்யம், ஸௌசீல்யம் போன்றவை பெருமானின் கல்யாண குணங்களாகும். அத்தகைய கல்யாண குணங்களைக் கொண்டவனும், நீலமேக ஷ்யாமளனான காளமேக நிறத்தவனும், பசுக்களைக் காக்க மலையைக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து யாதவர்களைக் காத்தவனும், காளிங்க வடிவில் அந்த அசுரனை குடக்கூத்தாடி மக்களையும் ஆநிரைகளையும் காத்தவனான எம்பெருமான் மகிழ்வுடன் இருக்கும் இடம் நாங்கூர் அரிமேய விண்ணகரமானது,  கொடிகள் பொருந்திய மதில்களையும், கூடகோபுர மாளிகைகள், மணி மண்டபங்கள், யாகச் சாலைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இங்கு அந்தணர்கள் ஒன்றுகூடித் தொழுவார்கள். பறவைகளின் ஒலியோடு மலர்வனங்களில் அப்போது மலர்ந்த செவ்விப் பூக்களில் தேனைப் பருகி வண்டுகள் ரீங்காரம் செய்யும். அத்தகைய வளமிக்க தலத்தை நெஞ்சே! உனது அசுர குணத்தினை விடுத்து தெய்வ குணத்தினை வளர்க்க நீ அவனை அடைவாய் என்று கூறுகிறார் ஆழ்வார்.

இவ்விரு அரக்கர்கள் கம்சனுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள். இருவரையும் பகவான் எமனுலகத்திற்கு அனுப்பினார்.  தனக்கு விழா எடுக்கவில்லை என்று இந்திரன் கோகுலத்தில் தொடர்ந்து மழை பெய்வித்து மக்களைத் துன்புறுத்தி வந்தான்.  அவ்வமயம் மக்களையும், ஆநிரைகளையும் குடமாடும் கூத்தனாகக் காத்தருளினான். பகவான் மலையையே குடையாகப் பிடித்து அனைவரையும் காத்தான்.  எனவே சுயநலத்தை வெறுத்து பிறருக்காகத் தியாகம் செய்யுங்கள். தெய்வ நிலைக்கு ஒப்பான இக்குணத்தை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆழ்வாரின் நமக்குத் தெரிவிக்கும் கருத்தாகக் கொள்ளலாம்.

 

வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த
     தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க
கஞ்சன் உயிர் அது உண்டு இவ் உலகு உண்ட காளை
     கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து
     வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர்
    அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே!       1246

 

கபட வேஷத்தோடு வந்த பூதனையின் உயிரை உறிஞ்சிக் குடித்தவன், கையில் கிடைத்த தயிரையும் வெண்ணெயையும் அமுது செய்தவன், வலிமை மிக்க கம்சனது உயிரை மாய்த்தவன், ஊழிக்காலத்தில் பிரளயம் கடல் கொள்ளாதபடி உலகங்களை அடக்கிய பகவான் விரும்பும் இடம் நாங்கூர் அரிமேய விண்ணகரமாகும்.  அங்குக் காவிரி நதி, சந்தனம், அகில் ஆகிய மரங்களையும், பொன் துகள்களையும் அடித்துக் கொண்டு வந்து மேக மண்டலத்தைத் தொடுமளவு ஓங்கியுள்ள சோலைகளிலும், வயல்களிலும் நுழைந்து அவற்றுக்கு வளத்தைத் தரும். வேதம் ஓதுவோர் சிறந்த பூக்களைப் பகவானுக்கு சமர்ப்பணம் செய்து கைகூப்பி நின்று ஹரி, உன் திருவடியே சரணம் என்று கூறி வணங்குவர். அத்தகைய சிறப்பான தலத்தை அடை நெஞ்சமே! என்று கூறுகிறார் ஆழ்வார். 

கெட்ட எண்ணத்துடன்  வந்த கொடியவளான பூதனையின்  உயிரினை மாய்த்து  அருகிலிருந்த தயிரை உண்டு,  வெண்ணெயை உண்டு,  வலிமையுடைய கம்சனின்  உயிரை மாய்த்து,   இந்த உலகத்தை் முழுதும் உண்டவன்   விரும்பி இருக்குமிடம்  காவிரிநதி  சந்தன மரங்களையும்,  அகில் மரங்களையும் பொன்னையும் தள்ளிக்கொண்டு வந்து   மேகத்தளவு உயர்ந்த  சோலைகளிலும்  வயல்களிலும் புகுந்து புகுந்து  செழிப்பு உண்டாக்க  வைதிகர்கள்  மலர்களைத் தூவி  அங்குக் கைகூப்பி வணங்கி  ஹரிசரணம் என்று  துதிக்க அழகிய  திருநாங்கூரின் அரிமேய விண்ணகர  எம்பெருமானை வணங்கு,  மட நெஞ்சே! என்கிறார்.

 

 சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை
     செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்
     அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழுங் குன்றை
கன்றி நெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான்
     கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும்
ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து
      உத்தமர்கட்கு உத்தமர் ஆய் உம்பரும் ஆவர்களே.      1247

 

நப்பின்னைக்காகத் தானே சென்று கொடுமை மிகுந்த ஏழு எருதுகளும் மடியும்படி போரிட்டு பின் அவள் அழகிய தோளை அணைத்து மகிழ்ந்த லஷ்மிநாதன் மகிழ்வோடு குடிகொள்ளும் கோயில் நாங்கூர் அரிமேய விண்ணகரமாகும்.  வேதம் பயின்ற அந்தணர்கள், பிரம்மன், சிவன், முருகப் பெருமான் போன்றவர்கள் அழகில் ஒத்திருக்கின்றனர். அத்தகையவர்  வாழுமிடம் இதுவே ஆகும். இத்தலத்து பகவானை கோபக்குறியோடு நீண்ட நெடிய வேலினைக் கொண்ட திருமங்கையாழ்வார் பாடிய பத்து பாசுரங்களையும் பக்தியோடு படிக்க வல்லவர்கள் உலகில் உள்ள உத்தமர்களுக்கெல்லாம் உத்தமர்களாய் வாழ்ந்து பின் நித்யசூரிகளாக இருப்பார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார். மனம் நஞ்சாகும்போது மனிதன் தீய செயல்களைச் செய்கிறான். அதன் பலனாய் பாவங்களைச் சுமக்கிறான். அதே மனம் நற்செயல்களை தெய்வத்தின் துணையுடன் செய்யும்போது பாவங்கள் சரிந்து விழுகின்றன. அத்தகைய உயர்நிலையை அடைய ஆழ்வார் பாசுரங்களைப் பாட வல்லவர்களாக மாற வேண்டும்.

கிருஷ்ணவதார சேஷ்டிதங்களைச் சொல்லுகின்ற பாசுரங்கள் ஐந்தும், நரஸிம்ஹாவதாரம் வாமநாவதாரம், ராமாவதாரம் ஆகிய மூன்றவதாரங்களைப் பற்றிப் பேசுகின்ற பாசுரங்கள் மூன்றும் அர்ச்சாவதாரமான முதற்பாட்டு ஒன்றும், பயனுரைத்த ஈற்றுப்பாட்டு ஒன்றும், ஆகப் பத்துப்பாட்டுகள் என்கை, இரண்டு, மூன்று, ஏழு, எட்டு, ஒன்பதாம் பாசுரங்கள் கிருஷ்ணவதார விஷயங்கள் நான்கு, ஐந்து, ஆறாம் பாசுரங்கள், முறையே, நரஸிம்ஹ, வாமன, ராமாவதார விஷயங்கள் என்பதாகும்.


Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...